
காதல் ஒரு கண்ணாமூச்சி!
* யூகித்துக் கிடப்பதே
காதலின் சூத்திரமாய் போவதால்
காதலும் கண்ணாமூச்சி
விளையாட்டாகிறது!
* இதில் வேடிக்கை என்னவென்றால்...
காதலே நம் கண்களை மறைத்து
நம்மை விளையாட விடுவது தான்!
* திசையற்றுத் திரிகையில் தான்
உணர்கிறோம்
கண்களை மூடி விளையாட
ஆரம்பித்ததன் விளைவை!
* வெற்றியடைய வேண்டிய வேட்கையில்
இன்னும், இன்னும் யூகங்கள்
வியூகங்களாகி தேடச் சொல்கிறது!
* கண்டு பிடித்தோம் எனும் மகிழ்வில்
மனம் திறந்து பார்த்தால்
காதலி கானலாகிட ஏமாறுகிறோம்!
* அவர்கள் இதயத்தை தொட்டு விடுவோம்
என்று துரத்திச் சென்றபின் - காதல்
கனவாய் போவதால் வருந்துகிறோம்!
* எவ்வளவு தூரம் நெருங்கிச் சென்றாலும்
போக்குக் காட்டி மறைவதால் —
விளையாட்டை
தொடர முடியாது ஓய்ந்திடுகிறோம்!
* விளையாட்டை ஆரம்பித்தவர்களோ
முடித்து வைக்க விரும்பாமல்
நம்மை மட்டும் தொடர வைத்து
ரசிக்கின்றனர்!
* கண்ணாமூச்சியில் தோற்றபின் தான் புரிகிறது...
அவர்கள் விளையாட வரவில்லை
வேடிக்கை பார்க்கத்தான் என்று!
— ரத்தின மூர்த்தி, திருப்பூர்.