தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜன 29, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அக்காவுக்கு —

உங்களது அன்பு தங்கை எழுதிக் கொள்வது. எனக்கு வயது 49. கல்யாணமாகி, 31 வருடங்கள் ஆகி விட்டன. 30 வயதில் ஒரு பெண்ணும், 26 வயதில் அடுத்த பெண்ணும், 22 வயதில் மூன்றாவது பையனும் உள்ளனர். என் கணவருக்கு வயது 53. நாங்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம். என்னவரும் ராமனாகவே வாழ்ந்து வந்தார். எங்கள் வாழ்வில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான், வினையே ஆரம்பம் ஆனது. இரண்டு பெண்களுக்கும் கல்யாணமாகி, மூன்று பேத்திகள் உள்ளனர். பையன் மட்டும் படித்து கொண்டிருக் கிறான். வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமே.

நாங்கள் எங்காவது விசேஷங்களுக்கு வெளியூர் சென்றால், அவரது ஒன்றுவிட்ட தம்பியும், அவன் மனைவியும் எங்களுடன் காரில் வருவர். இதுவே, எனக்கு எமனாக வந்து விட்டது. அவள் பார்வையிலே, என் கணவரை வளைத்து போட்டு விட்டாள். அதனால், எங்களுக்குள் சண்டை வந்து கொண்டே இருந்தது. இதனால், ஒன்றும் ஆகப் போவதில்லை என விட்டு விட்டேன்.

ஒருமுறை, என் மகளை ஊரில் கொண்டு விட சென்று விட்டு, நான்கு நாள் கழித்து வந்தேன். அப்போது, என் கணவரும், அவளும் போனில் பேசி இருக்கின்றனர். பின், என்னை எங்காவது ஊருக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார் என் கணவர். ஆனால், நான் ஒரு சில நாட்களிலேயே இவர்கள் போனில் பேசுவதை கண்டுபிடித்@தன். பின், இரு மாதங்கள் வரை, என்ன செய்வது என தெரியாமல், அழுதழுது தவித்தேன். மூன்று வருடங்களுக்கு முன், ஒரு நாள், என் கணவரின் தம்பி கடைக்கு போன் செய்து, 'தப்பு எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், எங்களுடன் குடும்பமாக வருவதை தவிர்த்து விடு...' என்று சொன்னேன்.

(இதற்கிடையில் ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் சொல்ல வேண்டும். அவள், தன் கணவன், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவளை சந்தேகப்படாமல் இருக்க, அவனை ஆன்மிகத்தில் நுழைத்து விட்டாள்.)

இதனால், என் கொழுந்தன் அவளை நம்புகிறான். என்னிடமே இதையே தான் சொன்னான். நான் சொன்னதை, அவன் சோதித்துப் பார்க்காமல், நான் பேசியதை அவளிடம் கூறி விட்டான். அவளும், அன்றே என் கணவரிடம் கூறி விட்டாள். அன்று மதியம் வரை, நானும், என் கணவரும் நன்றாகத்தான் இருந்தோம். அன்று மாலையில் இருந்து, ஆறு மாதங்களாக என்னுடன் பேசவே இல்லை. என் கொழுந்தனும், தன் அண்ணனுடன் பேசுவதை நிறுத்தி விட்டான். எங்களுடன் காரில் எங்கும் வருவதும் இல்லை. இதுவே, எனக்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது.

நாங்கள் எந்த விசேஷ வீட்டிற்கு (என் கணவர் வழி சொந்தம்) போக வேண்டும் என்றாலும், இரண்டு பேருமே போக வேண்டிய சூழ்நிலை. அவளால் வர முடியவில்லை என்றால், உடனே என் கணவருக்கு போன் செய்து, நான் தான் அவளை கூப்பிட்டு வர வேண்டாம் என்று, அவள் புருஷனிடம் சொல்லியதாக கூறி விடுகிறாள். இதனால், என் கணவர், என்னிடம் வந்து கோபப்படுவார். அதன்பின் ஒரு மாதமாக எங்களுக்குள் பேச்சு வார்த்தை இருக்காது. அப்பப்ப என் உடம்பு மட்டுமே தேவை. எனக்கு எதுவுமே வாங்கித் தருவதில்லை. பேசாமல் இருப்பதைத் தான், தாங்க முடியவில்லை.

