தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு—

நான் 26 வயது பெண். மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவள். தற்போது ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன். கூடப்பிறந்தவர்கள் இருந்தும் பயனில்லை. என் ஒரு சகோதரி மட்டும் எனக்கு உதவினாள். நான் ஒன்பதாவது படிக்கும்போது அந்த சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என் மாமா. நானும் மறுப்பு சொல்லவில்லை. அப்போது வெளி உலகமே எனக்கு தெரியாது. வெகுநாள் தொடர்ந்தது பழக்கம்.

தற்போது தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன் நான். கடந்த இரண்டு வருடமாக ஒருவரை மனதார விரும்புகிறேன். முதலில் நட்பாக தொடங்கிய பழக்கம், காதலாக மாறிவிட்டது. மிகவும் நல்லவர் அவர். எனக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி இருக்கிறார்.

அவருடன் பழகியதில் இருந்து, என் மாமாவை நெருங்கவிடுவதில்லை நான். என் அக்காவிற்கு துரோகம் பண்ணுவதுபோல் தோன்றுகிறது.

நல்ல பிள்ளையாக இப்போதுதான் நடந்து கொண்டிருக்கிறேன். இது மாமாவிற்கு பிடிக்கவில்லை.

'நீ அவனுடன் பழகியதால்தான் என்னை வெறுக்கிறாய்...' என்று தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டார்.

'நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது...' என்றும், 'எது எப்படி ஆனாலும் சரி, உன் மனதை மாற்றிக்கொள்...' என்றும் என்னை கட்டாயப்படுத்துகிறார்.

அதில் எனக்கு விருப்பமில்லை. நாங்கள் காதலிப்பது என் காதலர் வீட்டிற்கு இன்னும் தெரியாது; என் வீட்டிலும் தெரியாது. காதலர் வீட்டில் ஒரு பெண்ணால் சிறிய பிரச்னை ஆகிவிட்டது. ஆதலால் எங்கள் விஷயம் பற்றி பேசமுடியாது போயிற்று என்கிறார். இவர், பெற்றோருக்கு தெரியாமல் ஏதாவது செ#தால் அவர்கள் உயிருடன் இருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். ஆதலால், இவர் பயப்படுகிறார்.

'அந்த பெண்ணின் பிரச்னை நடக்காவிட்டால், நான் பேசியிருப்பேன்...' என்று கூறுகிறார் இவர். அந்த பெண் இவரை லவ் பண்ணினாள். ஆனால், இவர் அவளை விரும்பவில்லை; அது எனக்கும் தெரியும்.

மற்றொரு பிரச்னை, நான் வேறு ஜாதி; காதலர் வேறு ஜாதி. அவர்கள் வீட்டில் கண்டிப்பாக வேறு ஜாதிப் பெண்ணை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறுகிறார். மேலும், நான் வேற யாரையாவது திருமணம் செய்து நன்றாக இருக்க வேண்டுமாம். அவர் திருமணம் செய்ய மாட்டாராம். என்னையே நினைத்துக் கொண்டு இருப்பாராம். சிறு வயதில் செய்த தவறை இவரிடம் கூறாமல் மறைத்து விட்டேன்.

என் அக்காவிற்கும், நாங்கள் நடந்து கொண்ட விஷயம் இன்று வரை தெரியாது. என் மாமா என் மேல் மிகுந்த பாசம் வைத்திருப்பதாகவும், 'அவள் முன் மாதிரி இல்லை...' என்றும் கூறியிருக்கிறார். என் அக்காவும் அவர் சொல்வதுதான் நியாயம் என்கிறாள்.

இப்போது என் சகோதரியும் என்னிடம் எதுவும் பேசுவதில்லை. மூன்றாவது ஆள் போல் நடந்து கொள்கிறாள்.

எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. என் தவறை எல்லாம் உணர்ந்து திருந்தியதாக நினைக்கிறேன் நான். ஆனாலும், குழப்பமாக உள்ளது. தானாக முடிவு எடுக்க எனக்கு தெரியாது; முகத்தில் அடித்தாற்போல் பேச தெரியாது. இதனாலயே நான் தவறு செய்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

என் மாமாவிற்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும். எனக்கு பயமாக இருக்கிறது. என்னால் எதுவும் ஆகக்கூடாது அவருக்கு. என் காதலனுக்கு துரோகம் செய்யவும் நான் விரும்பவில்லை. தாங்கள் தான் எனக்கு ஒரு நல்ல பதிலை தர வேண்டும்.

உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு—

உன் கடிதம் கிடைத்தது. உன் குழப்பம் அநாவசியமானது. அக்காளின் கணவர், தன் உடற்பசிக்கு உன்னை உபயோகித்துக் கொண்டதாக எழுதியிருக்கிறாய்... அப்போது உனக்கு உலகம் தெரியாது என்றும், இப்போது இரண்டு வருடகாலமாக வேறு ஒருவரைக் காதலிப்பதால், அவருக்கு துரோகம் செய்ய விருப்பமில்லை என்றும் எழுதியிருக்கிறாய்.

