PUBLISHED ON : ஆக 18, 2019

ஆகஸ்ட் 22 - சென்னை தினம்
ஆங்கிலேயர்கள், சென்னையில் குடியேறிய புதிதில், தங்களின் போக்குவரத்திற்கு, பல்லக்கு, மாட்டு வண்டி, குதிரை மற்றும் குதிரை வண்டி போன்றவற்றையே பயன்படுத்தினர்.
சென்னை மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே சாலைகள் போடப்பட்ட பின், போக்குவரத்து அதிகரிக்க துவங்கியது. ரயில் கண்டுபிடிக்கப்பட்டு, ராயபுரம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வந்த பின், வெளியூர்களிலிருந்து, சென்னை வருவோரின் எண்ணிக்கை பெருகியது.
ரயில் நிலையங்களில் வந்திறங்கியவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்தவை தான், ஒற்றை குதிரை பூட்டிய, ஜட்கா வண்டிகள்.
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், ராஜா ராமசாமி முதலியார் சத்திரம் என்று ஒன்றிருந்தது. அதேபோல், எழும்பூர் ரயில் நிலையம் அருகில், கண்ணன் செட்டியார் சத்திரம் இருந்தது.
இப்படி, இன்னும் சில சத்திரங்கள், சென்னை நகரில் ஆங்காங்கே இருந்தன. இவற்றின் வாசல்களில், நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஜட்கா வண்டிகள் வரிசைகட்டி நிற்கும்.
ஜி.பரமேஸ்வரன் பிள்ளை, 'நகரங்களின் வினோத சரித்திரம்' நுாலில், ஜட்கா வண்டி பற்றி இப்படி எழுதியுள்ளார்:
இப்போது சில ஆட்டோக்காரர்கள் செய்யும் அதே வேலைகளை, அப்போதைய சென்னையிலுள்ள ஜட்கா வண்டிக்காரர்களும் செய்திருக்கின்றனர். அதிக பணம் கேட்டு அடாவடி செய்வது, வேறு இடத்தில் இறக்கி விட்டுச் செல்வது போன்றவை, அப்போதே நடந்திருக்கிறது. இதுபற்றிய செய்திகள், அந்தக் கால பத்திரிகைகளில் ஆதங்கத்தோடும், ஆவேசத்தோடும் இடம்பெற்றுள்ளன.
வண்டிக்குள், சிறிய இடத்தில் நான்கு பேர், அதிக நெருக்கத்தால் உட்கார முடியாமல், கால், இடுப்பு வலி பின்னியெடுக்கும். அவ்வண்டிகள் ஆடுகிற ஆட்டத்தில், உடம்பில் மூட்டுக்கு மூட்டு வலி எடுத்து, எப்போது வண்டியை விட்டு இறங்க போகிறோம் என்று எண்ணத் தோன்றும்.
மேலும், அவ்வண்டிக்காரர்களிடம், திருவல்லிக்கேணிக்கு என்று பேசி, வண்டி ஏறினால், திருவல்லிக்கேணி கடைத்தெருவிலே நிறுத்தி, 'இதுதான், திருவல்லிக்கேணி இறங்குங்கள்...' என்பர். பின், என்ன எடுத்துரைத்தாலும் அவர்கள் கேட்பதில்லை. நடுவழியில் சற்று இறங்கி, அந்த வழியாக வந்த நண்பரிடம் பேசி விட்டு வருகிறோம் என்றாலும் சம்மதிப்பதில்லை.
இவ்விதமான பல காரணங்களால், சச்சரவு உண்டாகி, சென்னை பட்டணத்தில், ஜட்கா வண்டிகள் விவகாரம், போலீசுக்கு போகாத நாளில்லை.
'இதென்ன வீண் தொல்லையாய் இருக்கிறது...' என்று, போலீஸ் அதிகாரிகள், 'ஜட்கா வண்டிகளுக்கு, இவ்வளவு துாரத்திற்கு இவ்வளவு கூலி கொடுக்க வேண்டும்; பயணியர் இறங்க வேண்டிய இடத்திலேயே வண்டியை விட வேண்டும்...' என்ற விதியை ஏற்படுத்தினர். ஆயினும், மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.
டிசம்பர், 1879ல், 'ஜனவிநோதினி' புத்தகத்தில் உள்ள ஒரு செய்தி:
ஜட்கா வண்டிக்காரர்கள், காந்திஜியையும் விட்டு வைக்கவில்லை. 'கோட், சூட்' போட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒருமுறை சென்னை வந்தார், காந்திஜி.
சென்னை, தம்புசெட்டி தெருவில் இருந்த எழுத்தாளரும், பதிப்பாளருமான, ஜி.ஏ.நடேசன் வீட்டிற்கு செல்ல, ஜட்கா வண்டியில் ஏறினார்.
அந்த ஜட்காக்காரர், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, தம்புசெட்டி தெருவில், காந்திஜியை இறக்கி விட்டு, அதிக காசு பிடுங்கி விட்டார்.
இப்படி சண்டை சச்சரவுகள் இருந்தாலும், ஜட்கா வண்டிகளை பயன்படுத்தி வந்தனர், மக்கள். அரசு பொது மருத்துவமனையிலிருந்து, பிரேதங்களை எடுத்துச் செல்லவும், இந்த வண்டிகள் தான் பயன்பட்டன.
