PUBLISHED ON : ஜன 09, 2022

அன்புள்ள அம்மா —
வயது: 32. தனியார் பொறியியல் கல்லுாரியில், மின் பொறியியல் விரிவுரையாளராக பணிபுரிகிறேன். எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது.
திருமணத்திற்கு முன் அழகிய தேவதையாக இருந்த மனைவி, அதன் பின் அழுக்கு மூதேவி ஆகிவிட்டாள்.
குளிப்பதே இல்லை. ஒரு வேளைதான் ஏனோதானா என்று பல் தேய்ப்பாள். 'டூத்பேஸ்ட்' நுரை வாயில் வழியும். சுட்டி காட்டினால் நுரையை புறங்கையால் இழுத்து விட்டுக் கொள்வாள். தலைக்கு எண்ணெய் தேய்க்க மாட்டாள். தலைமுடி பஞ்சையாய் பராரியாய் செம்பட்டை நிறத்தில் காற்றில் பறக்கும். தினம் முகத்தை கூட சரியாக கழுவ மாட்டாள்.
எப்போதுமே கிழிந்த அழுக்கான சாயம் போன நைட்டியைதான் அணிந்திருப்பாள். அபாயகரமாய் நகம் வளர்த்திருப்பாள்; அதில், அழுக்குகள் சேர்ந்திருக்கும்.
அவளை நெருங்கினாலே ஒரு கெட்ட வாடை வீசும். வீட்டிற்கு விருந்தாளிகளோ, நண்பர்களோ வந்தால், இவளின் நிலையை பார்த்து தலைதெறிக்க ஓடி விடுவர். 'சுத்தமா இரு...' என, பலமுறை அவளிடம் கெஞ்சி விட்டேன்.
அதற்கு, 'வீட்லதான இருக்கேன். சினிமா ஷூட்டிங்குக்கா போறேன்... சீவி சிங்காரிச்சு புருஷனை மயக்கணுமா... நாறுச்சுன்னா பக்கத்ல வராதே... இன்னொன்னு பெத்துக்காம தப்பிச்சிக்கிறேன்...' என்கிறாள்.
ஆசையாய் மனைவியை சினிமாவுக்கோ, ஹோட்டலுக்கோ அழைத்து செல்ல முடியவில்லை. வெட்கத்தை விட்டு சொல்கிறேன், மகன் பிறந்த இந்த இரண்டு ஆண்டுகளாக நான் மனைவியுடன் தாம்பத்யம் வைத்து கொண்டதேயில்லை.
மாமியாரிடம் புகார் கூறினேன். அறிவுரை கூற வந்த அம்மாவை, 'போம்மா உன் வேலையை பார்த்துக்கிட்டு...' என, விரட்டி விட்டாள். என் அம்மாவும் அறிவுரை கூற போய், மூக்கறுபட்டு திரும்பினாள்.
எனக்கு வேறு வழியே இல்லை. இவளை விவாகரத்து செய்து, சுயசுத்தம் பேணும் வேறொரு தேவதையை இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புகிறேன். என் முடிவு சரிதானே?
மனைவி சுத்தமாக இல்லை என்ற காரணத்தை வைத்து, குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்குமா... விவாகரத்து கிடைத்தால், மகனை என் பொறுப்பில் கோர்ட் விடுமா? தேவையான ஆலோசனைகளை வழங்குங்கள், அம்மா.
— இப்படிக்கு,
அன்பு மகன்.
அன்புள்ள மகனுக்கு —
போர்முனையில் இருந்த நெப்போலியன், மனைவி ஜோஸபின்னுக்கு கடிதம் எழுதினாராம்: 'கண்ணே... மூன்றே நாட்களில் வந்து விடுவேன். குளிக்காமல் காத்திரு...'
கணவனின் வியர்வை வாசனை மனைவிக்கும், மனைவியின் வியர்வை வாசனை கணவனுக்கும், உலகின் மிக உயர்ந்த வாசனை திரவியம்.
அம்மா வீட்டுக்கு போய்விட்ட மனைவியின், உடுத்தி களைந்த புடவைகளை போட்டு, அதன் மீது படுக்கும் கணவன்களாக நிறைய பேர் உள்ளனர். கணவனின் அழுக்கு சட்டையை வீட்டுக்குள் போட்டு திரியும் மனைவிமார் நிறைய பேர் உள்ளனர். பரஸ்பரம் காதல் இருந்தால், நாற்றம் சுகந்தமாகும்.
உன் மனைவியை பொறுத்தவரை, 'அப்லுாட்டோபோபியா' என்ற மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறாள். இவ்வகை போபியா உள்ளவர்கள் குளிக்க, முகம் கழுவ, கை கால் சுத்தம் செய்ய பயப்படுவர். இவ்வகை போபியா ஆண்களை விட, பெண்களுக்கு அதிகம்.
உன் மனைவிக்கு நாடிதுடிப்பு அதிகரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், மயங்கி விழுதல், இதய படபடப்பு, சூடாய் அல்லது குளிர்ச்சியாய் உணர்தல், கை கால் நடுக்கம், திடீர் வியர்வை, வாய் உலர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என கவனி.
மனைவி குளிக்காமல் இருக்கிறாள் என்ற ஒற்றை காரணத்துக்காக, விவாகரத்து கொடுக்காது, குடும்பநல நீதிமன்றம்.
போபியா தவிர, பெரும்பாலான இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள், சுயசுத்தம் பேணுவதில் அசட்டையாக உள்ளனர். நீ, இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும் பெண், குற்றங்குறைகளுக்கு அப்பாற்பட்டவளாய் இருப்பாள் என்பது என்ன நிச்சயம்...
இரண்டாம் கல்யாணம் பேரானந்தத்தை தரும் என்பது, நீர்குமிழி மாயை. மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்து போ. மனைவி விரைவில் குணமடையவும், வாழ்வில் சந்தோஷம் பூக்கவும் வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
