PUBLISHED ON : மே 22, 2022

அத்திப்பழம் அதிக சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
புராணம் மற்றும் இலக்கியங்களில் அத்தியைப் பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. பைபிளில்,
ஆதி கனி என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தி மரம், அதிகமாக எங்கும் வளர்க்கப்படுவதில்லை; அரிதாக காணப்படுகிறது. ஆனால், அத்தியையும் மற்ற மரங்களைப் போல் எங்கும் வளர்க்கலாம்.
அத்தி மரத்தின் தாயகம், மத்திய தரைக்கடல் பகுதி என கருதப்படுகிறது. ஈரம் உள்ள இடங்களில் நன்கு வளரும். சிற்றாறு மற்றும் காடுகளின் பள்ளத்தாக்கு பகுதியில் வளரும். அத்தி மரம், சுமார் 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரும். அடிப் பாகத்திலும், மேல் பாகத்திலும் கொத்துக் கொத்தாக காய்கள், பச்சை நிறத்துடனும், பழுத்ததும் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
அத்திக்கனி உண்ணத் தகுந்தது அல்ல; மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே என, கருதப்படுகிறது. ஆனால், மற்ற பழங்களை போல் இதை தாராளமாக உண்ணலாம். நன்கு பழுத்த அத்திப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். அத்திக்காய் துவர்ப்பாக இருக்கும்.
பழத்தின் தோலை சீவி விட்டு உண்ணலாம். உலர் பழத்தை, தேனில் ஊற வைத்து சாப்பிடலாம் அல்லது உலர் பழத்தை பொடியாக்கி, சர்க்கரை கலந்தும் சாப்பிடலாம்.
அத்திப்பழத்தில், 13.6 சதவீதம் நீர்ச்சத்தும், 7.4 சதவீதம் புரதச் சத்தும், 5.6 சதவீதம் மாவுப் பொருளும், 17.9 சதவீதம் நார்ப் பொருளும், 6.5 சதவீதம் சாம்பல் சத்தும், 0.91 சதவீதம் பாஸ்பரிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு போன்ற பல்வேறு உலோகச் சத்துக்களும் உள்ளன.
அத்தியில் அதிகளவு சர்க்கரையும், குறைந்த அளவு அமிலமும் உள்ளது. புதிய பழத்தில் அதிக சுண்ணாம்பு உள்ளது. பழம் உலர்ந்ததும், சுண்ணாம்பு சத்தின் அளவு குறைந்து விடும்.
அத்தி மரத்தின் இலை மற்றும் பட்டையிலும் பயன் உள்ளது. அத்திப் பட்டையில், டானின் வேதிப் பொருள் உள்ளது. இலைகள், கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது.
அத்திப் பழத்தின் மருத்துவ பயன்கள்!
* அத்திப் பழத்தை அடிக்கடி உண்டு வர, இதயம் பலமாகும்
* ரத்தம் விருத்தியடையும். நோய் எதிர்ப்பு திறன் கூடும்
* அஜீரணத்தை குணப்படுத்தும்
* அத்திப் பிஞ்சை சமைத்து உண்டால், ரத்த மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு தீரும்
* உலர் அத்தியை பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட, கல்லீரல் சீரடையும்
* அத்தி விதைத் துாளை நீர் கலந்து சாப்பிட, நீரிழிவு நோய் குணமாகும்
* அத்திப்பாலுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து நான்கு மணிக்கொரு முறை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால், சிறுநீரில் ரத்தம் கலந்து போவது நிற்கும். ரத்த பேதி சரியாகும்; வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்
* அத்திப் பட்டையை பிழிந்து சாறு எடுத்து, மோருடன் கலந்து அரை கப் வீதம் இருமுறை குடிக்க, பெரும்பாலான வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்
* பட்டையை பொடியாக்கி, பாலில் கலந்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அருந்த, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும்
* பட்டையை ஊற வைத்த நீரால் புண்ணைக் கழுவி வர, அவை விரைவில் காய்ந்து விடும்.
- ர. ஐவண்ணம்
