PUBLISHED ON : நவ 01, 2020

ஒரு பிரமாண்டமான கோவிலை, பக்தர் ஒருவர், பிச்சை எடுத்து திருப்பணி செய்துள்ளார். அது தான், கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்.
மக்கள் செய்த பாவங்களால், பூமியை சுமக்க இயலாமல் சோர்வடைந்தான், நாகங்களின் தலைவன் ஆதிசேஷன். சிவனிடம், உரிய சக்தி தர வேண்டினான். மனம் இரங்கிய சிவன், எந்தச் சூழலிலும் உலகைத் தாங்கும் சக்தியை அருளினார்.
ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்தது. தன் படைப்புக் கருவிகளை, அமுதம் அடங்கிய ஒரு கும்பத்தில் வைத்து மிதக்க விட்டார், பிரம்மா.
அந்த கும்பத்தின் மீது அம்பு எய்தார், சிவன். அப்போது, கும்பத்திலிருந்த வில்வ இலை சிதறி, ஒரு இடத்தில் விழுந்தது. அந்த இடத்தில், லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தான், ஆதிசேஷன்.
நாகராஜனான ஆதிசேஷன் பூஜித்ததால், அந்த சிவனுக்கு, 'நாகேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. அம்பாளுக்கு பிருகன்நாயகி -- பெரியநாயகி என, பெயரிடப்பட்டது.
மூலவர் சன்னிதி, இரண்டு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுக்கும் தேர் போல் வடிக்கப்பட்டுள்ளது. தேர் சக்கரங்களின் ஆரங்களாக, 12 ராசிகள் இடம் பெற்றுள்ளன என்பதால், இந்த மண்டபத்திற்குள் நுழைந்தாலே, கிரக தோஷம் நீங்கும் என்பர்.
நடராஜரின் நடனத்திற்கு ஏற்ப தாளம் போடும் பாவனையில், சிவகாமி அம்மையும்; வேறு எங்கும் இல்லாத விசேஷமாக, நடராஜரின் அருகில், மகாவிஷ்ணு குழலுாதும் காட்சியும் வித்தியாசமானவை.
இது, ராகு தோஷ நிவர்த்தி தலமாக உள்ளது. சூரிய திசை நடப்பவர்களும் வழிபடலாம்.
சித்திரை மாதம், 11, 12 மற்றும் 13ல், லிங்கம் மீது சூரிய ஒளி படும். இங்குள்ள காளி, வீரபத்திரர் சன்னிதிகளில், ஞாயிற்றுக்கிழமை மாலை, 4:30 - 6:00க்குள் ராகு கால வேளையில் பூஜை செய்தால், சகல நோய்களும் நீங்கும். மரண துன்பம் இருக்காது.
ரிஷபத்தின் முன்நிற்கும் உமையொரு பாகனை ஞாயிறன்று வழிபட்டால், பிரிந்த தம்பதி ஒன்று கூடுவர்; மனமொத்த தம்பதியர், ஏழேழு ஜென்மமும் சேர்ந்து வாழ்வர்.
கடந்த 1923ல், இந்த கோவில், புதர் மண்டிக் கிடந்தது. பாடகச்சேரியை சேர்ந்த ராமலிங்க சுவாமி என்பவர், தன் கழுத்தில் பித்தளை செம்பு ஒன்றை கட்டிக்கொண்டு, பிச்சை எடுத்து பொருள் சேர்த்து, திருப்பணி செய்து வைத்தார்.
லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார், நாகேஸ்வரர். இத்தலத்திலுள்ள சூரியன், பிரளய கால ருத்திரர், விஷ்ணு துர்க்கை சன்னிதிகளை ஒரு சேர வழிபட்டால், எவ்வளவு பெரிய துன்பமும் தீர்ந்து விடும்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து, 2 கி.மீ., கும்பேஸ்வரர் கோவிலின் கிழக்கே உள்ளது, இக்கோவில்.
தி. செல்லப்பா

