PUBLISHED ON : ஆக 16, 2020

ஆக., 22 - சென்னை தினம்!
பல்லாண்டு வாழ்க!
பதின்ம வயதிலிருந்து - இந்த
அரை நுாற்றாண்டு காலம்
என் உயர்வு தாழ்வுக்கு
உறுதுணையான
உற்ற நண்பன் நீ!
அலை கடல் ஓரம்
வாழ்க்கைக்கு அச்சாரமிட்டு
நம்பிக்கை நாற்றை
விதைத்தவன் நீ!
உன்னிடம் தஞ்சமடைந்தோர்
வீணாய் போனதே இல்லை...
சாதனையாளர்களாய்
மிளிர வைத்த
மித்ரன் நீ!
உனக்கு வரலாறு ஏதுமில்லை
ஒண்ட வந்தவர்களின் கூடாரம் - என
எகத்தாளம் பேசியே
வீணாகி போயினர் பலர்...
நம்பிக்கை வைத்தவர்களை
ஏற்றம் காண
வித்திட்டவன் நீ!
உன் சரித்திர சாதனை
பக்கங்களை அறிந்த
என்னை போன்றோரின்
கலங்கரை விளக்கம் நீ!
எத்தனை எத்தனை இடர்கள்
இன்னும் இருக்கிறது அழிவு - என
காலம் எள்ளி நகையாடினாலும்
நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும்
கம்பீரமானவன் நீ!
நான்கு திசைகளிலும் - உன்
கரங்களை நீட்டி
வாழ்க்கைத் தேடி
வந்தோரை அரவணைக்கும்
ஆபத்பாந்தவன் நீ!
'மஞ்சா பை' சகிதம் வந்தவர்களை
'அமெரிக்கன் டூரிஸ்டர்'
ஏந்த வைத்த
சுமைதாங்கி நீ!
'உயர்வு பெற வேண்டுமா...
வாய்ப்பை உருவாக்கிக் கொள்...'
- சொன்னார் பெர்னாட்ஷா...
நீயோ, வாய்ப்பு புதையல்
அவரவர் விரும்பியதை
அள்ளித் தந்த
புரவலன் நீ!
அண்டி வந்தவர்களுக்கு
ஆத்ம நண்பன்
அழிக்க வந்தவர்களுக்கோ
'அனக்கோண்டா!'
வள்ளுவர், வள்ளலார்
ஞானசம்பந்தர், பாரதியார் - இப்படி
உன்னில் கலந்தவர்களால்
உலகுக்கு ஒளிவிளக்கானாய் நீ!
உனக்கு ஒரு சீரழிவு என்றால்
சீறி எழ மாட்டோமா...
தாங்கிப் பிடிக்க
லட்சோப லட்ச கரங்கள்
நீட்ட காத்திருக்கின்றன!
விழும்போதெல்லாம்
மீண்டெழும் யுக்தி அறிந்தவன்...
என்றுமே நட்சத்திரமாய்
ஜொலிக்கும் துருவன் நீ!
எனதருமை சென்னையே
வாழிய நீ பல்லாண்டு!
செல்வி நடேசன், சென்னை.
