PUBLISHED ON : மே 08, 2022

சொல்லுதாயி என செல்லத்தாயி!
மே 8, அன்னையர் தினம்
அம்மா
உன் முந்தானை பிடிச்சு முகம் துடைச்சதுல
முல்லைப்பூவின் வாசம் மறந்து போச்சு
நீ ஊட்டி விட்ட கைப்பிடி சோறுல
கவலையெல்லாம் காத்தா பறந்து போச்சு!
உன் விரலு பிடிச்சு நடை படிச்சதுல
உச்சி வானம் மெய்மறந்து போச்சு
நீ பூமியில நட்டு வச்ச நாத்து வாசத்துல
சத்தியமா சாமி கூட சரணடைஞ்சு போச்சு!
உன் பாதம் பட்ட வாசல் முற்றத்துல
வானம் கூட வேதம் படிக்குமே தாயி...
நீ நின்னு நிமிர்ந்து நடந்தா நிலவிளக்கு
தானும் கண்ணு பட்டுப்போகுமே தாயி!
பட்ட மரம் எட்டப் பார்த்தாலே
படபடத்துப் போவாயே எந்தாயி
பட்டினி வயிறு பார்த்தா படுத்துறங்க
ஒம் பார்வைக்கு பலமேது தாயி!
ஓங்கண்ணுக்குள்ள கருவிழியா
நான் காட்சி தரணும் எந்தாயி
எந்த பகவானுக்கு படையல் போடணும்ன்னு
சொல்லு தாயி... என் செல்லத்தாயி!
உன் தோளு மேல துாங்கி எழுந்ததில
துாளி ஆட்டமும் தோத்துப் போச்சு
நீ விதைச்சு விட்ட வித்துல விருட்சமும்
வெள்ளிக்காசா விளைஞ்சிருச்சு!
ஒம் புன்னகை பார்த்து பூவானம் சிவக்கும்
மண்ணிற்கும் மரமிற்கும் ஓங்குணமிருக்கும்
நீ அம்மி அரச்சா வாசம் ஆகாசத்த துாக்கும்
உன் அன்ப நினைச்சா
பாண்டவர் பாசம் தோக்கும்!
உன் சேல தொட்டிலில் ஒருவேளை துாங்க
எமன் கூட ஏங்கி கிடப்பான் தாயி
நீ தொட்டில் கட்டி தாலாட்டு பாடினா
தமிழ் கடவுளும்
வந்து நிப்பான் தாயி!
பொம்மைகள் புதையுண்டாலே
பொங்கி அழுவாயே எந்தாயி
உன் பிள்ளை பிரிஞ்சா ஓங்கண்ணீரு
ஓடி நிற்க உலகத்தில இடமேது தாயி!
உன் கல்லறையிலும் நான்
கருவா உருத்தரிக்கணும் எந்தாயி
எந்த கடவுளிடம் கையேந்தணும்ன்னு
சொல்லு தாயி... என் செல்லத்தாயி!
அ. ரேவந்த், எர்ணாகுளம், கேரளா.
