
விழித்தெழு இளைஞனே!
விழித்தெழு இளைஞனே
வாழ்க்கையின் உனக்கான பந்தயம்
துவங்கப்பட இருக்கிறது!
விழுந்து, எழுந்து, விளையாடி
பருவத்தில் காதல் வயப்பட்டு,
கல்யாணம், குழந்தை என்று
அன்றாட வாழ்க்கையில் உழன்று
மூப்பெய்தி மரித்துப்போக மட்டுமா நீ?
இன்பத்தில் மகிழ்ந்து
துன்பத்தில் தொழும்
மூடப் பழக்கத்தை மூட்டை கட்டி வை!
நீ விழித்துப் பார்க்கையில்
உன் கண்ணுக்கெட்டிய துாரத்தை
உன் விழித்திரை செல்லும்
கண்ணுக்கெட்டாத துாரத்தையும்
உன் அறிவுத்திறன் சொல்லும்!
பொறியியல் படித்திராத பறவைகள்
தனக்கென கூடு கட்டின மாதிரி...
மருத்துவம் படித்திராத நச்சுப் பாம்பும்
தானே மருந்தாயும்
ஆகிப்போகிற மாதிரி...
முடிசூடா சிங்கங்கள் காட்டிற்குள்
தனக்கென அரசாங்கம்
நடத்துகிற மாதிரி...
உன் பிறப்பின் அர்த்தத்தை தேடு
இந்த உலகத்தின் பாடத்தை
நீயே கற்றுக்கொள்!
உன் தாயின் கர்ப்பம்
பொதியினை அல்ல...
பொன்னை தரித்ததாய் இருக்கட்டும்!
ஒரு தந்தையிடமிருந்து
கணையாய் புறப்பட்டவன் தான்...
ஒரு விந்தை மனிதனை
பெற்றதாய் இருக்கட்டும்!
உன்னிடத்தில் தான் அப்துல்கலாம்
எதிர்காலத்தையே தேடிக் கொண்டிருந்தார்
குறிக்கோள் இல்லாத அம்பாய்
குறை பிரசவம் ஆகிவிடாதே!
உன்னால் உலகம் செழித்த கதையை
ஊரார் சொல்ல வேண்டும்
இவ்வுலகம் வெல்ல வேண்டும்!
நாளைய உலகம் என்றில்லை
விடிந்த இன்றைய பொழுதும்
உனக்கானதாய் இருக்கட்டும்!
மண்ணிற்கு நீ உரமாகும் முன்
நெருப்பிற்கு நீ விருந்தாகும் முன்
முயற்சி என்னும் மூலதனத்தால்
முகவுரை எழுது!
நுாறு இளைஞர்களை கேட்ட
விவேகானந்தராய்
வாழ்க்கையின் உனக்கான பந்தயம்
துவங்கப்பட்டு விட்டது
விழித்தெழு இளைஞனே!
செ. தெய்வமணி, அருப்புக்கோட்டை.

