
பெரிதினும் பெரிது கேள்!
அயர்ந்த துாக்கத்திலும்
அரை கண் விழித்திரு
வரம் தரும் தேவதைகள்
வந்து வாசல் தட்டலாம்!
கால் ஆட்டியபடியே
கண்ணயர்ந்து துாங்கு
எழுந்து கொள்ளும்
எச்சரிக்கையோடு இருப்பதாக
புறப்பட்டு வந்த தேவதை
புரிந்து கொள்ளட்டும்!
வரும் தேவதைக்கு தேவை
வணக்கம் அல்ல
இணக்கம்!
கைகள் பற்றி
கண்ணியமாய் கேள்
உன் தகுதியை தள்ளி வை
உன்னை நீயே குறைத்து மதிப்பிடாதே!
என்ன வரம் வேண்டும்
என்று கேட்டால்
கேள்... பெரிதினும் பெரிது கேள்!
கேட்கப்படாததால்
பல தேவதைகள், கஜானாக்களை
காலியாக்காமலேயே
திரும்பியிருக்கின்றன!
வரம் கேட்போர்
வரிசையில் காத்திருக்கின்றனர்
வரம் தரும் தேவதையிடம்
கேட்க வேண்டியது
வரம் அல்ல!
கேள்... பெரிதினும் பெரிது கேள்!
எதையும் தர
தயாராய் இருக்கும் தேவதையிடம்
'கஜானாவோடு தேவதையாவது'
எப்படி என்னும் ரகசியத்தை கேள்
அதை ரகசியமாய் அல்ல
ஊர் அறிய கேள்
உன்னை பிறர் அறிய கேள்
ரவுத்திரத்தோடு கேள்
ஏனெனில்,
நீ போராடும் இடம் போர்க்களம் அல்ல
வாழ்க்கை!
வே.புவனா, குன்னுார்.