தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வாழ்க்கையின் ரகசியம்!

வாழ்க்கையின் ரகசியம்!

வாழ்க்கையின் ரகசியம்!


PUBLISHED ON : ஜூலை 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உழைப்பு உயர்வைத் தரும்; ஆனால், உழைத்து பெற்ற உயர்வாக இருந்தால் கூட, அது தங்கமாட்டேன் என்கிறதே... அதற்கு என்ன காரணம்?

இதற்கான விளக்கத்தை, ராவண சம்ஹாரத்திற்கு பின் நடந்த ஒரு நிகழ்ச்சி விவரிக்கிறது...

கும்பகர்ணனின் மகன் மூலகன்; இவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த பிரம்மா, அவன் முன் தோன்றினார். அவரை வணங்கிய மூலகன், 'என் முடிவு ஒரு பெண்ணால் தான் வர வேண்டும்; மற்றபடி தேவாதி தேவர்களாக இருந்தாலும், அவர்களால் இறப்பு வரக் கூடாது...' என்று வேண்டியதுடன், பல அபூர்வ வரங்களையும் பெற்றான்.

இதனால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில், அதர்மங்களை செய்தான்.

ஒருசமயம், தன் ராட்சச சைனியங்களுடன் அட்டூழியம் செய்தபடி வந்தவன், 'என்னை எதிர்க்க இவ்வுலகில் யாருமில்லை. இப்படிப்பட்ட என் ராட்சச வம்சம், அந்த சண்டியான சீதையால் அல்லவா அழிந்தது...' என்று கோபத்துடன் கத்தினான். அப்போது, அங்கிருந்த ரிஷி ஒருவர், அவனைப் பார்த்து, 'யாரை சண்டி என்று இகழ்ந்தாயோ, அச்சீதையாலே உன் உயிர் போகக் கடவது...' என்று சாபம் கொடுத்தார்.

இந்நிலையில், ராட்சச சைனியத்துடன் சென்று, விபீஷணரை வென்று, சிறையில் அடைத்தான் மூலகன். சிறையில் இருந்து தந்திரமாக தப்பிய விபீஷணர், ஸ்ரீராமரிடம் சென்று முறையிட்டார்.

உடனே, ஸ்ரீராமர் தன் படைகளுடன் சென்று மூலகனுடன் போரிட்டு, அவனை கொல்ல முயலும் போது, பிரம்மா தோன்றி, 'ரகு நந்தனா... இவனுக்கு, பெண்ணால் தான் மரணம் என்று வரம் தந்துள்ளேன். அதை உறுதிபடுத்துவது போல, சீதையால் தான் இவனுக்கு மரணம் என்று ரிஷி ஒருவரும் சாபம் இட்டுள்ளார். ஆகையால், தாங்கள் இவனைக் கொன்றால், எங்கள் வார்த்தை பொய்யாகும்...' எனக் கூறினார்.

அதை ஏற்ற ஸ்ரீராமர், அயோத்தியில் இருந்து சீதையை வரவழைத்து, அவளிடம் நடந்ததை விவரித்து, சீதை கையாலேயே மூலகன் கதையை முடித்தார். அவதார புருஷரான ஸ்ரீராமரே முறை மீறவில்லை. ஆனால், கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்ற மூலகனோ, தவப்பலனை அதர்ம வழியில் உபயோகித்து, முடிவை அடைந்தான். கடுமையாக உழைப்பதில் மட்டுமல்ல, உழைப்பின் பலனை உபயோகப் படுத்துவதிலும் வாழ்க்கையின் ரகசியம் அடங்கி உள்ளது.

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்

பேர்ந்தறி வானெங்கள் பிஞ்ஞகன் எம்மிறை

ஆர்ந்தறி வாரறி வேதுணை யாமெனச்

சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே!

கருத்து: ஞானத்தின் திருவுருவான இறைவனை தெளிந்து அறிந்து கொள்ளாததால், காலங்கள் வீணாகிப் போயின. எங்கள் சிவனாகிய தலைவன், தன் சொரூப நிலையிலிருந்து பெயர்ந்து, குருவாக வந்து அருள்வான். உண்மை அறிவே துணையாக பொருந்தி உணர்வாரிடம், தூர்ந்து விளங்கும் பெருமை உடையவன் சிவன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us