
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நனைவோம் மழையின் நீரில்!
குளங்களை மூடி விட்டு
குடியிருப்புகளை
எழுப்பிக் கொண்டோம்
இன்று, குடம் நீருக்காய்
ஓடிக் கொண்டிருக்கிறோம்
வீதியெங்கும்!
மேகங்களை தருவித்து
மழை தரும் விருட்சங்களை
வெட்டி சாய்த்து விட்டோம்!
சாய்த்த இடங்களில்
வேண்டும் மட்டும் வெட்டினாலும்
கிடைப்பதே இல்லை
சொட்டாகக் கூட நீர்!
நதி பாயும் பாதையை அடைத்து
நமக்கானதாய் எடுத்துக் கொண்டோம்
இன்று, நாவறண்டு தவிப்பது
நாம் மட்டுமல்ல
நம்மை சார்ந்த உயிர்களும் தான்!
அறிவியலால்
ஆயிரம் கண்டறியலாம் நாம்
ஆயினும், கண்டறிய இயலுமா
இன்னொரு ஆகாயத்தை...
அங்கே அலையும் மேகத்தை?
இருக்கும் குளத்தை, நதியை
மரங்களின் நிழலில்
ஒதுங்க விட்டு...
பிறகு நனைவோம் நாம்
மழை நீரில்!
இ.எஸ். லலிதாமதி,
சென்னை.