
பாதுகாப்பு...
தினம் தினம் வரும்
விபத்து செய்திகள்
மனதை வருத்துகின்றன
பதற வைக்கின்றன!
மேம்பாலத்திலிருந்து
பேருந்து விழுந்து
இரண்டு பேர் பலி,
முப்பது பேர் படுகாயம்...
அரசு பேருந்தும்
வேனும், நேருக்கு நேர் மோதி
ஆறு பேர் சாவு,
பலர் கவலைக்கிடம்...
சாலையோரம் நின்றிருந்த
சரக்கு லாரி மீது
சுற்றுலா பேருந்து மோதி,
பத்து பேர் மரணம்...
மது குடித்து
கார் ஓட்டி, அப்பாவி
நடைபாதை வாசி மீது ஏற்றி
கொல்கிறாள் ஒரு பெண்...
நகை பறிக்க முயன்று
வாகனத்தை தள்ளி விட்டு
ஒரு பெண்ணை பலியாக்குகிறான்
கொள்ளைக்காரன்...
கடற்கரை சாலையில்
கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டி
விபத்துக்குள்ளாகின்றனர்
காதலர்கள்...
அதிக விபத்துகளுக்கு காரணம்
குடி என்றாலும், தடுக்க முடியவில்லை
ஆண்டுதோறும், ஒன்றரை லட்சம் பேர்
நாட்டில் விபத்தால் இறக்கின்றனர்...
மனித உயிர்கள் பலியாவதை தடுக்க
வாகன ஓட்டிகளை காக்க
தீவிர நடவடிக்கை...
தீர்வு, தண்டனை... தடுப்பு என்ன?
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின்
வலியை எப்படி உணர்த்துவது -
முன்னும் பின்னும் பாதுகாப்புடன்
வரும் ஆள்பவர்களிடம்!
சொல்கேளான் ஏ.வி. கிரி, சென்னை.