தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அக்காவிற்கு —

நான், எம்.ஏ., படிக்கும் மாணவி; வீட்டிற்கு நான் தான் மூத்த பெண். எனக்கு இரு தங்கைகளும், ஒரு தம்பியும் உள்ளனர். முதல் தங்கையும், தம்பியும் கல்லூரியில் படிக்கின்றனர். இரண்டாவது தங்கை, பள்ளியில் படிக்கிறாள். பிறரிடம் பகிர முடியாத என் பிரச்னைக்கு நீங்கள் தான் தீர்வு கூற வேண்டும்.

என் பெற்றோர் எனக்கு கிடைத்த தெய்வங்கள்; என் குடும்பத்தினர் அனைவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என் தம்பி செய்யும் தவறால், நான், ஆண்களையே வெறுக்கிறேன்.

ஒரு ஆண், ஒரு பெண்ணை கேலி செய்தால், அவனிடம், 'உனக்கு அக்கா, தங்கை இருந்தால், நீ இப்படி செய்வாயா...' என்று கேட்பர். ஆனால், சொந்த அக்கா, தங்கையிடமே, சில்மிஷம் செய்பவனை

என்ன செய்வது?

நாங்கள் சிறுமிகளாக இருந்த போது, கூட்டுக் குடும்பத்தில் வசித்தோம். எல்லாரும் ஒன்றாக தான் உறங்குவோம். திருமணம் ஆகாத சித்தப்பாக்களும், எங்களுடன் தூங்குவர். சில சமயம், அவர்கள் எங்கள் பக்கத்தில் வந்து படுத்து சில்மிஷம் செய்வர்.

நான் கொஞ்சம் விவரமானவள். உடனே எழுந்து, 'நீங்க ஏன் இங்கே படுத்திருக்கீங்க...' என்று கேட்பேன். ஆனால், 'ஏன் இப்படி செய்கிறீர்கள்...' என்று கேட்க மாட்டேன். ஏனென்றால், எனக்கு அவமானமாக இருக்கும். உடனே அவர்கள், தூக்கத்தில் வந்து படுத்து விட்டதாக கூறி, எழுந்து சென்று விடுவர்.

இதில், என் தங்கை மிகவும் பாதிக்கப்பட்டாள். 'நான் அப்பாவிடம் கூறப் போகிறேன்...' என்று அவள் கூறும் போதெல்லாம், 'அப்படி கூறினால், நமக்கு தான் அவமானம்...' என்று சொல்லி, அவளை சமாதானப்படுத்தி விடுவேன். தற்போது, நாங்கள் தனியாக வந்து விட்டோம்.

இப்போது, என் தம்பி, நாங்கள் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும், அறையை எட்டிப் பார்ப்பது போன்ற வேலைகளை செய்கிறான். இதனால், ஆண் வர்க்கம் மீதே வெறுப்பு வந்து விட்டது. சில நேரங்களில், அப்பாவையே சந்தேகிக்க தோன்றுகிறது.

மற்றவர்களுக்கு என் தம்பி மேல், தவறான அபிப்ராயம் ஏற்பட்டு விடுமே என்ற கவலையால், இதை வெளியில் சொல்ல முடியவில்லை. ஆனால், இதையே சாக்காக வைத்து, இதுபோன்ற தவறுகளை தொடர்ந்து செய்கிறான். வீட்டிலேயே இப்படி செய்கிறவன், வெளியே எப்படி நடந்து கொள்வான்?

இக்காரணத் தினாலேயே அவனை திட்டுகிறேன். ஆனால், வீட்டினரோ விஷயம் புரியாமல் என்னை திட்டி, அவனுக்கு பரிந்து பேசுகின்றனர். மறைமுகமாக சொன்னாலும், யாரும் புரிந்து கொள்வதில்லை. இதனால், அவனும் திருந்த மாட்டேன் என்கிறான்; அவனை எப்படி திருத்துவது என்றும் தெரியவில்லை. யாரிடமும் சொல்லாமல், அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்.

என்னை போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். அவர்களுக்கெல்லாம், உங்கள் பதில் மூலம், விடிவு ஏற்படும் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

உங்கள் சகோதரி.



