தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 03, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அக்காவிற்கு—

நான் 27 வயது பெண். காதல் திருமணம் செய்து கொண்டேன். கல்லூரி காதல். டிகிரியும், டிப்ளமாவும் முடித்துள்ளேன்; என் கணவர் அரசு அலுவலர். அப்பா இல்லை. அம்மா, தம்பி, தங்கை உண்டு. அம்மா சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

சொந்தபந்தம் இல்லாமல், அடிதடிகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், என்னுடைய கணவர் பணப் பேய், ஊர் சுற்றுபவர், குடிகாரன், சிகரட் பிடிப்பவன், ஊதாரி என்பது, கல்யாணம் முடிந்த மூன்றாவது நாள் தான் தெரிய வந்தது.

அப்போதே என் அம்மா வீட்டிற்கு சென்று இருக்கலாம்; என் வீட்டு சூழ்நிலையின் காரணமாக போகவில்லை. ஊரில் அவதூறு பேசுவர். 'ஆம்பளை இல்லாத குடும்பம். தம்பிகள் சிறுவர்கள், இவ இஷ்டத்துக்கு கல்யாணம் செய்து மூணாவது நாள் வீட்டிற்கு வந்துவிட்டாள்!' என்று சொல்வர் என நினைத்து போகவில்லை.

இரண்டு வருடம் கழித்துதான், பொம்பளை பொறுக்கி அவன் என்பது தெரிய வந்தது. பின் அவரிடம் கேட்டதற்கு, அம்மா மீதும், சாமி மீதும் சத்தியம் செய்தார். சத்தியம் சர்க்கரை பொங்கலாக மாறி விட்டது. அப்போதிலிருந்து என் கணவர் மீது சந்தேகம் வந்துவிட்டது எனக்கு.

கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. ஆஸ்பத்திரியில் சென்று பார்த்ததற்கு, என் கணவர் மீது குறை இருப்பதாக வும், மருந்து உண்டால் சரியாகி விடும் என்று கூறினர்.

ஆனால், இதை பொருட்படுத்தவில்லை அவர்; அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்ல முடியவில்லை. இதையே காரணம் காட்டி, 'உன்னை விவாகரத்து பண்ணுவேன்...' என்று மிரட்டுகிறார். நான் எப்படியாவது அவரை திருத்தி வாழ நினைக்கிறேன். அவரோ, என்னை கழற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார்.

என்னால் வீட்டிற்கு செல்ல முடியாது. கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் பாதுகாப்பான இடம் உண்டா? என்னால், இவருடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

ஆகவே, எனக்கு என்று ஒரு பாதுகாப்பான இடம் வேண்டும். என் கணவனுடன் சேர்ந்து வாழ எனக்கு பிடிக்கவில்லை. என் அம்மாவிடம் சென்றால், என் வீட்டில் உள்ள அனைவரின் வாழ்க்கையும் என்னால் பாழாகி விடும்.

என்னுடைய வீட்டில் நான் மூத்த பெண். அப்பா இல்லாத வீட்டில், நான் வாழாவெட்டியாக இருக்க விரும்பவில்லை. கணவனிடம் சேர்ந்து வாழ முடியுமா? முடியும் என்றால் நான் எப்படி வாழலாம். எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது பாதுகாப்பான இடம் எங்குள்ளது? விலாசம் தெரியப்படுத்தவும்.

தினமும் அடி வாங்கி தான் வாழ்க்கை நடத்துகிறேன். ஒவ்வொரு நாளும் சோகத்திலும், துக்கத்திலும் கழிகிறது.

—உங்கள் அறிவுரைக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் அன்புத் தங்கை.

அன்புள்ள தங்கைக்கு—

உன் கடிதம் கண்டேன். ஏம்மா... காதல் கல்யாணம் என்று எழுதியிருக்கிறாய். ஆனால், 'கணவர் பணப் பேய், ஊர் சுற்றுபவர், குடிகாரர், சிகரட் பிடிப்பவர், ஊதாரி என்பதெல்லாம் தெரியாது... திருமணம் முடிந்த மூன்றாம் நாள்தான் தெரிந்தது!' என்கிறாயே... இந்த இடம் கொஞ்சம் நெருடலாக இல்லை?

