PUBLISHED ON : மே 30, 2021

அன்புள்ள அம்மா
என் வயது: 35. அரசு பணியில் உயரதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர், அப்பா; அம்மா, இல்லத்தரசி. அப்பாவுக்கும், அம்மாவுக்கும், 15 வயது வித்தியாசம். கறுப்பாய், மாறு கண்ணுடன் இருப்பார், அப்பா; அம்மா, பேரழகி.
'இந்த மாப்பிள்ளையை தான் கட்டிக்குவேன்...' என, பிடிவாதம் பண்ணி, அப்பாவுக்கு கழுத்தை நீட்டினாள், அம்மா. இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண். நான் மூத்தவன்; ஒரு தம்பி, ஒரு தங்கை.
எங்கள் அம்மா, பெரும்பாலும் வீட்டில் சமையல் செய்ய மாட்டாள். ஹோட்டலில் இருந்துதான் வாங்குவாள். வீடு நிறைய எவர்சில்வர், வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் வாங்கி குவிப்பாள். 'கேம்ப்' போயிருக்கும் கணவருக்கு தெரியாமல், சினிமாவுக்கு போய் வருவாள்.
வெளியில் எங்களை அழைத்துப் போக தயங்குவாள். மீறி அழைத்து சென்றால், எங்களை, தம்பி, தங்கைகள் என, அறிமுகப்படுத்துவாள். நிறைய சமயங்களில், அம்மா வெளியே சென்றிருக்கும் சமயம், 'கேம்ப்'பிலிருந்து முன்னதாகவே திரும்பி விடுவார், அப்பா.
அம்மா வரும் வரை, பூட்டிய வீட்டின் முன் அமர்ந்திருப்பார். வந்தவுடன் இருவருக்கும் பயங்கர சண்டை வெடிக்கும். இருவரின் சண்டையை சமாதானப்படுத்த போய், நிறைய அடி வாங்கியிருக்கிறோம். சண்டையின் போது, அம்மாவை தாறுமாறாய் அடித்து, வசவு வார்த்தைகளை கொட்டுவார், அப்பா.
அப்பாவை, 'கிழவன், ஒன்றரைக்கண்ணன், கறுப்பன்...' என்று தான், சண்டை போடும் சமயங்களிலும், சாதாரணமாகவும் அழைப்பாள், அம்மா. விழித்திருக்கும் நேரமெல்லாம், அம்மா தன்னை அலங்கரித்து கொள்வாள். நகைகளை அடகு வைத்து, ஆடம்பர செலவு செய்வாள்.
உறவினர் யார் வீட்டுக்கும் எங்களை போக விட மாட்டாள்; அவர்கள் யாரையும், எங்கள் வீட்டுக்கும் வரவிட மாட்டாள். அறிவுரை கூறுவோர் யாரையும் பிடிக்காது, அம்மாவுக்கு. பாட்டி, பெரியம்மா, சின்னம்மா அனைவருடனும் சண்டை.
எனக்கு, 15 வயதாகும் போது, அப்பாவும், அம்மாவும் சட்டப்படி விவாகரத்து செய்வதென முடிவெடுத்தனர். நானும், தங்கையும், அப்பாவுடன் சென்றோம். தம்பி, அம்மாவுடன் சென்றான். முறைப்படி, விவாகரத்து ஆனது. 'ஜீவனாம்சம் வேண்டாம்...' என்றாள், அம்மா.
இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், அப்பா. சித்தி கொடுமை அனலாய் அடித்தது. நான், குரூப் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, அரசு பணிக்கு போனேன்.
அப்பாவையும், சித்தியையும் நம்பாது, நானே பெண் பார்த்து, திருமணம் செய்து கொண்டேன். தங்கையை படிக்க வைத்து, தகுந்த வரன் பார்த்து, திருமணம் செய்து வைத்தேன்.
அம்மாவும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாள். அம்மாவிடம் இருந்த தம்பி, அதிகம் படிக்காமல் ஏதோ வியாபாரம் செய்வதாக கேள்விப்பட்டேன். அவனுக்கும், அம்மாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அவன் பிரிந்து வாழ்கிறான்.
கடந்த மாதம் அப்பா, 'மாஸிவ் ஹார்ட் அட்டாக்'கால் இறந்து விட்டார். எங்கம்மாவும், தம்பியும் தனித் தனியாக வந்திருந்தனர்.
