PUBLISHED ON : ஜன 09, 2022

வரவேற்போம் தை பிறப்பை...
தமிழ்த்திரு நாட்டின்
தனிப்பெருந் திருநாள்
பொங்கல் திருநாள்!
பொங்கல் -
நம் அடையாளம்
நம் கலாசாரத்தின்
ஆணி வேர்!
உழவர்களுக்காக
விழா எடுக்கும்
ஒரே மண்
நம் மண் தான்!
ஒவ்வொரு மனிதனும்
உண்ணும் உணவுக்கு
நன்றி சொல்லும் நாள்!
நாம் பொங்க போவது
சர்க்கரை பொங்கல் மட்டுமல்ல -
சபத பொங்கலாகவும் அமையட்டும்!
மீண்டும் ஒரு
வரலாறு படைக்க
வரவேற்போம் தை பிறப்பை...
மக்கள் மங்கல வாழ்வு பெற
நம் திருநாட்டில் இனி
ஏழ்மையும், தாழ்மையும் நீங்க
வளமையும், உயர்வும் பெற
உறுதி எடுப்போம்!
மக்கள் நலமுறவும்
உடல் நலம் பலமுறவும்
ஞானமும், கல்வியும் சிறப்புற
புது வசந்தம் எங்கும் மிளிர
கைக் கோர்ப்போம்!
மத வெறி, நிற வெறி நீங்க
சத்திய சன்மார்க்கம்
தரணியில் தங்க
உழைத்திடுவோம்!
செம்மையும், இன்பமும்
நாட்டில் கொழிக்க
தானிய கதிர் வளம் குவிய
புது வளம் எங்கும் பெருக
உழவை போற்றுவோம்!
சர்க்கரை பொங்கலும்
கன்னல் கரும்பும்
உற்றாரும் சுற்றாரும் கூடி சுவைக்க
பொங்கட்டும் மங்கல பொங்கல்...
வாழிய பொங்கல் வாழிய உலகம்!
— செல்வி நடேசன், சென்னை.
