
அன்புள்ள அம்மாவுக்கு —
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன்.
வயது, 49. வெளியூரில் தொழில் செய்கிறேன். எனக்கு ஒரு மகன். வயது, 23. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னிடம் பேசுவதே இல்லை. நான் சாப்பிடும் இடத்தில் மகன் சாப்பிடுவதில்லை. அனைத்து விஷயத்திலும் எனக்கு எதிராகவே நடக்கிறான்.
தற்போது கூட, என்னுடன் ஆலோசிக்காமல், வேறு இடத்தில் கடன் வாங்கி, பைக் வாங்கியுள்ளான். டிகிரி முடித்துள்ள அவனை ராணுவத்தில் சேர்க்க முயற்சித்தேன். ராணுவ பணி பிடிக்காது என்று சொல்லி விட்டான்.
சென்னையில், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், போகவில்லை. சிறு வயதிலிருந்தே வளர்ப்பதில், தவறு செய்து விட்டேனோ என்று, தினமும் மனம் வேதனைப்படுகிறேன்.
என் மனைவியுடன், அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரும். டீ, காபி, சிகரெட், பீடி, பான்பராக் மற்றும் குடி இதில் எந்த பழக்கமும் என்னிடம் இல்லை. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள எனக்கு, வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள், என் மனைவி.
ஒருநாள், மனைவியும், வேறு ஒரு ஆணும், பாலுணர்வு துாண்டுவது போல் பேசியதை, காதில் கேட்டு விட்டேன். அன்று முதல், என் பாதி உயிர் போய் விட்டது. பலமுறை இதுபற்றி பொறுமையாக கேட்டுப் பார்த்தேன். ஆனால், சாமர்த்தியமாக சமாளித்து வருகிறாள்.
என் ஆழ் மனதில் அந்த உரையாடல் பதிந்து விட்டதால், என்னால் சரியாக துாங்க முடியவில்லை. அந்த ஆணுடன் தொடர்பு இருக்கும் என, நினைக்கிறேன்.
இந்த இருவரின் நிலைப்பாட்டால், என் வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய் விட்டது. ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள், அம்மா.
தற்போது, சென்னையில் தங்கி தான் தொழில் செய்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு,
நீ ஒரு வெள்ளந்தி ஆண்.
வாலிப வயது மகனுக்கு, 50 வயதை நெருங்கிய அப்பா, அவலட்சணமான, அறிவு வளர்ச்சி இல்லாத கிழவராக தெரிவார். 'இந்த ஜடத்தை அம்மா எப்படி மனம் ஒப்பி, திருமணம் செய்து கொண்டாள்...' என ஆச்சரியப்படுவான், மகன்.
எப்போதுமே அப்பாவுக்கு எதிராகவே, அம்மாவுடன் கூட்டணி அமைப்பான். மகனுக்கு, அம்மாவை பிடிக்கும் என்பதும், மகளுக்கு, அப்பாவை பிடிக்கும் என்பதும், மரபியல் மாயா ஜாலங்கள்.
நீ என்ன பண்ணி இருக்க வேண்டும்... 'இங்கு கடன் வாங்கி பைக் வாங்காதே...' என, உல்ட்டாவாக கூற வேண்டும்; 'ராணுவத்தில் சேர்ந்தால் தொலைத்து விடுவேன்...' எனக் கூறி இருக்க வேண்டும்.
நீ பேசாமல் உன் மகனை, அவன் வழியில் போக விடு. முட்டிமோதி, ரத்தக்காயப்பட்டு, தத்தி தாவி, தவழ்ந்து பிழைத்துக் கொள்வான். நாளை அவன் மகன் பெரிதாகி, அவன் பேச்சை கேட்காதபோது, அப்பாவின் அருமையை உணர்வான். இது, காலத்தின் கட்டாயம்.
நீ எப்படித்தான் மகனை வளர்த்தாலும், அவன் எகனைக்கு மொகனை தான் பண்ணுவான்.
உன்னிடம் எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லை.
பொருளாதாரத்தில் நீ, அடி படிக்கட்டில் நிற்கிறாய். உன் மனைவியோ, மேல் படிக்கட்டில் நிற்கிறாள்.
இந்த காலத்தில் நிறைய பெண்களுக்கு திருமணபந்தம் மீறிய உறவுகளில் ஈடுபட போதிய தைரியம் இல்லை. பதிலாக பிற ஆண்களுடன் காமம் துாண்டும் உரையாடல்களில் ஈடுபடுவர். அந்த உரையாடல் அவர்களுக்கு, திருமணபந்தம் மீறிய உறவில் கிடைக்கும் சந்தோஷத்தை தந்துவிடும்.
சில பெண்கள், 40 வயது வரை, கறார் கந்தசாமியாக, பிற ஆண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பர். அதன்பின் ஆண்களுடன் உரையாடல் கேளிக்கைகளில் ஈடுபடுவர். இதனால் இரண்டு பக்கமும் சேதாரம் இல்லை. உன் மனைவியும் இதே ரகம்தான் என யூகிக்கிறேன்.
மகனுடனும், மனைவியுடனும் உனக்கு சுமுகமான உறவு இல்லை தான். அதற்காக மகனை வீட்டிலிருந்து அடித்து விரட்டி விடலாமா... மனைவியை விவாகரத்து பண்ணிவிடலாமா...
உன் மனைவி சாதாரணமாக, விளையாட்டாக பேசியதை தவறாக காதுற்றாயோ என்னவோ?
உன் அடுத்த ஐந்து ஆண்டு மிக முக்கியம்.
உன் மகனுக்கு வேலை கிடைக்கும். தகுந்த வரன் பார்த்து திருமணம் செய்து வைப்பாய். பேரனோ, பேத்தியோ பிறப்பர்.
மகனையும், மனைவியையும் விட்டுப்பிடி. எப்படியும் மாடுகள் மேய்ந்துவிட்டு மாலையில் கொட்டடி திரும்பும்.
பாட்டு கேள், கோவிலுக்கு போ. கவனத்தை உலக விஷயங்கள் பக்கம் திருப்பு. தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு உழப்பிக் கொள்ளாமல் மறக்க கற்றுக்கொள்.
நகைச்சுவைகளை ரசி; நகைச்சுவையாய் பேசு. உன் மகனையும், மனைவியையும் மட்டும் கொண்டதில்லை உலகம். வட்டத்தை விட்டு வெளியே வா.
பறக்கக்கூடிய பறவை, பறக்காமல் ஓடுவது தவறு. பற, ஏழு வானங்களும் உடன் வசப்படும் மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

