ராடாருக்கும், 'டேக்கா' கொடுக்கும், 'மர்மகோவா' போர்க் கப்பல்!
ராடாருக்கும், 'டேக்கா' கொடுக்கும், 'மர்மகோவா' போர்க் கப்பல்!
PUBLISHED ON : டிச 11, 2016

நவ., 26, 2008ல், அரபிக்கடல் வழியாக வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மீது, பயங்கர தாக்குதலை நடத்தினர். அதை தொடர்ந்து, கடல் பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தது.
மேலும், இந்திய கடற்படையை வலிமைப்படுத்துவதற்காக, 'பிராஜக்ட் 15 பி' என்ற திட்டம் தீட்டப்பட்டு, 29 ஆயிரத்து 700 கோடி ரூபாயில், அதிநவீன போர்க்கப்பல்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, முதல் கப்பலான, 'விசாகப் பட்டணம்' கட்டப்பட்டு, கடந்த, 2015ல், ஏப்ரல் மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏவுகணை நாசகாரி கப்பலான, 'மர்மகோவா' எனும் அதிநவீன போர்க் கப்பல் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
கப்பலின் எடை, 7,300 டன்; 163 மீ., நீளம் கொண்டது; மணிக்கு, 30 நாட்டிகல் வேகத்தில், (உத்தேசமாக, 56 கி.மீ.,) செல்லும். இதில், 50 அதிகாரிகள், 250 மாலுமிகள் பணியில் இருப்பர்.
உலக அளவில் உள்ள, நவீன போர்க் கப்பல்களுக்கு ஈடானது. இந்த கப்பல், 'ராடார்' கண்காணிப்பில் சிக்காது. இதிலிலுள்ள இத்தாலி தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன சென்சார்கள், எதிரி ஏவுகணைகளை தானியங்கி முறையில் கண்டறிந்து, துல்லியமாக தாக்கி அழிக்கும்.
மேலும், 300 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளையும், குறி தப்பாமல் தாக்கி, துவம்சம் செய்யும் வல்லமை மிக்க, 'பிரமோஸ்' ஏவுகணை, இக்கப்பலில் பொருத்தப் பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
'மர்மகோவா' குறித்து கருத்து தெரிவித்த கடற்படை அதிகாரிகள், '68 சதவீத இந்திய தொழில்நுட்பத்தில், இக்கப்பல் உருவாகி உள்ளது. சில கருவிகள், வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்டவை, கடந்த, ஆறு ஆண்டுகளில், எட்டு அதிநவீன போர்க்கப்பல்கள், கடற் படையில் சேர்க்கப்பட்டுள்ளன. மிக விரைவில், மேலும், ஐந்து போர்க்கப்பல்கள், இந்திய கடற்படையை வலுப்படுத்த உள்ளன...' என்று கூறினர்.
— ஜோல்னாபையன்.
