தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரிக்கு—

உடன் பிறவா சகோதரன் எழுதிக் கொள்வது. எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவன். என் வயது 54. 12ம் வகுப்பு வரை படித்தவன். எனக்கு கல்யாணமாகி, 22 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பையன், கல்லூரியில் படிக்கிறான். என் மனைவி அதிகம் படிக்காதவள். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் தான் கல்யாணம் செய்து கொண்டேன்.

காரணம், நான் இதற்கு முன் பார்த்த வரன்களில், ஜாதகம் சேர்ந்து இருந்தால், பெண்ணை பிடிக்காமல் இருக்கும்; எனக்கு பிடித்திருந்தால் ஜாதகம் சேராது. எனவே, ஜாதகம் பார்க்க வேண்டாம், கடவுளிடம் பூ போட்டால் போதும் எனக் கூறி விட்டேன்; அவர்களும் ஒப்புக் கொண்டனர். எனக்கும், அவளை பிடித்திருந்தது; அவளுக்கும், என்னை பிடித்ததாகக் கூறினாள். எங்களது திருமணம் ஒரே மாதத்தில் நிச்சயிக்கப்பட்டு, திருமணமும் நடந்தேறியது.

ஆரம்பத்தில், என்னிடம் அன்பாக நடந்து கொண்டாள். என் தாயாருக்கும், அவளுக்கும் சண்டை வந்து கொண்டே இருந்தது. இந்த பிரச்னைக்கு முடிவாக, அவளை எனக்கு தெரிந்த ஒருவரின் ஆபீசில் வேலைக்கு அனுப்பினேன். ஒரு வாரத்திற்குள்ளாகவே, நான் தனியாக சாப்பிடும் போது, அவளது அருகாமையை இழந்து, தவித்து, வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி, வேலையை விட்டு நிறுத்தி விட்டேன்.

இதற்கிடையில் அவள் அடிக்கடி பிடிவாதம் பிடித்து, அவளின் அம்மா மற்றும் தங்கைகளை பார்க்க வேண்டுமென்று, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போய் வருவாள். நான் அனுப்பவில்லை எனில், எப்போது பார்த்தாலும் முகத்தை உம் என்று வைத்து, அழுது கொண்டே இருப்பாள். எனவே, வேறு வழியின்றி தனியாகவே அனுப்பி விடுவேன்.

இப்படி அவள் போய் வந்து கொண்டிருக்கும் போது, அவள் அம்மாவிடம் இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூறி, அவர்களும், இவளுக்கு கண்டதை கூறி, தனிக் குடித்தனம் என்ற முடிவுக்கு, கொண்டு வந்து நிறுத்தி விட்டாள். என்னை, என் குடும்பத்திடம் இருந்து பிரித்து வைத்தாள். நானும், இவளின் ஆசைக்கிணங்கி, இன்னல்களுக்கு ஆளாகினேன்.

இப்படியே, மூன்றாண்டு ஓடி விட்டது. மகனை எல்.கே.ஜி.,யில் சேர்க்க வேண்டும் என கூறினாள் அவள். நானும் சம்மதித்து, மூன்று வயதே ஆன குழந்தையை பள்ளிக்கு அனுப்பினேன்.

அவனும் எப்படியோ படித்து, மூன்றாம் வகுப்பு வரை வந்து விட்டான். என் மனைவி திருமணத்திற்கு முன், மதுரையில், பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த காரணத்தால், அவள் மீண்டும் வேலைக்கு போக வேண்டும் என கூறினாள். நானும் அடிக்கடி அவள் ஊருக்கு செல்வதை தடுக்க நினைத்து, என் மகன் படிக்கும் பள்ளியிலேயே ஒரு அப்ளிகேஷனை கொடுக்குமாறு கூறினேன்; அவளும் கொடுத்தாள்.

ஆசிரியை பணி தெரிந்ததால், ஒரு சில மாதங்களில், என் மகன் படிக்கும் பள்ளியிலேயே வேலை கிடைத்தது. தான் சம்பாதிக்கும் நிலை வந்தவுடன், அவள் என்னை கூட கேட்காமல், எங்கு வேண்டுமானாலும் போக ஆரம்பித்தாள். தடுத்தால், என்னை மரியாதை இல்லாமல் பேசுவதும், அடிக்கடி சண்டை போட்டு, குழந்தையை என்னிடம் விட்டு விட்டு அவள் அம்மா வீட்டிற்கு, போய் விடுவாள்.

