PUBLISHED ON : அக் 04, 2020

வழிபாட்டு முறைகள், சிலைகளின் அமைப்புகளில் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள சில கோவில்களில், சுவாமி பெயர்களும் வித்தியாசமாக உள்ளது. அவ்வகையில், 'கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்ற பெயருடைய சுவாமியை, புரட்டாசியில் தரிசிப்பது விசேஷம். இவர், திருவாரூர் மாவட்டம், பாடகச்சேரியில் அருள்பாலிக்கிறார்.
சீதையை சிறையெடுத்தான், ராவணன். சாதாரணமாக மூளை வேலை செய்வதை விட, இக்கட்டான சூழலில் வேலை செய்ய வேண்டும் என, நம் இதிகாசங்கள் வலியுறுத்துகின்றன.
கணவர் எப்படியும் தன்னை மீட்க வருவார் என நம்பிய சீதை, தன் ஆபரணங்களை கழற்றி, செல்லும் வழியில் போட்டு சென்றாள். ராமனும் லட்சுமணனும் சீதாதேவியை தேடி வந்த போது, 'பாடகம்' என்னும் கொலுசை கண்டனர்.
'இது அண்ணியுடையது தான்...' என்று, லட்சுமணன் கூறினார்.
'இது எப்படி நிச்சயமாக தெரியும்...' என்று ராமர் கேட்டதும், 'நான் அண்ணியின் பாதத்தை தவிர, வேறு எதையும் பார்த்ததில்லை...' என்றார்.
இதைக் கேட்ட ராமர் மகிழ்ந்தார். கொலுசை பார்த்து, 'கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்...' எனக் கூறினார்.
அதனால், இவ்வூர் பெருமாளுக்கு, 'கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. ஊரை, 'பாடகச்சேரி' என்றனர். கண் திறந்து, பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார், பெருமாள்.
மகான் ராமலிங்க சுவாமிகள், இங்கு வாழ்ந்தார். அவர், கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோவிலுக்கு கும்பாபிஷேக திருப்பணி செய்தவர். இவருக்காக ஒரு மடம், அவர் தங்கியிருந்த இடத்தில் கட்டப்பட்டு, அவர் சமாதியான ஆடிப்பூரம் மற்றும் பவுர்ணமி நாட்களில் அன்னதானம் நடக்கிறது.
எண்ணற்ற வியாதிகளை குணமாக்கியவர், சுவாமிகள். அவருடைய ஜீவசமாதி, திருவொற்றியூரில் பட்டினத்தார் சமாதி அருகில் உள்ளது. பைரவர் உபாசகரான அவர், அன்னதானம் செய்யும் போது, நுாற்றுக்கணக்கான நாய்கள் வந்து, உணவருந்தி மறைந்து விடும் அதிசயம் நிகழ்ந்தது.
சுவாமியுடன், ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். சவுந்தர நாயகி சமேத பசுபதீஸ்வரர் தனி சன்னிதியில் கணபதி, நந்தியுடன் உள்ளனர். இவரை திங்கட் கிழமைகளில் பூஜித்தால், வியாபாரம் பெருகும், நிம்மதி கிடைக்கும், திருமண பாக்கியம் உண்டாகும்.
கும்பகோணம் - ஆலங்குடி சாலையில், (வலங்கைமான் வழி) 14 கி.மீ., துாரத்தில், பாடகச்சேரி உள்ளது.
தி. செல்லப்பா

