தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு—

எனக்கு வயது 22. நான் நாகர்கோவிலில் ஒரு கடையில் வேலைப் பார்த்து வந்தேன். எனக்கும், அதே கடையில் வேலை பார்த்த ஒருவருக்கும் காதல் இருந்தது. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தோம். இதை, கடையில் இருந்த சில பணியாட்கள் பார்த்தனர்; ஆனால், முதலாளியிடம் சொல்லவில்லை. காரணம், பார்த்த நபர்களிடம் நான் வருத்தப்பட்டு பேசினேன். இந்நிலையில், இந்த விஷயத்தை, முதலாளியிடம் யாரோ சொல்லி விட்டனர். என்னை, என் அத்தை மகனுக்கு பேசி முடித்து வைத்தனர்.

எனக்கு வேலை போய் விட்டது. என்னுடன் நெருக்கமாக இருந்த நபர் மட்டும் அதே கடையில் வேலை பார்க்கிறான். தண்டனை எனக்கு மட்டும் தானா... அவனுக்கு இல்லையா? இறுதியில், என் அத்தை மகன் என்னை வெறுக்கிறான். எனக்கு தாயான நீங்கள், எனக்கு நல்ல முடிவை வழங்குங்கள்.

முதலாளி இனமான ஜாதி எனக் கூறி, அவனுக்கு ஏன் தண்டனை வழங்கப் படவில்லை? தண்டிக்கப்பட வேண்டியது பெண்கள் மட்டுமா... ஆண்கள் இல்லையா?

அன்பு மகளான எனக்கு, தாங்கள் தான் நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும்.

இப்படிக்கு,
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

ஜோடி சேர்ந்து திருடினோம். ஒருவருக்கு தண்டனை, மற்றொருவருக்கு விடுதலையா என கேட்டிருக்கிறாய்.

உன் கடிதத்தை ஏழெட்டுத் தடவை முழுமையாக வாசித்துப் பார்த்தேன். பணிபுரியும் இடத்தில், செக்சில் ஈடுபட்டு, பிறருக்கு காட்சிப் பொருள் ஆனோமே என்ற குற்ற உணர்ச்சி உன்னிடம் சிறிதும் இல்லை. காதல் தப்பில்லை; ஆனால், காதல் என்ற சாக்கில், காம தகனத்தில் ஈடுபடுவதுதான் தப்பு. உன்னுடைய காதல் வெறும் இனக் கவர்ச்சிக்குரியது அல்லது பரஸ்பரம் ஏதோ எதிர்பார்த்து காதலில் ஈடுபட்டுள்ளீர்கள். உனக்கு ஏற்கனவே, அத்தை மகனை மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கும் நிலையில், ஏனிந்த அவசர கண்காட்சி உறவில் ஈடுபட்டாய்? நீ காதலித்தவன் நல்லவன் என்றால், அவனும் வேலையை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும். புதிய பணியில் சேர்ந்து, தன் பெற்றோர் மூலம், உன்னை பெண் கேட்டிருக்க வேண்டும். செய்யவில்லையே...

உன்னை வேலையிலிருந்து முதலாளி நீக்கியது சரிதான். நீ வேலையில் தொடர்ந்தால், உன் காதலன் உன்னுடன் தொடர்ந்து உறவு வைத்து, கர்ப்பவதி ஆக்குவான் அல்லது உங்கள் உறவை கண்கூடாய் பார்த்த கடை நபர்கள், உன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள, பிளாக் மெயில் பண்ணுவர்; இது தேவையா? முதலாளி பெரும் முதல் போட்டு கடை நடத்துவது லாபம் பார்க்கவா? தவறான உறவுகளுக்கு இடம் தானம் செய்யவா?

தவறு செய்த இருவரில், ஒருவரை தண்டிக்காமல் விட்டது தவறுதான். இது, ஆணாதிக்க சமுதாயம். தவறு செய்யும் பெண்களுக்கு சாட்டையடியும், தவறு செய்யும் ஆண்களுக்கு பாராட்டு பத்திரமும் கொடுக்கிற சமுதாயம். இந்நிலை என்றைக்கும் மாறாது என்றே தோன்றுகிறது. பெண்களாகிய நாம்தான் ஆண்களுடன் பழகும் விஷயத்தில் படுஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கவிஞர் நா.முத்துக்குமார் பாடல் ஒன்றில், பெண்களை கண்ணாடிகளாகவும், ஆண்களை கருங்கல்லாயும் குறிப்பிட்டிருந்தார்; இது கசப்பான உண்மை. இது புரியாமல், பெண்ணியம் பேசுவதில் பயனில்லை.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உன்னுடைய சபல குணத்தை அடியோடு விட்டொழித்து, முறையான திருமண வாழ்விற்கு காத்திரு.

வேறொரு கடையில் பணியில் சேர். பணியில் இருந்து கொண்டே தொலைதூரக் கல்வி மூலம் விட்ட படிப்பைத் தொடர். சக ஆண் ஊழியர்களிடம் நெருங்காமலும், விலகாமலும் பழகு. 'இந்த பெண் அற்ப சந்தோஷங்களுக்கு கிடைக்க மாட்டாள்!' என்ற செய்தியை, உன் முகத்தில் தொங்க விடு. இது தண்ணீர் பாம்பு, இது சாரைப் பாம்பு, இது நல்லபாம்பு, இது மலைப்பாம்பு என, ஆண்களை பிரித்தறியும் திறமையை கைக்கொள்.

இறைவன் நம்மிடம், விலையுயர்ந்த வைர கற்களை கொடுத்திருக்கிறான். அதை, நாம் எடைக்கு போட்டு பேரீச்சம்பழம் வாங்கித் தின்கிறோம். நம் கைகளில், போன்சாய் நந்தவனங்கள். ஆனால், நாமோ தலையில் சூடிக்கொள்ள எருக்கம்பூவும், பூநாகம் ஒளிந்திருக்கும் தாழம்பூவும் தேடுகிறோம். ஏழாம் வானம் பறக்க சிறகுகள் இருக்க, மரப்பொந்தில் கொழுத்த புழு தேடுதல் நியாயமா?

மிருகங்களின் புணர்ச்சி விதி வேறு, மனிதரின் புணர்ச்சி விதி வேறு மகளே...

நல்லதொரு ஆண் துணை கிடைக்க, ஐம்புலன்களை திறந்து வைத்து, இறை நம்பிக்கையோடு காத்திரு!

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us