PUBLISHED ON : ஏப் 15, 2018

நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த சம்பிரதாயங்களில், வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவம் மட்டுமல்லாது, உடலை வளப்படுத்தும் நல்ல விஷயங்களும் அடங்கியுள்ளன.
தாம்பூலம் தரிப்பதில் கூட, இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கியுள்ளது.
பொதுவாக, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது, அந்த சுவை உடலையும், மூளையையும் சுறுசுறுப்படைய செய்வதுடன், இதயத்தையும் வலுப்படுத்துகிறது.
உடம்பில் உள்ள வாதம், பித்தம், கபம் போன்றவை சரியான விகிதத்தில் இல்லாமல் கூடவோ, குறையவோ செய்யும் போது நோய் ஏற்படுகிறது என்கிறது, சித்த வைத்தியமும், ஆயுர்வேதமும்!
இம்மூன்றையும், சமமான நிலையில் வைக்க உதவுகிறது, தாம்பூலம். மேலும் இந்த மூன்றும் சரியான அளவில் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.
பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு, பித்தத்தை கட்டுப்படுத்துகிறது; சுண்ணாம்பில் உள்ள காரம், வாதத்தை போக்குகிறது; வெற்றிலையில் உள்ள உரைப்பு, கபத்தை நீக்கும்.
இது மட்டுமல்லாது, தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதி பத்திரி போன்றவை, வாயில் உள்ள கிருமிகளை கொன்று, ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
இதனால் தான், விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்போடு, புகையிலையும் சேரும்போது, இது, தீய பழக்கமாக மாறி விடுகிறது.
நம் முன்னோரின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது.
வயதானோருக்கு ஏற்படக் கூடிய மிக முக்கியமான பிரச்னை எலும்பு முறிவு. சிறிதளவு முறிவு ஏற்பட்டாலும், முதுமையின் காரணமாக, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
பல நேரங்களில், சாதாரண எலும்பு முறிவே, மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன், முதியோருக்கு அவ்வளவு எளிதில் எலும்பு முறிவு ஏற்பட்டதில்லை.
அதற்கு காரணம், அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தால் தான்.
ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும்போது, எலும்புகள் வலுப்படுகிறது.
தாம்பூலம் தரிப்பதில் சில வரைமுறைகளும் உண்டு. காலை சிற்றுண்டிக்கு பின் போடும் தாம்பூலத்தில், பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம், மதிய நேரம், வெப்பம் அதிகமாகும்போது, உடம்பில் பித்தம் ஏறாமல் பாதுகாக்கும்.
அதேபோல, மதிய உணவிற்கு பின், சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது, உணவில் உள்ள வாதத்தை, அதாவது, வாயுவை கட்டுப்படுத்தும்.
இரவில், வெற்றிலையை அதிகமாக எடுத்துக் கொண்டால், நெஞ்சில் கபம் தங்காது; இம்முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும். இதை மீறும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது.
- லதா
