PUBLISHED ON : ஜன 16, 2022

ஜன., 18 தைப்பூசம்
உயர்ந்த நட்சத்திரம், பூசம். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று, தனித்து நடனமாடி, பக்தர்களை மகிழ்விப்பார், சிவன். தைப்பூசத்தன்று, அம்பாளுடன் இணைந்து நடனமாடுவார்.
ராமனுக்கு பிரியமான தம்பியான பரதன், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தான். உத்தம குணங்களுடன் விளங்கினான். பதவி ஆசை இல்லாமல் அண்ணனின் பிரதிநிதியாக மட்டுமே இருந்து நாட்டைக் கவனித்தான். அவரது பாதுகையை (மிதியடி) நாட்டைக் காக்கும் ஆயுதமாகக் கருதினான்.
பத்மாசுரனை அழிக்க முருகப்பெருமான் கிளம்பியபோது, வேல் ஒன்றை அவரிடம் வழங்கினாள், பார்வதி. இந்த வேல் தந்த நாள், தைப்பூசம். பூசம் நட்சத்திரத்தில் தான், வள்ளியை முருகன் கைப்பிடித்தார். எனவே, முருக பக்தர்களுக்கும், இது விசேஷ தினமாக உள்ளது.
மற்ற மாதங்களில் பூசம் நட்சத்திரம் ஏதாவது ஒரு நாளில் வரும்; தைப்பூசம், பவுர்ணமியுடன் இணைந்து வரும். அன்று ஒளி வீசும் சந்திரன், மன வலிமையைத் தரும். மேலும், தை மாதம் சூரியனுக்குரியது. எனவே, இந்நாளில் சூரிய வழிபாடு செய்து, நோயற்ற வாழ்வு பெறலாம்.
தைப்பூசம் என்றால் தமிழகத்தில், முருகன் வழிபாட்டுக்குரிய நாளாக உள்ளது. ஆறாம், ஏழாம் நுாற்றாண்டுகளில் இவ்விழா, சிவ வழிபாட்டு நாளாக இருந்துள்ளது. ஆடிப்பெருக்கன்று, புதுமண தம்பதியர், காவிரியில் நீராடுவது ஒரு மங்கலச் சடங்கு.
தைப்பூசத்தன்று, செய்த பாவங்களைக் களைய, காவிரி மற்றும் புனித நதிகளில் நீராடுவது ஐதீகம். இதை திருஞானசம்பந்தர் உறுதிப்படுத்துகிறார்.
'பூசம் பொலிந்து ஆடிப்பொலிந்து அழகாய் ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ' என்ற தேவார வரிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
அதாவது, பூசத்தன்று, காவிரியில் நீராடி, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரிலுள்ள மகாலிங்கேஸ்வரரை வழிபட்டால், பாவம் நீங்கி, மன அழகு பெறலாம் என்பது, சம்பந்தர் வாக்கு.
புனித நீராடுவதற்கு ஏற்ற நட்சத்திரம், பூசம். அது மட்டுமல்ல, தை அறுவடை மாதம். தைப்பூசத்தன்று விளை பொருட்களை முருகனுக்கு படைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. பலாவும், வாழையும் இதில் முக்கிய இடம் பெற்றன.
கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில், முருகன் சன்னிதியில் வாழை, பலாவை தலையில் சுமந்து வரும் பகதர்களை சிலையாகவே வடித்து வைத்துள்ளனர்.
27 நட்சத்திரங்களில் எட்டாவது இடத்தைப் பிடிப்பது பூசம். சனி பகவானுக்குரிய எண், எட்டு. இந்த நட்சத்திரத்தின் அதிபதியும் அவரே.
பூசம் நட்சத்திரம் வியாழக் கிழமைகளில் வந்தால், 'குரு புஷ்ய யோக தினம்' என்பர். அன்று, தங்கம் வாங்க, மாணவர்கள் கல்வி துவங்க, செல்வச் செழிப்புக்காக, லட்சுமி மற்றும் குபேர பூஜை செய்ய ஏற்ற நாள்.
தைப்பூசத்தின் முக்கியத்துவம் உணர்ந்து கொண்டாடினால், எல்லா தெய்வங்களின் அருளும் கிடைக்கும்.
தி. செல்லப்பா
