
இருள் வாழ் இனம்...
மண் புழுக்களுக்கு
மருந்தடித்துவிட்டு
மனக்கவலையில் இருக்கிறேன்
மகசூல் இல்லையென்று!
குளங்களில்
குப்பைகளை கொட்டிவிட்டு
குழப்பத்தில் இருக்கிறேன்
குடிக்க நீர் இல்லையென்று!
தெருக்களில்
கற்களை பதித்துவிட்டு
பற்களை கடிக்கிறேன்
பாதங்கள் சுடுகிறதென்று!
கட்டப்பஞ்சாயத்துக்கு
கல்லறை கட்டிவிட்டு
காத்துக் கிடக்கிறேன்
கறுப்பு கோட்டுகளின் தீர்ப்புக்கு!
நரிக்கூட்டத்துக்கு
வரி கட்டிவிட்டு
பரிதாபத்தில் இருக்கிறேன்
பரிபாலனம் சரியில்லையென்று!
ஜாதி, மதங்களுக்கு
சந்தனம் பூசிவிட்டு
சங்கடத்தில் இருக்கிறேன்
நந்தவனம் நாறுகிறதென்று!
நலிந்தவர்களுக்கு
நன்மை செய்துவிட்டு
நாதியற்று இருக்கிறேன்
நல்லதுக்கு காலமில்லையென்று!
ஆம்...
வெள்ளி நட்சத்திர வீதிகளில்
விளக்குகளை அணையவிட்டு
இதயத்தை தொலைத்து
இருளில் நிற்கும் இனம் நான்!
நலம் தரும் என்ற
நஞ்சு கலந்த நாகரிக
கால மாற்றத்தின் கட்டாயத்தை
கை கட்டி கடந்து போகிறேன்!
நாளைய
கதிரவனின் காலைப்பொழுது
இருட்டு சமுதாயத்திற்கு
வெளிச்ச கதிர்களை வீதியெங்கும்
வீசும் என்ற நம்பிக்கையில்!
க. அழகன், விருதுநகர்.