முப்பத்தியோரு வருடமாக, கூட வாழ்ந்து வரும் மனைவியை புரிந்து கொள்ளாமல், மூன்று வருடமாக போனில் பேசுபவளின் சொல் கேட்டு, என்னை எந்தளவுக்கு படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு பாடாய் படுத்துகிறார். நான் என் கொழுந்தனிடம் பேசியது ஒரு முறைதான். ஆனால், என்னையும், என் கணவரையும் பிரிக்க வேண்டும் என்பதற்கு, அவள் கணவனிடம், 'இப்படி சொன்னேன், அப்படி சொன்னேன்...' என்று சொல்லி சொல்லியே, என் கணவனிடம் இருந்து என்னை பிரிக்கிறாள். இது, எங்கள் மூவருக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

இந்த பிரச்னைக்கு முடிவுதான் என்ன? என் சாவு தான் முடிவா? எனக்கே தெரியவில்லை. நான் சாக வேண்டும் என நினைப்பேன். இப்படி தப்பு பண்ணியவளே நன்றாக வாழும் போது, நாம் ஏன் சாக வேண்டும் என்ற எண்ணம், என்னை மாற்றி விடும். எங்காவது முதியோர் இல்லம் சென்று விடுவோமா என்றால், யாருடனோ ஓடி விட்டதாக கூறிவிடுவரோ என்ற பயம்.

நாங்கள் இருவரும், உனக்கு நான், எனக்கு நீ என ஒற்றுமையாக இருக்க வேண்டிய இந்த வயதில் இப்படி இருக்கிறோம். வாழ்க்கையில் பிரச்னை என்றால், தாங்கிக் கொள்ளலாம்; ஆனால், பிரச்னையே வாழ்க்கை என்றால், என்ன தான் செய்வது?

நீங்கள் தரும் பதில், என் கணவரை எந்த விதத்திலும் அசிங்கப்படுத்துவதாகவோ, அவமானப் படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. உங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் உடன்பிறவா சகோதரி.


அன்புள்ள சகோதரிக்கு —

பெரும்பாலும், 25 வயது மணமான பெண் களுக்கு வரும் பிரச்னை, உனக்கு ஐம்பது வயதில் வந்திருக்கிறது. உன், 53 வயது கணவர் பெரும் பணக்காரர். ஊரின் பிரபல புள்ளிகளில் ஒருவர். அவரிடம் கார் இருக்கிறது. பத்து வர்ணங்களில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருக்கிறார். இரு மகள்களை கட்டிக் கொடுத்து விட்டார். மெனோபாஸ் தாண்டிய மனைவி. இவ்வளவு பிளஸ் பாயின்ட் உள்ள கிழவனை வளைத்துப் போடவே முயற்சிப்பர் தவறான பெண்கள்.

ஒன்றுவிட்ட தம்பியின் மனைவியுடன் தான், உன் கணவர் தவறான உறவு வைத்திருக்கிறார் என நினைக்காதே. 20 - 35 வயதுகளில் உள்ள ஏழெட்டுப் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பார் என நம்புகிறேன். வீட்டில் நீயும், உன் கணவரும் மட்டும்தான். தனிமை குற்ற எண்ணங்களின் தொழிற்சாலை. அதுவும், நீ, மகள்கள் வீடுகளுக்கு போய் விட்டால், உன் கணவருக்கு கிடைப்பது உல்லாசத் தனிமை.

உன் கொழுந்தனை அவனது மனைவி, வலிய ஆன்மிகத்துக்குள் புகுத்தி விட்டதாக எழுதியிருக் கிறாய். மனைவியின் துர்நடத்தை கண்டு மனம் பொறுக்காமல், ஆன்மிகம் போனானோ அல்லது கணவன் ஆன்மிகத்திற்கு போனதும், சுதந்திரமாய் கள்ள உறவு புகுந்தாளோ?