என் மாமியார் Œரியான கூனி. என் ஊருக்கு பக்கத்திலேயே குடிவந்து விட்டார். என் மனைவியும், மாமியாரும் கூடி சதி பண்ண வசதியாய் போய் விட்டது. நான், என் குழந்தையை வைத்துக் கொண்டு, தனியாக கஷ்டப்பட்டு வளர்த்தேன். என் மகன் ப்ளஸ் 2 படிக்கும் போது, பாதியில் ஓர் ஆண்டு காலம் என்னிடம் விட்டுவிட்டு போய் விட்டாள். அவன் படிக்கும் ஸ்கூலில் அவள் வேலை பார்ப்பதால், அவனது மிஸ் மற்றும் பிரின்சிபால், நண்பர்கள் அவனிடம் குடும்ப பிரச்னைகளை பேசி, தொல்லை கொடுப்பர். சில சமயத்தில் அவனது நண்பர்கள், அவனுக்கு ஆறுதலும் கூறுவர்.

அப்போதெல்லாம் அவன், என்னிடம் இதை கூறி, வருத்தப்படுவான். எப்படியோ, ப்ளஸ் 2 படித்து, பாஸ் செய்தான். அதன்பின், என் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து, மீண்டும் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்தேன். என் மகனை பி.எஸ்.சி., படிக்க, கல்லூரியில் சேர்த்தேன்.

இரண்டு ஆண்டுகள் சென்றதும், அவன் மூன்றாமாண்டு படிக்கும் தருவாயில், என்னிடம் வேண்டுமென்றே சண்டை போட்டு, என் தெருவுக்கு பக்கத்து தெருவில், அவளது தாயார் உதவியுடன் குடியேறினாள். என் முன்னே யாருடனாவது பைக்கில் சென்று ஸ்கூலில் இறங்குவது, பின் அங்கிருந்து யாருடனாவது, பைக்கில் வீட்டிற்கு வருவது என இருந்தாள். இதை நான் கேட்டால், என் மனதில் களங்கம் இல்லை என்று கூறுவாள். நான் அழைச்சுட்டுப் போகிறேன் என கூறினால், 'என்னை பைக்கில் அழைத்துச் செல்பவர், என் வகுப்புக் குழந்தையின் தந்தை. நான் பைக்கிலேயே போய் கொள்கிறேன். நீங்கள், உங்கள் வேலைக்கு போங்கள்...' என கூறுவாள்.

அதன் பிறகு என் மனைவி, என்னைக் கேட்காமல், மகனின் மனதில் நஞ்øŒ ஊட்டி. எம்.சி.ஏ., சேர்த்துள்ளார். சேர்த்த பிறகு தான் என்னிடம் கூறினர். அப்போது நான், வங்கிக் கடன் வாங்கி மகனை படிக்க வைக்கலாம், மாமியார் உதவியில் படிக்க வேண்டாம் என கூறினேன். அவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

தற்சமயம், என் மாமியார் வீட்டில் இருந்து கல்லூரி போகிறான் என் மகன். என்னிடம் போனில் கூட பேசுவதில்லை. நான் பேசினால் ஓரிரு வார்த்தையில் போனை வைத்து விடுகிறான். என்ன நடக்கிறது என தெரியவில்லை. எப்போதும் போல், வாரம் ஒருமுறை அவள் அம்மா வீட்டிற்கு சென்று, என் மகனை பார்த்து வருவாள் என் மனைவி. என்னால் அங்கு செல்ல மனம் இடம் கொடுப்பதில்லை.

நானும் எவ்வளவோ விட்டு கொடுத்து விட்டேன். என் மானம், மரியாதை, கவுரவம் எல்லாம் இழந்து, கடைசி கட்டத்தில் உள்ளேன். பாசம் என்னை ஏமாற்றி விட்டது. இன்னும் சொல்லப் போனால் உங்களிடம் விவரமாக கூற வேண்டும், ஆனால், எழுத இடம் இல்லை. என் தாயாரும் உடல்நிலை குறைவால், 72 வயதில் என்னுடன் போராடி, களைத்து விட்டார். அவர்களாலும் வேலை செய்ய இயலாது. என் தந்தை இறந்து, 12 ஆண்டுகள் ஆகி விட்டன. எனவே, உங்களின் அறிவுரைக்காகவும், அடுத்து என்ன முடிவு எடுப்பது எனவும் உங்களின் பதிலை வைத்துதான் செய்ய வேண்டும். உங்கள் சகோதரனின் கண்ணீர் கதையை படித்து, உடன் எனக்கு ஒரு நல்ல முடிவை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
அன்பு சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு —

பனிரெண்டாம் வகுப்பு படித்த நீங்கள், 12ம் வகுப்பு படித்த மனைவியை அதிகம் படிக்காதவள் என கூறியிருக்கிறீர்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்து கொள்ளும், ஆர்தடக்ஸ் குடும்பத்தில் பிறந்த நீங்கள் தேவையைக் கருதி, ஜாதகப் பொருத்தம் பாராமல், உங்களது மனைவியை மணந்துள்ளீர்கள். இதை பெரிய தியாகமாகவும், இந்த தியாகத்தால், உங்களுக்கு உண்மையில் அமைய வேண்டிய உன்னத மனைவி அமையவில்லை என்பதாகவும், உங்கள் கடித வெளிப்பாடு உள்ளது.

