தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : நவ 01, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

என் தோழியின் வயது, 37; மத்திய அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிகிறாள். அவள் கணவரும் அரசு அதிகாரி. பெண் மற்றும் ஆண் என இரு குழந்தைகள்; வசதியான வாழ்க்கை. என் தோழி பார்க்க, மிகவும் அழகாக இருப்பாள்; கலகலப்பாக பழகக் கூடியவள். புத்திசாலியும் கூட! அவளுக்கு பெண் நண்பர்களே அதிகம்.

அவளுடன் பணிபுரியும் ஆண் அதிகாரி ஒருவரிடம், அலுவலக ரீதியாக ஏற்பட்ட பழக்கம், நல்ல நட்பாக மாறியதால், அந்த அதிகாரி, தன் மனைவியை பற்றி மற்றும் குடும்ப விஷயங்களை இவளிடம் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்துள்ளார். இவளும், பரிதாபமாகக் கேட்க, ஒரு கட்டத்தில், இவளின் இரக்க குணம், அந்த ஆணை, இவள் மேல் காதலாகப் பார்க்கும்படி செய்து விட்டது. அதன் தாக்கம், தினசரி குறுந்தகவல்கள், தொலைபேசி உரையாடல்கள் என தொடர்ந்துள்ளது. நல்ல விதமாகப் பேசி, அவனுக்கு அறிவுரை கூறியிருக்கிறாள் தோழி.

ஆனால், அவன் அதேநிலையில் பேசவே, பொறுக்க முடியாமல், அவன் மனைவிக்கு, இவனைப் பற்றி, மெசேஜ் அனுப்பி விட்டாள். ஆனால், எங்கு நியாயம் கிடைக்கும் என்று நினைத்தாளோ, அவன் மனைவியே, இவளுக்கு எதிராக மாறி விட்டாள்.

அத்துடன், அவனோ, தான் அப்பாவி என்றும், தோழி தான் இதற்கெல்லாம் காரணம் என்றும், தாங்கள், 'கூடா' உறவில் இருந்ததாகவும் தன் மனைவியிடம் பொய் கூறியுள்ளான்.

அவன் மனைவியோ, தோழியை திட்டி, தோழியின் கணவனிடம் இதைப் பற்றிக் கூற, பெருங்குழப்பம்.

நல்லவேளை, தோழியின் கணவர் எதையும் நம்பவில்லை. இதுகுறித்து, சக அதிகாரிகளிடம் முறையிட்டு இருக்கிறாள் தோழி. அதனால், இக்கட்டுக்கதைகளை, அவன் அலுவலகத்தில் உள்ள சிலரிடம் கூற, அதுவும் காட்டுத்தீயாக பரவி விட்டது.

இதனால், தோழி அவன் மீது, மானநஷ்ட வழக்கு போட, அதன்பின், 'மேற்படி தேவையில்லாத' சம்பவங்கள் நிகழவில்லை என, வக்கீல் மூலம் ஒத்துக் கொண்டான். ஆனால், சில இடங்களில், தான் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்டு, அலுவலக உயர் அதிகாரிகளிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுள்ளான். இவனின் செயல்களால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாள் தோழி.

நான் கேட்பது எல்லாம் இது தான்...

* இந்தப் பிரச்னைக்கு முடிவு தான் என்ன, என் தோழியின் மீது பட்ட கறையை எப்படி போக்குவது?

* என் தோழிக்கு வஞ்சக எண்ணம் சிறிதும் இல்லை. அவன் மனைவியோ, இவளின் அலுவலகத்தில் வம்பு வளர்க்கும் சிலரிடம், விஷயத்தைக் கூறி பிரச்னையை வளர்க்கிறாள்; இதை எப்படிப் புரிய வைப்பது?

* அடுத்த ஆணின் தனிப்பட்ட கதையைக் கேட்டது தவறா அல்லது அவன் தவறை, அவன் மனைவியிடம் சுட்டிக் காட்டியது தவறா அல்லது ஆரம்பத்திலேயே அவனை கண்டிக்காதது தவறா?

* சைபர் க்ரைம் செல்லலாம் என்றால், குடும்ப மானம் தடுக்கிறது! தற்போது, தோழியின் மன நிலை சரியில்லாமல் அல்லாட, அவனோ, தன் குடும்பத்துடன் வெளியூரில் செட்டிலாக திட்டமிட்டுள்ளான். அது அவன் இஷ்டம்.

