PUBLISHED ON : மே 15, 2022

காலம் போகும் பாதை!
அம்மாவின் கருவறை எனினும்
அனுமதிக்கப்பட்ட நாள் வரை தான்
அங்கே உறங்குவதும்-
அவள் வாயிலாய் நாம் உண்பதும்!
அப்பாவின் கரங்கள் எனினும்
குறிப்பிட்ட காலம் வரை தான்
அங்கே தவழ்வதும்-
தோளில் ஊஞ்சலாடி மகிழ்வதும்!
கல்லுாரி- படிப்பு, -வேலை என்று
வாழ்க்கையை ஒரு கோடு போட்டு
இழுத்துச் செல்கிறது காலம்!
காதல்- திருமணம்-, குழந்தை
அதுவும் காலம் நிர்ணயித்த
கணக்குகளுக்குள்
முடித்தாக வேண்டிய
கட்டாய வாழ்க்கை நமக்கு!
கடமைகள் முடிக்கவும்
முடிக்காத கடமைகளுக்காக வருந்தவும்
அதற்கும் மூலையில்
துளிக் காலம்
நமக்காகவே முடங்கிக் கிடக்கும்!
போகிறேன் என்றாலோ
போக மாட்டேன் என்றாலோ
காலம் எந்தக் கருணையும் காட்டுவதில்லை
அது--
தான் நினைத்தபடிதான்
நடக்கிறது, நகர்கிறது
அனைத்தையும் நடத்துகிறது
காலம் அழைத்துப்போகும் பாதையில்
நாம் போய்க் கொண்டிருக்கிறோம்!
இ.எஸ்.லலிதாமதி,
சென்னை.