என் சந்தேகமெல்லாம் இதுதான்...

1. எப்போது முதல் உனக்கு உலகம் தெரியத் தொடங்கியது? ஒன்பதாவது படிக்கும்போது வேண்டுமானால், 'இது தப்பு' என்று தோன்றவில்லை. இப்போது உனக்கு வயசு 26. இரண்டு வருடங்களாக, வேறொரு, 'நல்ல' மனிதர் கிடைத்து விட்ட பின், அக்காள் கணவருடன் படுக்கவில்லை.

அப்படியானால், பதினாறு வயதிலிருந்து இருபத்தினாலு வயசு வரையில் நீயும் இந்த அக்கிரமத்துக்கு உடன்பட்டா# தானே? அப்படியானால் ஏன் சம்மதித்தாய்? பயம் என்று மட்டும் கூறி தப்பிக்கலாம் என்று பார்க்காதே... மகா அசடானப் பெண்ணாக இருந்தாலும், முதலில் வேண்டுமானால் பயந்தும், பலாத்காரத்துக்கு வேறு வழியின்றி பணிந்தும் உடன்பட்டிருப்பாள். ஆனால், 'இது கூடாது' என்று அவள் நினைத்துவிட்டால், எந்த ஜித்தனாலேயும் அவளை வளைக்க முடியாது. அப்படி வளைந்தாள் என்றால், அவளுக்குள்ளேயும் நெருப்புக் குச்சித் தலையளவுக்காவது ஆசை இருந்திருக்க வேண்டும்.

2. இரண்டு வருடமாய் வேறொருவரைக் காதலிப்பதால்தான், 'இது' துரோகம் என்கிறாயா? அப்படியானால் ஒரே வயிற்றில் பிறந்து, ஒரே வீட்டில் வளர்ந்த ரத்தத்தின் ரத்தமான உன் சகோதரிக்கு இதுநாள் வரையில் நீ இழைத்தது துரோகமில்லையா?

3. சரி, இப்படி ஒரு மனிதரை - உனக்கு அறிவுரைகள் எல்லாம் கூறும் நல்லவரை - நீ சந்திக்கவே இல்லை என்றால்... இதே தவறைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பாயா?

4. இவருடன் பழகியதிலிருந்து, நீ அக்கா புருஷனை நெருங்க விடுவதில்லை என்று எழுதியிருக்கிறாய். ஆக, நெருங்க விடாமல் தடுக்கக்கூடிய திறமையும், சாமர்த்தியமும் உனக்கு இருக்கிறது. இல்லை என்று முன்னால் சொன்னதை, பொய் என்று வைத்துக் கொள்ளலாமா.

பொறு... அழாதே! எப்போதுமே நாம், நமது தவறுகளுக்கெல்லாம் அடுத்தவர்தான் காரணம் என்று பழியைத் தூக்கிப் போடக்கூடாது; அது நமது பொறுப்பிலிருந்து கழன்று கொள்ள நாம் பிரயோகிக்கும் வார்த்தை!

நெருப்புக் குச்சி, 'நான் எரிந்து போனதற்கு காரணமே இந்த வத்திப் பெட்டிதான்' என்று கூறினால் நம்மால் ஒப்புக் கொள்ள முடியுமா... அது போலத்தான் இதுவும்!

மாமா விஷயத்தை விட்டு, உன் காதலன் சமாச்சாரத்துக்கு வருவோம். நல்லவர், உனக்கு நிறைய புத்திமதிகள் கூறுபவர் என்கிறாய். அவருக்கு, உன்னைக் காதலிக்கும் போது, தான் வேறு ஜாதி... இந்தக் கல்யாணம் நடக்காது என்று தெரியாதா? ஆக, அவருமே பொறுப்பில்லாமல், ஒரு பெண் கிடைத்தாள் என்று, பொழுதுபோக்காக காதலித்து விட்டு, இப்போது ஜாதியையும், தன்னைக் காதலித்து பிரச்னை உண்டாக்கிய பெண்ணையும் காரணம் காட்டுகிறார்...

'இவங்க எல்லாம் இல்லாம இருந்திருந்தா... நான் எங்க வீட்டுலச் சொல்லி இருப்பேன்...' 'நீ கல்யாணம் பண்ணிக்க நான், 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று பாடுகிறேன்...'என்று.

எதற்காக இப்படி ஏதேதோ பொய் காரணங்களைக் கூறி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்? ஒரு கம்பெனியில் வேலை பார்க்கும் நீ - பணிபுரியும் மகளிர்க்கான விடுதியில் தங்க வேண்டியதுதானே அல்லது உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டு...

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us