தகனம் முடிந்ததும், 'நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர், சில ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் இறந்து விட்டார். என் தவறுகளை எல்லாம் உணர்ந்து, திருந்தி விட்டேன். என்னை மன்னித்து ஏற்றுகொள்ளுங்கள். மூவரின் வீட்டுக்கும் வேலைக்காரியாய் இருந்து பாவத்தை கழுவுகிறேன்...' என கூறி, என் கையை பிடித்து அழுதாள், அம்மா.
நான், தம்பி, தங்கை மூவரும் கூடி ஆலோசித்தோம்.
'வீட்டில் வைத்து கொள்ள வேண்டாம். முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவோம்...' என முடிவெடுத்தோம்.
இந்த விஷயத்தில், நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்பு மகனுக்கு
'தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்கிறது, இந்து மதம். 99.999 சதவீத அம்மாக்கள், தங்களது தலைகளுக்கு பின் ஒளிவட்டத்தோடு உலா வந்தாலும், விதிவிலக்காய், 00.001 சதவீதத்தினர், சாத்தான்களாய் தலைவிரித்து ஆடுகின்றனர்.
எவ்வளவு மோசமான அம்மாவாக இருந்தாலும், உங்கள் மூவரை அவள்தானே பெற்றாள். இரண்டு வயது வரை, தாய்ப்பால் புகட்டியிருப்பாள். அவள் இல்லையென்றால் நீங்கள் மூவரும் இந்த பூமிக்கு வந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவளது சாயல், உங்கள் மூவரிடம் இருந்தே தீரும்.
அம்மாவின் கெட்ட குணங்களை அடுக்கினாய். நன்கு யோசித்து பார், அவளிடம் ஒரு நல்ல குணம் கூடவா இல்லை... நல்ல குணங்கள் கட்டாயம் இருந்திருக்கும். அதை யோசிக்க, உன் மனம் மறுக்கிறது.
உன் அம்மாவிற்கு திருமணமாகும் போது, 16 வயதிருக்கும். அந்த வயதில், 31 வயது ஆணை, திருமணம் செய்து கொள்வது மன, உடல் பொருத்தத்திற்கு எதிரானது என்பதை, அம்மா உணரவில்லை. அப்பாவுக்கு,
45 வயதாகும் போது, உன் அம்மா, இளமையின் உச்சத்தில் இருந்திருக்கிறாள்.
அம்மா - அப்பாவிடம் ஆயிரம் தவறுகள் இருந்துள்ளன. குற்றம், குறைகள் இல்லாத மனிதன் யார்... இப்போது, உன் அம்மாவுக்கு, 51 வயது இருக்கும். மனப்பக்குவம் பெற்றிருப்பாள். அடுத்த,
30 ஆண்டுகள், அவள், உங்கள் அன்பு மழையில் நனையட்டுமே. அவளை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். முதியோர் இல்லத்தில் சேர்ப்பது பெரும்பாவம்.
அம்மா எங்களுடன் சேர்ந்த பிறகு, எங்கள் குடும்பங்களில் கலகங்களையும், உள்நாட்டு குழப்பங்களையும் ஏற்படுத்துவாள் என, பயப்படுகிறோம் என்கிறாயா? அது ஒரு கற்பனை சந்தேகம்.
அம்மாவை உங்களுடன் சேர்க்கும் போதே, 'அம்மா... உன் பழைய நிகழ்வுகளை, கெட்ட கனவாய் மறந்து தான், எங்களுடன் இணைத்துள்ளோம். நீ, எங்களுக்கு வேலைக்காரியாக இருக்க வேண்டாம். குடும்பங்களை இணைக்கும் அன்பு பாலமாய் இரு.
'அன்பான நடத்தை, உன் மீதான வெறுப்பை அகற்றி, பாசமழை பொழிவிக்கட்டும். யாருடனும் சண்டை போடாதே. ஆயிரம் மனக்குறைகள் இருந்தாலும், நாங்கள் உன்னை நேசிக்கிறோம்...' எனக் கூறு.
குடும்ப அங்கத்தினர்கள் ஒன்று சேர்ந்து, அம்மாவை வரவேற்று, விருந்து உபசரியுங்கள். வாழ்த்துக்கள்!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