ஆனால், தோழியின் மீது பட்ட கறையையும், அன்பான, அறிவான அவளின் நிலையையும் கண்டு, நித்தமும் வேதனைப்படுகிறோம்.

இதில், தாங்கள் என் தோழிக்கு கூறும் அறிவுரை என்ன?

அன்புடன்,

பெயர், ஊர் வெளியிட முடியாத வாசகி.


அன்பு மகளுக்கு —

இன்றைய பெண்களுக்கு, 'ஆண் நிர்வாகம்' செய்ய தெரியவில்லை. ஒரு ஆண், தன்னிடம் என்ன நோக்கத்துடன் பேச வருகிறான், பேசும் போது, எந்த பாகத்தை பார்த்து பேசுகிறான் என்பது போன்ற பல விஷயங்களை ஆராய தெரிந்திருக்க வேண்டும்.

பெரும்பாலான திருமணமான ஆண்கள், மணமான பெண்களை பிடிக்க, தங்கள் மனைவி கொடுமை புரிவதாக பொய் கூறுவர். முதலில், அந்த ஆணிடம் ஏற்படும் பரிதாபம், படிப்படியாக மாறி, காதலாகி விடும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

அறிவாளியான உன் தோழி, தன்னுடன் பேசும் அலுவலக ஆண், எப்படிப்பட்டவன் என்பதை, முதலிலேயே அனுமானித்திருக்க வேண்டும். மனைவியை பற்றி அவன் குறை கூற ஆரம்பித்த முதல் பேச்சிலேயே, 'உங்க குடும்ப விஷயத்தை என்னிடம் கூறாதீர்கள்; எனக்கு அடுத்தவர் அந்தரங்கங்களை கேட்பதில் விருப்பமில்லை...' எனக் கூறி, தடுத்திருக்க வேண்டும். தொடர்ந்து அந்த ஆணிடம் குறுஞ்செய்தி பரிமாற்றம், தொலைபேசி பேச்சு என, தொடர்ந்தது உன் தோழியின் தவறு.

அவன் குறுஞ்செய்தி அனுப்பும் போதே, எச்சரித்து, தடுத்திருக்க வேண்டும். கேட்க மறுத்திருந்தால், மேலதிகாரியிடம் புகார் செய்திருக்க வேண்டும். சில பெண்கள், கணவனுடன் தினமும் சண்டை போடுவர். ஆனால், கணவனைப் பற்றி யாராவது புகார் செய்தால், 'நீ தாண்டி மோசம்; என் புருஷன் உத்தமன் ...' என, தோசையை திருப்பி போட்டு விடுவர்.

இனி, உன் கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.

* இந்த பிரச்னைக்கு முடிவு, உன் தோழியிடம் தான் உள்ளது. தொல்லை கொடுத்தவன் குடும்பத்துடன் வெளியூர் செல்கிறான்; இது ஆறுதலான விஷயம். சேற்றில் கல்லை எறிந்து விட்டு, அது, நம் மீது தெறித்து விட்டதே என வருத்தப்படுவதற்கு பதில், அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், விலகி நிற்பது உத்தமம். காலம் எல்லா காயங்களையும் குணப்படுத்தும்.

* அலுவலகத்தில் இருக்கும் வம்பர்களின் பேச்சை புறக்கணிக்கலாம் அல்லது ஒரு மாத மருத்துவ விடுப்பு எடுத்து மனக் காயங்களை ஆற்றலாம். இடமாற்றம் கேட்டு, வேறு அலுவலகம் சென்று பணி புரியலாம்.

* திருமணமான பெண்கள், மணமான ஆண்களிடம் அன்பை காட்டுவதில், மகா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆண்களின் பெரும்பாலானோர் விஷத்தை கக்கும் நாகப்பாம்புகள் என்பதை, புரிந்து, இடைவெளி விட்டே பழக வேண்டும்.

* சைபர் க்ரைம் செல்வது அனாவசியம்; மேலும், அவன் உக்கிரமடைந்து, அவதூறு பரப்புவான். யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல, உன் அதிபுத்திசாலி தோழி சறுக்கி விட்டாள். அவளது அனுபவம், எல்லா மணமான பெண்களுக்கும் ஒரு பாடம்.

ஆண்களை நிர்வாகம் செய்ய தெரிந்த பெண்களே, பணியிலும், வாழ்க்கையிலும் ஜெயிக்கின்றனர்.

உன் தோழிக்கு என் நெஞ்சார்ந்த பரிவுடன் கூடிய விசாரிப்பை சொல்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us