PUBLISHED ON : அக் 22, 2023

அக்., 23 சரஸ்வதி பூஜை
ஒவ்வொருவரும், தங்கள் திருமண நாளை, தம்பதி தினமாகக் கொண்டாடுவர். உலக அளவில், ஆகஸ்ட், 18ம் தேதி, தம்பதி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளில், தாங்கள் வாழ்ந்த வாழ்வின் இன்ப, துன்பங்களை அசை போட்டு, சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிடுவர், தம்பதிகள். உண்மையில், ஆன்மிக தம்பதி தினம் என்றால், சரஸ்வதி பூஜை நன்னாள் தான்.
சிவன் - பார்வதி, விஷ்ணு - லட்சுமி, பிரம்மா - சரஸ்வதி தம்பதிகளை ஆன்மிகத்தில் பிரதானமாகப் பார்க்கிறோம். இவர்களில், எந்த தம்பதி மிக மிக ஒற்றுமையுடன் இருந்தனர் என, கேள்வி எழுந்தால், பிரம்மா - சரஸ்வதி என்றே பதில் வரும். ஏனெனில், சரஸ்வதி மீது அதீத அன்பு கொண்டிருந்தார், பிரம்மா.
இதற்காகவே, நான்கு தலைகளைக் கொண்டிருந்தார், பிரம்மா. எந்தப் பக்கம் திரும்பினாலும், தன் மனைவியின் முகம் தன் கண்ணில் பட வேண்டும் என, நினைத்தார். அவருடைய அன்புத்தொல்லை தாளாமல், அவள் பல வடிவங்களை எடுத்து விடுவாளாம். இதனால், 'ஷதரூபா' என்ற பெயரைப் பெற்றாள். இந்த சொல்லுக்கு, பல வடிவங்களை எடுப்பவள் என, பொருள்.
ஷதரூபாவுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அவள் கல்வியில் மட்டுமல்ல, இன்னும் பல வித்தைகளுக்கும் அதிபதி, நான்கு வேதங்களுக்கும் தாய்... இப்படி பல கலைகளிலும் வித்தகி என்பதாலும், இந்த பெயர் ஏற்பட்டது என்பர்.
மேகாலயா, சிக்கிம், அருணாசல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் சரஸ்வதியை, சிவ துர்க்கையின் மகளாக கருதுகின்றனர். விநாயகர், கார்த்திகேயன், லட்சுமி ஆகியோரை இவளது உடன் பிறந்தவர்கள் என, போற்றுகின்றனர்.
இதற்கு காரணம், கல்வி இருந்தால், வாழ்வின் உண்மை நிலை புரியும், ஆத்ம ஞானம் கிடைக்கும். இது, சிவ தத்துவத்தைக் குறிக்கும். கல்வியால் மன தைரியம் உண்டாகும். இது, துர்க்கையைக் குறிக்கும்.
கல்வி இருந்தால், யானை போல், பலம் அதிகமிருந்தாலும் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இது, விநாயக தத்துவத்தைக் குறிக்கிறது. கல்வியால், பலசாலிகளை வெல்லலாம், தன்னை விட மூத்தவர்களுக்கு கூட பாடம் சொல்லித் தரும் ஞான குருவாகலாம். இது, கார்த்திகேயன் எனும் முருக தத்துவத்தைக் குறிக்கிறது.
கல்வி இருந்தால், செல்வம் தானே தேடி வரும். இது, லட்சுமி தத்துவத்தைக் குறிக்கிறது. ஆக, எல்லா தெய்வங்களின் சக்தியையும் தனக்குள் அடக்கியவள், கல்வியின் நாயகியாகிய, சரஸ்வதி.
அவள் வெள்ளை தாமரையில் இருப்பாள், வெள்ளைப் புடவை அணிந்திருப்பாள் என்பதெல்லாம் நாம் அறிந்த செய்திகள். ஆனால், இவை எல்லாமே வித்தியாசமான செய்திகள் தானே!
ஆன்மிக தம்பதி தினமான சரஸ்வதி பூஜையன்று, 'எனக்கு நீ, உனக்கு நான் என்ற உணர்வுடன், இனி நாங்கள் இருப்போம்...' என, தம்பதியர் உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்; இன்பமாக வாழுங்கள்.
- தி. செல்லப்பா
