
வாசலில் காத்திருக்கும் வசந்தம்!
அகல் விளக்கை ஏற்றி வை
அறையின் இருள் விலகட்டும்
மனக்கதவை திறந்து வை
வசந்தம் வந்து வாழ்த்தட்டும்!
பதினெட்டு புராணங்களை
பலமுறை படி
புரியாத புதிருக்கு
விடை கிடைக்கும்!
மெய்யா... பொய்யா...
சிந்தனையை துாண்டி விடு
தியானத்தின் வாசலுக்கு
வழி காட்டும்!
இலக்கு எது
முடிவெடு
நின்றாலும், நடந்தாலும்
உணர்விலும், உறக்கத்திலும்
இலக்கையே சிந்தித்திரு
கனவு நனவாகும்
இலக்கு எளிதாகும்!
உள்ளிருக்கும் ஆன்மாவை
தட்டி எழுப்பும்
சூட்சுமம் தெரிந்தால்
முக்காலத்தையும் உணரும்
ஞானியாகலாம்!
எத்தனை ஆண்டுகள்
வாழ்ந்து என்ன பயன்
இனியாவது விழித்துக்கொள்
ஆசை, பொறாமை, கோபம்
மூன்றையும் மறந்து விடு!
மணி, மந்திரம், மூலிகை
மூன்றையும் வைத்து
அண்டத்தையும்
பிண்டத்தையும்
இணைக்கும் வித்தையை
செய்தவர்கள் சித்தர்கள்!
உடல், உயிர், மனம், ஆன்மா
ஒன்றுக்குள் ஒன்று என்றாலும்
ஒன்றிலிருந்து ஒன்றை
பிரிக்கும் ஆற்றல்
எப்படி வந்தது அவர்களுக்கு!
மனம் செய்யும் மாயம்
எதை விரும்புகிறாயோ
நினைத்துக் கொண்டே இரு
நினைத்த பொருள்
கையில் வரும் வரை!
அலை கடலில்
எங்கோ வரும் கப்பல்
கண்ணுக்கு தெரிவது போல்
அலைபாயும் எண்ணங்களில்
நினைவலைகளை கூர்மையாக்கி
ஒரு புள்ளியில் நிறுத்து!
உன்னை சுற்றி வீசும்
வசந்தத்தை மறந்து
இனம் புரியா
இன்ப கடலில் நீ
மிதப்பாய்...
மனதை வசப்படுத்து
வாழ்வின் சிக்கல்களுக்கு
வழி கிடைக்கும்!
பாரதி சேகர், சென்னை.