உன் கணவனை, நீ பொருளாதார ரீதியாய் சார்ந்திருக்கிறாய். 31 வருடம் பயன்படுத்திய, பழைய பொருளாக உன்னை பார்க்கிறார். இன்றல்ல நேற்றல்ல, 31 வருடங்களாகவே உன் கணவர் ஒரு கலப்படமற்ற சுயநலவாதிதான். தன் சுகம் மட்டுமே அவருக்கு முக்கியம்.

நடப்பது, கணவன் - மனைவி - கள்ள உறவுப் பெண் என மூவருக்கும் இடையே நடக்கும் யுத்தம் என எழுதியிருக்கிறாய். உன் கை, கால்களை கட்டி, வாயில் பிளாஸ்திரி ஒட்டி நிராயுதபாணியாய், போர் முனையில் நிறுத்தியிருக்கின்றனர். அவர்கள் கையிலோ சகலவிதமான ஆயுதங்கள். இதென்ன நியாயமில்லாத யுத்தம்.

என் பதில், உன் கணவரை அசிங்கப்படுத்து வதாக, அவமானப்படுத்துவதாக இருக்கக் கூடா தென்று கட்டளையிட்டிருக் கிறாய். உன்னுடைய இந்த எண்ணம் தான், உன்னை படுகுழியில் தள்ளுகிறது. உன் கணவர், உன்னை வேலைக்காரியாய் பாவிக் கிறார். எந்த கள்ள உறவு பெண் பேச்சையோ கேட்டு, உன்னுடன் பல மாதங்கள் பேசாமல் இருந்திருக்கிறார். உன்னை டன் கணக்கில் அசிங்கப்படுத்துகிறார், அவமானப்படுத்துகிறார். தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் தேவை. எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.

அடுத்து, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சென்டிமென்ட் பார்க்காமல், கணவரின் திருவிளையாடல்களை, மகள்கள், மருமகன்கள், மகன் கவனத்துக்குக் கொண்டு போ. கலகம் பிறந்தால் வழி பிறக்கும் கண்ணம்மா. அவர்கள் உன் கணவனை, தகுந்த விதத்தில் கண்டிக்கட்டும். அடியாத மாடு பணியாது. நீ அடுத்த ஐந்து வருடங்கள் அமைதி காத்தால், கள்ள உறவு பெண்கள், உங்கள் குடும்பத்தையும், குடும்ப சொத்தையும் ஏப்பமிட்டு விடுவர். உடனடி கண்டிப்பு அவருக்கும் நல்லது, அவரது நற்பெயருக்கும் நல்லது.

உன் மகள்களை விட்டு, ஒன்றுவிட்ட தம்பி மனைவிக்கு மண்டகப்படி நடத்தச் சொல். இனி, அவள், உன் கணவனின் நிழல் பக்கம் கூட ஒதுங்கக் கூடாது. வீட்டில் வேலைக்காரி பாவனையில் இருக்காதே; மகாராணி பாவனையில் இரு. மகள்கள், உறவினர் வீடுகளுக்கு, நீ அடிக்கடி போவதை தவிர்த்து, அவர்களை, சுழற்சி முறையில் வீட்டுக்கு வரவழை. வருடத்தின், 365 நாட்களும், உன் வீடு கலகலப்பாய் இருக்கட்டும். உன் கணவனுக்கு எந்த விதத்திலும் பரிச்சயமாகும் பெண்களை, 'ஸ்கிரீனிங் ' செய். சொத்துகளை பாகப் பிரிவினை செய்யச் சொல். மொத்த சொத்தும், உன் புருஷன் கையில் இருந்தால், கள்ள உறவு பெண்களின் கண்கள் உறுத்தும். கணவனின் கையில் பணப் புழக்கத்தை குறை.

விவாகரத்து என்று பூச்சாண்டி காட்டினால், நானும் தயார் எனக் கூறு. சட்டப்படி உனக்கு சேர வேண்டியவற்றை பெற்று, சுதந்திர வாழ்க்கை வாழலாம். நீரழிவு நோய் முற்றினால், காயம் ஆறாத விரலை, அறுவை சிகிச்சை செய்து அகற்று வதில்லையா? ஊர் மேயும் மாட்டை குளிப்பாட்டி, புல்லுக்கட்டு போடாதே.

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us