PUBLISHED ON : நவ 24, 2013

பாபிலோனின் தொங்கும் தோட்டம், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இப்போது, அதற்கு போட்டியாக, லண்டனில், மிக உயரமான சுவர்களில், செங்குத்தான நிலையில், பிரமாண்ட தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
லண்டனின் விக்டோரியா ரயில்வே ஸ்டேஷன், பக்கிங்காம் அரண்மனை ஆகியவற்றின் அருகே அமைந்துள்ள, இந்த எழில் மிகு தோட்டத்தை, லண்டன் மேயர் போரீஸ் ஜான்சன், சமீபத்தில் திறந்து வைத்தார்.
தனியார் ஓட்டல்களுக்கு சொந்தமான, 68 அடி உயரம் உடைய, இரண்டு சுவர்களில் தான், இந்த அதிசயம் அரங்கேறியுள்ளது. தோட்டத்தின் மொத்த பரப்பளவு, 3,770 சதுர அடி. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகளை பயிரிட்டுள்ளனர்.
ஸ்ட்ராபெர்ரி, தாமரை, ரோஜா போன்றவை, இவற்றில் குறிப்பிடத் தக்கவை. இந்த தாவரங்களை பயிரிடுவதற்காக, இரண்டு சுவர்களிலும், 16 டன் மணல் கொட்டப் பட்டுள்ளது. இரண்டு கட்டடங்களின் மாடியிலும், மழை நீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சேகரிக்கப்படும் மழை நீரே, இந்த தோட்டத்தில் உள்ள செடிகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. பூத்து குலுங்கும் மலர்கள், சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் மற்றும் பல வகை பறவைகள் என, அந்த இடம், இயற்கை எழில் பூத்து குலுங்கும், ரம்மியமான தோட்டமாக காட்சி அளிக்கிறது.
லண்டனில், போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள, பரபரப்பான இடத்தில், கண்களுக்கும், மனதுக்கும் இதம் அளிக்கும் வகையிலான இயற்கை அதிசயம் உருவாக்கப் பட்டுள்ளது, அங்குள்ள மக்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும், இதைப் பார்க்க வருவதால், லண்டனின், புதிய சுற்றுலா மையமாக இந்த தோட்டம் உருவெடுத்துள்ளது. பிரிட்டனில் உள்ள தோட்டங்களிலேயே, மிகவும் செங்குத்தான தோட்டம், இது தான்.
மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பை தடுப்பதற்கும், சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கும், இந்த தோட்டம், மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறது, லண்டன் நிர்வாகம். இந்த தோட்டத்தை பராமரிப்பதற்காக, பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- எஸ்.என்.சஞ்சனா