சென்னைவாசிகளுக்கு, அதன்பின், 'டிராம்' வண்டி அறிமுகமானது. அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும், 'டிராம்' வண்டி தான் இருந்தது. இதில் கட்டணம் குறைவாக இருந்ததால், ஜட்காவை கழற்றி விட்டு, 'டிராமி'ற்கு மாறினர்.
அதற்குள், 1895ல், 'எலெக்ட்ரிக் டிராம்'கள் ஓட துவங்கின. அதோடு, ரிக் ஷா வண்டிகளும் அதிகமாகி விட்டதால், இவற்றையெல்லாம் தாக்குபிடிக்க முடியாமல், ஜட்கா வண்டிகள் பட்டண தெருக்களில் இருந்து ஒரேயடியாக மறைந்து விட்டன.
சென்னையின் இன்னொரு அடையாளமாக, இன்று வரை இருப்பது, 'மெட்ராஸ் பாஷை!'
மெட்ராஸ் பாஷையின் அழகே, அதன் வேகமும், எளிமையும் தான். ஆங்கிலம், தெலுங்கு, உருது என, இந்த பகுதியில் புழங்கிய அத்தனை மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து, தமிழோடு பிசைந்து உருவாக்கிய கூட்டாஞ் சோறு மொழி தான், மெட்ராஸ் பாஷை.
அந்த காலத்தில், ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகிய ரிக் ஷாக்காரர்கள் தான், மெட்ராஸ் பாஷையின், வாத்தியார்கள். 'உன்னோட படா பேஜாரா பூட்ச்சுபா...' என, அலுத்துக் கொள்வர். அதற்குள் ஒரு ஆங்கில சொல் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த காலத்தில், இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்குவர், ஆங்கிலேயர்கள். இன்று, வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையை பிடித்து இழுப்பதை போல, ரிக் ஷாக்காரர்கள் அன்புத் தொல்லையில் பிய்த்தெடுத்தனர்.
இதனால், கடுப்பான ஆங்கிலேயர்கள், 'டோன்ட் பேட்ஜர் மீ' - 'என்னை நச்சரிக்காதே...' என்று சொல்லி தவிர்த்திருக்கின்றனர். வெள்ளைக்காரன் சொன்ன, 'பேட்ஜர்' என்ற வார்த்தையை, ரிக் ஷாக்காரர்கள், தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று, 'பேஜார்' ஆக்கி விட்டனர்.
ஆங்கிலம் மட்டுமின்றி, மற்ற மொழிகளும் மெட்ராஸ் பாஷையில் கலந்திருக்கின்றன. 'பஜாரி' என்ற சொல், உருது மொழியிலிருந்து உருவானது. உருதுவில், பஜார் என்றால், சந்தை என்று அர்த்தம். இதனால், சந்தை கடையில் நின்று சத்தம் போடுபவள், பஜாரி ஆகி விட்டாள்.
'பேக்கு' என்பது கூட, உருது மொழியிலிருந்து வந்தது தான். 'பேவ் கூப்' என்றால், உருது மொழியில், முட்டாள் என்று அர்த்தம். சென்னைவாசிகள் இந்த, 'பேவ் கூப்'பை சுருக்கி, 'பேக்கு' ஆக்கி விட்டனர். இப்படி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும், ஒரு மொழியியல் வரலாறே இருக்கிறது.
சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த இந்த பாஷையை, நாடறிய செய்த பெருமை, தமிழ் திரையுலகிற்கு உண்டு.
எம்.ஆர்.ராதா, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன் துவங்கி, லுாஸ் மோகன் மற்றும் கமலஹாசன் வரை பலரும், இந்த பாஷையை பேசி, இதன் பெருமையை பறைசாற்றி இருக்கின்றனர்.
'வா வா வாத்யாரே ஊட்டாண்ட...' என்ற மெட்ராஸ் பாஷை பாடல், தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அலறியது.
எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்றோர், இதே பாணியை, எழுத்து மூலம் படைத்துள்ளனர். ஜெயகாந்தனின், 'சினிமாவுக்கு போன சித்தாளு' பேசிய பல சொற்கள், இதை பறைசாற்றுகிறது.
தமிழகத்தின் பிற பகுதியினராலும் மெட்ராஸ் பாஷை ரசிக்கப்படுவதற்கு, முக்கிய காரணம், அதில் இருக்கும் வேகமும், ஒலி நயமும் தான். 'அடக் படக் டிமிக் அடிக்கிற டோலு மையா டப்ஸா' போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும், அந்த ஓசை கேட்பவர்களை, திக்குமுக்காட வைத்து விடுகிறது.
அதேபோல, எவ்வளவு அரிய கருத்தையும் பாமரனுக்கு புரியும் வகையில் பதிய வைக்கவும், இந்த மெட்ராஸ் பாஷையால் முடிகிறது என்பது, இதன் கூடுதல் பலம்.
ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும், இன்று பேசப்படுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆனாலும், புது புது சொற்களை அப்படியே அல்லது நம் வசதிக்கு ஏற்ப உருமாற்றி பயன்படுத்துவது என்ற பாரம்பரியம் மட்டும், இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
— ஜோல்னாபையன்.