மாமியார் - மருமகள் பிரச்னைகளை தீர்க்க, உங்கள் மனைவியை வேலைக்கு அனுப்பி, ஓரே வாரத்தில் அந்த வேலையை விடவும் செய்துள்ளீர்கள்.

ஒரே வாரத்தில், இரு தவறான முடிவுகளை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுத்துள்ளீர்கள். இந்த கால கட்டத்திலேயே மனைவிக்கு உங்கள் மீதான மதிப்பீடு தாறுமாறாய் சரிந்திருக்கும்.

உலகத்தில் எல்லா அம்மாகாரிகளும், திருமணமான தன் மகள், அவள் கணவனுடன் தனிக்குடித்தனம் போகவே விரும்புவர்; உங்கள் மாமியாரும் அப்படித்தான்.

கடிதம் முழுக்க மனைவி, அம்மா வீட்டுக்கு போவதையே பெரிய கிரிமினல் குற்றமாக எழுதியிருக்கிறீர்கள். தவிர நீங்களும், உங்கள் மனைவியும் போடும் வாய் சண்டைகள் அனைவரின் வீட்டிலும் நடப்பதுதான்.

உங்கள் ஒரே மகன், ப்ளஸ் 2 படிக்கும் போது உங்கள் மனைவி உங்களை ஓராண்டு காலம் பிரிந்து இருந்திருக்கிறார். இத்தனைக்கும் அந்த ஓராண்டு, உங்கள் மனைவி, மகன் படித்த பள்ளியில்தான் வேலை பார்த்துள்ளார். உங்களைத்தான் உங்கள் மனைவி பிரிந்திருந்தாரே தவிர, மகனை அல்ல. உங்கள் மனைவியும், மகனும் பாசத்தை பரிமாறித்தான் வந்துள்ளனர்.

மகன் ப்ளஸ் 2 முடித்ததும் மனைவியுடன் சமாதானம். மகன் பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படிக்கும் போதோ, மீண்டும் பிரிந்து விட்டீர்கள். பிரிந்த மனைவி, தூர தேசத்திற்கு செல்லவில்லை. உங்களது தெருவுக்கு பக்கத்து தெருவில் தாயாருடன் குடியிருந்திருக்கிறார்.

உங்களின் முன், அந்நியர் பைக்கில், உங்கள் மனைவி போய் வந்தது உங்களை வெறுப்பேற்றத்தான்.

இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் போது, உங்களுடன் இருந்த மகன், அம்மாவுடன் போய் சேர்ந்து கொண்டு, எம்.சி.ஏ., படிக்கிறான். இது அவனுக்கும், அவனது அம்மாவுக்கும் இருக்கும் நீண்டநாள் அண்டர்ஸ்டாண்டிங்கை காட்டுகிறது. பையன்கள் எப்போதுமே அம்மா பிள்ளைகள்தான்.

நீங்களும், உங்களது மனைவியும் நன் நடத்தைக்காரர்கள். மகனின் படிப்புக்கு கூட, அவர் உங்களை தொந்தரவு செய்யவில்லை. அவர், விரும்பியதெல்லாம் மன நிம்மதிதான். இப்போதும் உங்களது மனைவிக்கு உங்கள் மேல் கொள்ளை கொள்ளையாய் அன்பிருக்கிறது. உங்களது பக்கத்தில் வந்தால், உங்களை அறியாமல் உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் அவரை காயப்படுத்தி விடுகின்றன.

வறட்டுப் பிடிவாதத்திலிருந்து இறங்கி, மனைவி, மகனிடம் சரணாகதி அடையுங்கள். மீதி வாழ்நாள் அர்த்தப்பூர்வமாகும். பதிலில் ஏதாவது வரிகள் உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஈகோவை சாக்கிட்டு, எந்த கணவன் - மனைவியும் பிரிந்து விடக் கூடாதென்பதே என் பதைபதைப்பு.

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us