PUBLISHED ON : நவ 13, 2022

அ நிறம் | அளவு
நவ., 14 - நேரு பிறந்தநாள்
ஒவ்வொரு குழந்தையும்
நாளைய மனித இனத்திற்கான
வீரிய வித்துக்கள்!
தேசங்களால் பிளவுபட்டாலும்
அத்தனைக் குழந்தைகளுமே
பரிசுத்த உள்ளம் படைத்தவை!
அவர்களின் குரலுக்கு
மதிமயங்கிக் கிறங்காதவர்
ஒருவருமே உலகிலில்லை!
புதிது புதிதாகக் கேட்டிடும்
கேள்விகளால் நம்மை அவர்கள்
புதுப்பிக்கத் தவறுவதே இல்லை!
சக குழந்தைகளுடன்
அறியாமலேயே சண்டையிட்டு
சடுதியில் சமாதானமாவர்!
கிடைத்தது எதுவாகினும்
யாரோடும் பகிர்ந்து கொள்ளும்
பாடத்தைக் கற்பிப்பர்!
பகைமை உணர்வு தெரியாது
பொறாமை குணம் கிடையாது
கலப்படமற்றது அவர்கள் புன்னகை!
கிடைப்பதற்கரிய வரமாக
வந்து பிறந்த குழந்தைகளை
வதைக்காமல் கொண்டாடுங்கள்!
சி. அருள்மொழி, கோவை.