பணத்தாசையை மறைத்து, நல்லவர் போல வேடம் போடலாம். ஊர் சுற்றி என்பதும், குடிகாரர் என்பதும், ஊதாரி என்பதும் காதலிக்கும்போது தெரியவில்லையா? அதை விடு... பஸ்சில் யாராவது சிகரட் பேர்வழி - அந்த நேரத்தில் புகைக்காவிட்டாலும் கூட, நம்மைக் கடந்து போகும்போதே நாற்றம் குடலைப் பிடுங்குமே... அந்த நெடி கூடவா காதலிக்கும்போது தெரியவில்லை!

காதலுக்கு கண்தான் இல்லை என்று சொல்லியிருக்கின்றனர். ஆனால், உன் விஷயத்தில் மூக்கும் இல்லை, மூளையும் இல்லை என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது.

ஆரம்ப காலத்திலிருந்தே, நீ உன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிற சுயநலவாதியாக இருந்திருக்கிறாய்... உண்மையா, இல்லையா? உனக்கு என்று ஒரு காதலன் கிடைத்த பின், விதவைத்தாய், தம்பி, தங்கை - இவர்கள் யாருடைய நலத்தையும் நினைத்துப் பார்க்காது, காதலித்தவரையே கைப்பிடித்தாய்.

இப்போதோ, 'நான் தனியாகத் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் வேண்டும்...' என்று எழுதியிருக்கிறாய். பிறந்த வீட்டுக்குப் போனால், 'வாழாவெட்டி' என்று மற்றவர்கள் ஏசுவர், பேசுவர் என்கிறாய்.

படித்து பட்டம் வாங்கியிருக்கிறாய் அல்லவா? அந்த பட்டத்தை என்ன செய்தாய்? சட்டம் போட்டு அலங்காரமாய் மாட்டி வைத்திருக்கிறாயா?

இருபத்தியேழு வயசுப் பெண், அதுவும் படித்த, உடம்பில் தெம்பும், ஆரோக்கியமும் உள்ள பெண் - 'கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் உண்டா?' என்று கேட்டு எழுதியிருக்கிறாயே... உனக்கு எப்படியோ... எனக்கு வெட்கமாக, வேதனையாக இருக்கிறது.

வெளியுலகத்தில் தனி மனுஷிக்குக் கிடைக்கும் அவமானங்களை விட, தற்போதைய பாதுகாப்புக்கு உன் பிறந்த வீடே நல்லது. அதற்கென்று அழுது, மூக்கைச் சிந்தியபடி, பிறந்த வீட்டில் ஸ்திரமாக உட்கார்ந்து விடாதே! யோசி... உனக்கென்று சிந்திக்கவும், செயலாற்றவும், கடவுள் மூளையையும், இளமையையும் கொடுத்திருக்கிறார்.

'கணவனால் கைவிடப்பட்ட...' இந்த நினைப்பைத் தூக்கி உடைப்பில் போடு... நீதான், கணவனைக் கைவிட்டு விட்டு வெளியே வரப்போகிறாய், அவனல்ல. உன்னை விவாகரத்து செய்ய வேண்டியதில்லை அவன்; அதை நீ செய்! கிடைத்த வேலையில் ஒட்டிக் கொள். உனக்கென்று - உன்னுள் சில திறமைகள் இருக்கலாம், இருக்கும்; அதைத் தேடிப் பார்த்து, வளர்த்துக் கொள்ள முயற்சி செய். வேலை என்பது, மற்றவரிடம் கைநீட்டிச் சம்பளம் வாங்குகிற சமாச்சாரமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை; வேலையை நீயே உண்டு பண்ணிக் கொள்!

'கணவனுடன் சேர்ந்து வாழ முடியுமா?' என்று கேட்டிருக்கிறாய். அதே சமயத்தில், 'அவனுடன் வாழ விருப்பமில்லை' என்றும் எழுதியிருக்கிறாய். கணவனுடன் வாழ விரும்பினால், முதலில் உன் பக்கமுள்ள தவறுகள், குறைகள் என்னென்ன என்று ஒரு லிஸ்ட் போடு. அவற்றை உன்னால் மாற்றிக் கொள்ள முடியுமா என்று பார்! அதே மாதிரி - கணவனின் குறைகளையும் வரிசையாய் எழுது. திருத்தக்கூடியது ஏதாவது இருக்கிறதா என்று பார்... ஸ்திர புத்தி வேண்டும்!

அதைவிட்டு, அடித்தால் வாங்கிக் கொண்டு, துக்கத்திலும், கண்ணீரிலும் காலத்தை வீணடிப்பது கையாலாகாத்தனம் - அவ்வளவுதான் நான் சொல்வேன்!

என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us