
கல்வித் திருநாள்!
ஜூலை 15, கல்வி தினம்
கல்வி
ஒரு அதிசய கடல்
புயல்கள் உருவாகாது
அலைகள் இல்லாத
அமைதி கடல் அது தான்!
இதன்
தண்ணீர் உப்பு கரிப்பதில்லை
ஆனாலும்
தாகம் தீர்க்கும்!
அதில் பயணிக்கும் கப்பல்கள்
தேடல்கள்...
பயணிக்கையில்
அவை
ஏற்றிக்கொள்ளும் சரக்குகளை
இறக்குவதே இல்லை!
ஆரம்பத்தில்
படகுகளாய் பயணிக்க துவங்கி
கால வளர்ச்சியில்
கப்பல்களாய்
உருமாறும் அதிசயத்தை பார்க்கலாம்!
இங்கு
கப்பல்களே
முத்து குளிக்கின்றன
இந்த கப்பல்களுக்கு
கரை காட்டும்
கலங்கரை விளக்குகள்
ஒன்றல்ல, இரண்டல்ல
ஓராயிரம்!
கல்வி கடலில்
முத்தெடுத்த கப்பல்களே
கலங்கரை விளக்குகள்
இந்த விளக்குகள்
ஞானம் தேடும் கப்பல்களுக்கு
கடலின் கரை காட்டுவதை விட
கடலின் ஆழம் காட்டியே
அதிசயிக்க வைக்கின்றன!
இங்கே
கடல் எப்போதும்
அமைதியாய் இருக்கும்
சலசலப்பு அலைகளை
சில சமயங்களில்
கப்பல்கள் உருவாக்கும்!
அந்த
அலைகளின் மோதலில் கூட
அமிழ்தம் பிறப்பெடுக்கும்
அது
அறிவுக்கு ஜீவன் விருந்தாய்
இருந்து பசியாற்றும்!
இந்த அதிசயங்களை
ஆராதிக்கவும், ஆமோதிக்கவும்
'கல்வித் திருநாள்'
நமக்கு கிடைத்த
கவுரவத் திருநாள்!
க. விஜயலட்சுமி, கடம்பூர்