PUBLISHED ON : ஜன 08, 2012

சிலந்தி வலையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சிலந்தி பூச்சிகளின் வாயிலிருந்து வெளிப்படும் உமிழ் நீரால் பின்னப்படும் இந்த வலைகள், பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். ஒரு பூச்சியால், இத்தனை நேர்த்தியாக ஒரு வலையை உருவாக்க முடியுமா என்ற ஆச்சரியம் எழும் அளவுக்கு, அது ஒரு இயற்கை அதிசயமாகவே விளங்குகிறது. தனக்கு தேவையான இரையை பிடிப்பதற்கும், பாதுகாப்பாக வசிப்பதற்கும், இந்த வலைகளை சிலந்திப் பூச்சிகள் பயன்படுத்துகின்றன.
இப்போது அது அல்ல விஷயம். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கடந்தாண்டு வரலாறு காணாத அளவுக்கு, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது அல்லவா? அப்போது, அங்கு பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி விட்டன. இந்த வெள்ள நீர் வடிவதற்கு, பல நாட்கள் ஆகி விட்டன. இதனால், அங்கு வசித்த பல உயிரினங்கள், இறந்து விட்டன. ஆனால், சிலந்திப் பூச்சிகள் அனைத்தும், உயிர் தப்பிப்பதற்காக அந்த பகுதிகளில் உள்ள மரங்களின் மீது ஏறி விட்டன.
தண்ணீர் வடிவதற்கு பல நாட்கள் ஆகி விட்டதால், அந்த மரங்களிலேயே, வசிக்கத் துவங்கி விட்டன. இதற்காக அந்த சிலந்திகள் கட்டிய வலைகள், அந்த பகுதிகளில் உள்ள மரங்கள் முழுவதையும் மூடி விட்டது. சிலந்தி வலைகளால் ஆன மரங்களின் தோற்றம், பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக காணப்பட்டது. அங்கு வசித்த மக்கள், 'இதுபோன்ற ஒரு காட்சியை, இதற்கு முன் நாங்கள் பார்த்ததே இல்லை...' என, ஆச்சரியப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்துக்கு, சிறந்த புகைப்படத்துக்கான விருது கிடைத்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
— ஜோல்னா பையன்.
