PUBLISHED ON : ஆக 22, 2021

ஒரு நபருக்கு ஒரு தலை இருப்பது தான் சாத்தியம். அதிசயப்பிறவிகள் சில, இரட்டைத் தலையுடன் பிறக்கலாம். ஆனால், ராமாயண கதாபாத்திரமான, ராவணனுக்கு, 10 தலைகள் உண்டு. இதனால், இவனை, தசக்கிரீவன் -10 தலை உடையவன், என்பர்.
தசம் என்றால், 10. கிரீவம் என்றால் தலை. இவனை தசகந்தன் -10 தொண்டை உடையவன் என்றும், தசமுகன் - 10 முகம் உடையவன் என்றும் சொல்வதுண்டு.
பிராமணர் பிரிவைச் சேர்ந்தவன்; மாபெரும் சிவ பக்தன், ராவணன்.
சிவ பக்தர்களில் பலர், ராவணனை மிகவும் மதிப்பர். அதற்கு அடையாளமாக, ராவணனுக்கு உத்தரபிரதேசத்திலுள்ள பிஷ்ரக்ஹ் மற்றும் கான்பூரில் கோவில் கட்டியுள்ளனர். மத்திய பிரதேசத்திலுள்ள விதுஷா மாவட்டம், ராவண கிராமம், குஜராத்தில் மண்டூர் (ஜோத்பூர்) ஆகிய இடங்களிலும் கோவில்கள் உண்டு.
இவற்றில் கான்பூர் கோவில், ஆண்டுக்கு ஒருமுறை தசரா அன்று மட்டுமே திறக்கப்படும். தசரா அன்று, ராவணன் வதம் செய்யப்பட்டதாக, இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
வடமாநிலங்களில் தசரா அன்று, ராவணனின் பொம்மைகளை எரிப்பர். ஆனால், இந்தக் கோவிலில் மட்டும், ராவணனுக்கு சிறப்பு பூஜை செய்வர்.
குஜராத்திலுள்ள கோவிலில், பிராமணர்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், தங்களை ராவணனின் வழித்தோன்றல்களாக கருதி, தசரா அன்று தர்ப்பணம், சிரார்த்தம் செய்வர். பிண்டம் கரைத்து அஞ்சலி செலுத்துவர்.
சாகாவரம் பெற விரும்பிய ராவணன், சிவனை எண்ணி தவமிருந்து, 10 தலை பெற்றான்.
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்கள் மற்றும் வேதாந்தம் - சடங்குகள், மந்திரங்கள்; வைசேஷிகம் - ஒரு பொருன் சிறப்புத்தன்மையை ஆய்வு செய்தல்; பாட்டம் - வேதமே தெய்வம் என்ற வாதம்; பிரபாகரம் - வேத ஆராய்ச்சி; பூர்வ மீமாம்சை - பூஜை, யாகம் குறித்த அறிவு; உத்தர மீமாம்சை - ஆழமாக சிந்தித்தல் என்ற, ஆறு சாஸ்திரங்கள், அவனுக்கு தலைகளாக அமைந்தன.
எல்லாம் அறிந்தவனுக்கு அடக்கம் வேண்டும். ஆனால், இத்தனையும் இருந்ததால், ஒவ்வொரு தலையிலும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவை ஏறி நின்றதாகவும் வர்ணிப்பர்.
ராவணனின் புகழ், 10 திசைகளிலும் பரவியிருந்ததால், அவன், 10 தலை உள்ளவனாக கருதப்படுவதாக, பாரதிதாசன் சொல்கிறார்.
தமிழகத்தில், புராணங்களின் அடிப்படையில், சிவனை, ராவணன் சுமந்து வரும் வகையில், கைலாய பர்வத வாகன பவனி, எல்லா பெரிய கோவில்களிலும் நடைபெறுகிறது.
தி. செல்லப்பா
