PUBLISHED ON : ஆக 11, 2019

பல்லாண்டு பாடுங்கள்!
வெள்ளிப் பனி இமயம்
வீர குமரி முனை
அள்ளக் குறையாத
அழகு வள திருதேசம்!
பின்னிப் பிணைந்திருக்கும்
பிரமிப்பு கலாசாரம்
தன்நிகர் இல்லாத
தனி தேசம் நம் தேசம்!
உண்ணக் கொடுத்துதவி
உறங்கும்போது தலை தடவி
மின்னும் உடை நல்கி
மென்மை தரும் இத்தேசம்!
தன்னை மதித்தவருக்கும்
தவறுதலாய் நடந்தவருக்கும்
அன்னை போல், அன்பு காட்டி
அரவணைக்கும் ஒரு தேசம்!
அடிமை வயப்பட்டு
அடிதடிகள் பல பட்டு
விடியலை கண்டதொரு
வெற்றி திருத்தேசம்
முந்திய தலைமுறையின்
முயற்சியால் பெற்ற கனி
இந்த தலைமுறைக்கு
இனிக்குமோ, கசக்குமோ!
அன்னை தேசமிதை
ஆராதித்துப் போற்றுவதே
முந்தைய தலைமுறைக்கு
முறையான கைமாறு!
அடுத்த தலைமுறையும்
ஆனந்தமாய் இந்த
சொந்த திருநாட்டில்
சுகித்திருக்க வேண்டாமா?
சொல்லி வளர்த்திடுங்கள்
சுதந்திர பாரதத்தின்
சொல்லில் வடிக்கவொண்ணா
சுதந்திரப் பெருமையை!
அன்னை பாரதத்தின்
அன்னத்தை புசித்த கடன்
என்ன சொல்லி பாடினாலும்
ஈடுசெய்ய முடியாது!
உலக நாடுகளின் ஒப்பற்ற திலகமாக
என்றும் இத்தேசம் இருந்து செழிப்பதற்கு
அழகு பிள்ளைகளே,
அணிவகுத்து நின்றபடி
பாரதத்தை வாழ்த்தி
பல்லாண்டு பாடுங்கள்!
பிரேம்குமார், உடுமலை.
