தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எளிமையான பக்தியே போதும்!

எளிமையான பக்தியே போதும்!

எளிமையான பக்தியே போதும்!


PUBLISHED ON : மே 05, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 05, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடவுள் மிகவும் எளிமையானவர். பக்தியாலேயே அவனை அடைய முடியும். பக்தியே முக்திக்கு வழி. பக்தி செய்வது மிகவும் சுலபம். தவம், தியானம், பூஜை போன்றவைகளை விட, மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே பகவானை வழிபடுவது இன்னும் விசேஷமானது. எளிமையாக இருந்தே, எளியவனான கடவுளிடம் பக்தி வைக்கலாம்.

நம்முடைய பூஜை, பக்தி இவைகளை கண்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென் பதில்லை; பகவான் பாராட்டினால் போதும். ஒரு கூடை பூவைப் போட்டு, ஆயிரம் நாமாவால் பூஜை செய்ய வேண்டுமென்பதில்லை; ஒரே ஒரு புஷ்பம் போட்டு, ஒரே நாமாவைச் சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வான். பூஜை செய்வதற்கான பொருட்களை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; மானச பூஜையே போதும்.

வள்ளலார் கூட எளிமையாக வாழ்ந்தவர். எளிய முறையிலேயே ஆண்டவனை பூஜித்தவர். அகல் ஜோதியையே கடவுளாக வழிபட்டார். தெய்வங்கள் ஜோதி வடிவமாகத் தான் சொல் லப்பட்டுள்ளது. 'ஜோதி ஸ்வரூபன்' என்பர். ஜோதி தான் அவனது வடிவம். கடவுள் மன்னிக்கும் குணம் உடையவர். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், உடனே மன்னித்து விடுவான்.

கடவுள், என்றாலே, ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர். இந்த உணர்வு வேண்டும். தினமும் கோவிலுக்குப் போய்த் தான் தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது வீட்டில் இருந்து கொண்டே பக்தி செய்ய முடியாதா என்று யோசிக்கலாம். கோவிலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மனம் மட்டும் தெய்வத்திடம் இருக்க வேண்டும். கோவிலுக்குப் போனால், பலவித ஆரவாரங்களுக்கு இடையில், மனதை பகவானிடம் வைக்க முடியுமா என்பதும் கேள்விக் குறிதான்.

அங்கே தான் பல உறவினர், நண்பர்களை சந்திக்க நேரிடும். அவர்களை பார்த்த பின் சும்மா இருக்க முடியுமா? குசலம் விசாரிக்க வேண்டியிருக்கும்... 'பெண் கல்யாணம் என்ன ஆயிற்று? பிள்ளை படிப்பு என்ன ஆயிற்று? துபாயில் இருக்கும் பெரிய பையன் பணம் அனுப்புகிறானா?' இப்படி, பலவித குடும்ப விஷயங்கள் கேள்வி - பதிலாக ஆகிவிடுகிறது. அப்புறம் மனதை பகவானிடமே வைப்பது என்பது, எப்படி சாத்தியம். சரி, வீட்டிலேயே இருந்து, மனதை, பகவான் பக்கம் திருப்பலாமே என்றால், இது கூட சிலருக்கு சாத்தியமாவதில்லை.

அப்போதும் கூட குடும்ப விவகாரம்... 'சின்ன பையன் ஸ்கூல் போனானா, பெரிய பெண் டியூஷனுக்கு போனாளா, இந்த வாரம் ரேஷன் வாங்கியாச்சா? ஸ்டோர்ல பாமாயில் வந்திருக்கா...' என்று எத்தனையோ கேள்வி - பதில்கள். தெய்வ வழிபாடு, பக்தி என்பது ஒரு பகுதி; குடும்பம், குடும்ப விவகாரம் என்பது இன்னொரு பகுதி. இரண்டையும் கலந்தால், பக்திக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குக்கிராமத்தில், ஓட்டு வீட்டில் வள்ளலார் தவம் செய்து முக்தி பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர், திருவப்பாடி கிராமத்தில் பசுக்களை மேய்த்து, வெட்ட வெளியில் மண்ணால் லிங்கம் செய்து அதன் மீது, பால் கறக்கவிட்டு வணங்கி முக்தி பெற்றார். பூசலார் நாயனார் மனதினாலேயே கோவிலை நிர்ணயம் செய்து, சிவபெருமானை வழிபட்டு சிவ தரிசனம் பெற்றார். இப்படி பல சரித்திரங்கள் உள்ளன.

ஆக, மனிதனுக்கு தெய்வ பக்தி அவசியம் இருக்க வேண்டும். இப்படி பக்தி செய்து நற்கதி அடையும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு பக்தி, பூஜை, வழிபாடு என்பதெல்லாம் தெரியாது; அதனால், அவை இதில் ஈடுபடுவதில்லை. மனிதன், சுலபமான முறையில், தியானத்தின் மூலமே பக்தி செய்து பகவானை அடைய முடியும். இதற்குத் தான் முயற்சி செய்ய வேண்டும்.

***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!

* குறித்த காலத்தில், உயிரைப் பறிக்கும் கடமை கொண்ட யமதர்மராஜனுக்கு, பொறுமைக்குப் பெயர் பெற்ற எருமைக்கடா வாகனமாக அமைந்திருப்பதேன்?

அவன் உயிர்களை மெதுவாகப் பிடிக்க வேண்டும் என்பதால். காக்கும் கடவுள் சீக்கிரம் காக்க, கருடனும், மயிலும்; அழிக்கும் கடவுள் மெதுவாக அழிக்க, எருமைக்கடா.

***

வைரம் ராஜகோபால்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us