PUBLISHED ON : ஜூன் 05, 2011

மன்னிப்பு!
* உன்னைக் கரம் பற்றிய
நாள் முதலாய்
என் வாழ்க்கைத் தரம்
உயர்ந்தது!
* கண் போல் என்னையும்,
பிள்ளைகளையும்
காக்கிறாய்...
அன்பால் அனைவரையும்
ஈர்க்கிறாய்!
* முகமறிந்து நடக்கிறாய்...
தும்மல் வந்தாலும்
துடிக்கிறாய்...
துவளும் போது
தோள் கொடுக்கிறாய்!
* பசி வந்து பார்த்ததில்லை
அழுக்காடை அணிந்ததில்லை
நோய் வந்து துடித்ததில்லை
தாய் மனம் கோணியதில்லை!
* பேரன் - பேத்தி
எடுத்த பின்னும்
கத்துவதையும்,
உன்னைத் திட்டுவதையும்
விடாத என்னிடம்...
* மந்திரியாய், நண்பனாய்
ஆசானாய், தாதியாய்
இன்றளவும் நம் இல்லறத்தில்
இனிமை சேர்க்கிறாய்!
* இதுவரை, ஒரு நாள் கூட
உன்னைப் பாராட்டியதில்லை
போற்றியதில்லை, புகழ்ந்ததில்லை...
மதித்ததில்லை, வாழ்த்தியதில்லை!
* எல்லாவற்றிற்கும் சேர்த்து
உன்னிடம் மன்னிப்புக்
கேட்டுக் கொள்கிறேன்...
உன் காலைத் தொட்டு
நீ தூங்கும் போது...
உனக்குத் தெரியாமல்!
— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.