அன்பு தங்கைக்கு —

எதிர் பாலினத்தின் நிர்வாணத்தை குறுகுறுப்பாய் ரசிப்பது, ஆண் இனத்தின் மரபணுவில், பச்சை குத்தப்பட்ட பிறவி குணம். தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணை, இயற்கை உபாதையை கழிக்கும் பெண்ணை, பஸ்சில், உயரக் கம்பியை பிடித்து, இடுப்பு தெரிய நிற்கும் பெண்ணை, சில வக்கிர ஆண்கள் ரசிக்கவே செய்வர்.

பெண்களை, பாலியல் வன்முறை செய்ய, யாரும் விமானம் பிடித்து, வெளிநாட்டிலிருந்து பறந்து வருவதில்லை. உறவு முறை ஆண்கள், திருமண பந்தத்தில் தோற்றவர்கள், உரிய வயதில் திருமணமாகாதவர்கள் மற்றும் தாம்பத்யத்தில் ஈடுபடும் சக்தியை இழந்த முதியவர்கள் தான், சிறுமிகளிடம் சில்மிஷம் செய்தால், எதிர்ப்பு காட்ட மாட்டார்கள் என, கணக்கு போடும் வில்லன்கள்.

இதனாலேயே நம் முன்னோர், பெண் குழந்தைகளுக்கு, பத்து வயதாகி விட்டால், தந்தை உட்பட அனைத்து ஆண்களிடமிருந்து பிரித்து பாதுகாப்பர். அதை, பத்தாம்பசலித்தனம், பிற்போக்குதனம் என, சிலர் வர்ணித்தாலும், அதை சரியென்று வாதிடும்படியாகத் தான் தற்கால நிகழ்வுகள் உள்ளன.

சமூக நியதிகளை, நியாய, அநியாயங்களை சீர்தூக்கி பார்த்து, இச்சை சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதில்லை, காம வசப்பட்டோர். அதனால், நம் வீடு, நம் தம்பி தானே என அலட்சியம் காட்டாது, குளிக்கும் போதும், ஆடை அணியும் போதும் கவனமாக இருக்க வேண்டும். தனித்தனி அறை களில் படுப்பது உசிதம்.

தம்பி அத்து மீறினால், சிறிதும் தயங்காமல், பொறி கலங்க, இரண்டு அறை கொடு. அவனை தனியாக கூப்பிட்டு, தகுந்த ஆலோசனை வழங்கு. 'நீ திருந்தா விட்டால், சூடு போட தயங்க மாட்டேன்...' என, எச்சரிக்கை கொடு.

அத்துடன், தம்பியின் துர்நடத்தையை, உன் அம்மாவிடம் விலாவாரியாக கூறி விடு. இதம்பதமாய் உரிய முறையில் அவனை கண்டித்து வைப்பார், அம்மா.

உன் தம்பியின் துர்நடத்தை தற்காலிகமானதே! பின்னாளில், முறைப்படி திருமணம் செய்து, தாம்பத்யம் நுகரும் போது, தன் கடந்த கால நடவடிக்கைகளுக்கு வெட்கி, தலைகுனிவான்.

எல்லா ஆண்களும் மோசமானவர்கள் அல்ல; ஒட்டு மொத்த ஆண்களிடம், அவநம்பிக்கை கொள்ளாதே. உறவுக்கார ஆண்களின் கண்களையும், அங்க அசைவுகளையும், பேசும் தோரணையையும் ஆராய்ந்து, அவர்களை வைக்க வேண்டிய தூரத்தில் வை.

மொத்தத்தில், ஒவ்வொரு பெண்ணும், ஆண் மேலாண்மையில் சிறந்து விளங்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரன், எப்படி எல்லா வகை பந்துகளையும் எதிர்கொண்டு ஆடி, 'செஞ்சுரி' அடிக்கிறானோ, அதைப்போல, ஒரு பெண், ஆறிலிருந்து, அறுபது வயது வரை, ஆண்கள் தொடுக்கும் பாலின தாக்குதல்களை சமாளித்து, வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.

வீட்டுக்குள் ஆண்களால் ஏற்படும் பாலின தாக்குதல்களை ஒரு பெண், சிறப்பாக சமாளித்தால் தான், பொது இடங்களிலும், பணி இடங்களிலும், ஆண்கள் தொடுக்கும், பாலின தாக்குதல்களை எளிதாக தோற்கடிப்பாள்.

வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us