தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கற்(ர்ப்)பக விருட்சம்!

கற்(ர்ப்)பக விருட்சம்!

கற்(ர்ப்)பக விருட்சம்!


PUBLISHED ON : பிப் 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரவணன், ஆட்டோவிலிருந்து இறங்கி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைய, இரண்டாவது பிளாட்பாரத்தில் தயாராக இருந்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ்.

கையில் சூட்கேசும், தோளில் பையுமாக முன்னால் நடந்தான்.

''என் கிட்ட ஒரு பைய கொடுப்பா... எல்லாத்தையும் நீயே சுமக்கணுமா,'' என்று அப்பா முத்து வினவ,''அப்பா... நீங்க அம்மாவ பத்திரமா கூட்டிட்டு வாங்க. இது ஒண்ணும் பெரிய சுமையில்ல. நம்மோட ரெண்டு செட் துணி தானே இருக்கு.''

முழங்கால் வலியால் அவதிப்படும் சுந்தரி, மெதுவாக நடக்க, அவளுக்கு ஈடு கொடுத்து, மெதுவாக நடந்தார் முத்து.

எஸ்3 கோச் கண்டுபிடித்து, அவரவர் சீட்டில் அமர்ந்தனர்.

'பஸ் பயணத்த விட, ரயில் பயணந்தான் சொகமானது. ஜன்னலுக்கு வெளியே பாத்தால்... பக்கத்து வீட்டுக்காரங்க போல ஏராளமானவங்கள பாக்கலாம். எத்தனையோ முகபாவம், சந்தோஷம், துக்கம்ன்னு எல்லாம் கலந்திருந்தாலும் பாக்க நல்லா இருக்கும். பஸ் பயணத்துல, அந்தரத்தில் பயணிகளும், பாதாளத்தில் ஏற்றி விட வந்தவர்களுமாக பாக்க, அவ்வளவு நல்லா இருக்காது...' என்று, சரவணன் பலவாறு நினைத்து கொண்டிருக்கையில், ''என்னப்பா சரவணா... என்ன முடிவு செஞ்சிருக்க,'' என்று முத்து வினவ,''அப்பா... ரயில் கெளம்ப இன்னும் பதினைஞ்சு நிமிஷம் தான் இருக்கு. எனக்கு, ரொம்ப அசதியா இருக்கு; இப்ப எந்த பேச்சும் வேணாம். வீட்டுக்கு போய் பேசிக்கலாம்,'' என்று, முற்றுபுள்ளி வைத்தான்.

சுந்தரியும் அவள் பங்குக்கு, ''ஆமாங்க... நேத்தியில இருந்து அலஞ்சுக்கிட்டே இருக்கோம்; ரெஸ்ட் எடுக்கட்டும் புள்ளை. நாளைக்கு வேலைக்கு வேற போகணும்.''

மறுபேச்சு பேசாமல், தூங்கச் சென்றார் முத்து.

சரவணன் கண்ணை மூடி தூங்க முயற்சித்தாலும், அவன் மனசு தூங்க மறுத்து, அடம் பிடித்தது. சென்னையிலிருந்து, மதுரை வந்து, பெண் பார்த்து விட்டு சென்றால், எப்படி தூக்கம் வரும். அவன் கண்களில் இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வுகள் நாடகங்களாய் ஓடின.

சாப்ட்வேர் இன்ஜினியரான சரவணனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து, மூன்று ஆண்டுகள் ஆகி விட்டன. வயது 27 ஆகி விட்டது; முன் நெற்றி முடிகள் கொஞ்சம், 'டாடா' காட்டி விட்டு போய் விட்டன.

ஜாதகம், குடும்பம், பணம், பவுன், என்று ஏதோ ஒரு காரணத்திற்காக தட்டிப் போய் கொண்டே இருந்தது.

முழுவதும் மொட்டை ஆவதற்குள் கல்யாணம் ஆக வேண்டும் என்று அவசரப்பட்டான் சரவணன். மேலும், இப்போது கல்யாணம் நடந்தால் தானே குழந்தைகள், அவர்களின் படிப்பு, என, காலாகாலத்தில் உடம்பில் தெம்பு இருக்கும் போதே செய்ய முடியும்.

'இது ஏன், அப்பாவுக்கு புரிய மாட்டேங்குது... ஏன் புரியாம... எல்லாம் வறட்டு கவுரவம். இன்னிக்கு வந்தது தானே, இந்த வாழ்க்கை. என் வயசுல, அவர் ஏழையாத் தானே இருந்தாரு...' என்று நினைத்தான் சரவணன்.

சனிக்கிழமை காலை, அத்தை வீட்டில் இறங்கி, ரெஸ்ட் எடுத்து, எல்லாருமாக சேர்ந்து, பெண் பார்க்க சென்றனர்.

பெண் நல்ல நிறம்; அதே போல் நல்ல வெயிட். அப்பா பெரிய பிசினஸ்மேன். டிகிரி முடித்து, இரண்டு ஆண்டுகளாக வரன் தேடியும், அவர்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அமையலை. வீட்டில் ஆடம்பரம் தெரிந்தது. பெரிய பெரிய சோபா, 42 இன்ச் டிவி, பெரிய பிரிட்ஜ், ஸ்வீட், காரம் எல்லாம், பெரிய தட்டில் வைத்து, வேலைக்காரப் பெண் அனைவருக்கும் கொடுத்தாள். பெண் வந்து, எதிரில் சோபாவில் அமர்ந்தாள்.

அப்பாவிற்கு இந்த இடம் பிடித்தது போலிருந்தது. ஆடம்பரம் என்றால், அவருக்கு அல்வா மாதிரி. சரவணனுக்கு தான் ஏதோ அந்நியமாகப்பட்டது. அத்தை தான் பெண்ணிடம் பேசினாள். 'எந்த காலேஜ், என்ன குரூப்' என்று. பின், பெண்ணின் அப்பா பேசினார்... 'நான் எல்லாத்தையும் வெளிப்படையாய் சொல்லிடுறேன்... எனக்கிருக்கிறது ஒரே பொண்ணு. நான் சம்பாதிச்சது, என் அப்பா சம்பாதிச்சதுன்னு, எல்லா சொத்தும், அவளுக்கு தான். என் பொண்ணை ரொம்ப செல்லம் கொடுத்து வளத்துட்டேன். அவளை கண் கலங்காமல் பாத்துக்கிட்டாப் போதும். உங்க வீட்டு வேலைக்கு வேணும்ன்னாலும், இங்கிருந்தே ஆள் அனுப்புறேன். என் பொண்ணு கஷ்டப்படக் கூடாது. பொண்ணுக்கு நூறு சவரன் நகை போட்டு, கல்யாணத்தை பெரிய மண்டபமா பாத்து, 'ஜாம் ஜாம்'ன்னு செஞ்சிடறேன்...' என்றார்.

எல்லாம் முடிந்து கிளம்பி, ஒரு கும்பிடு போட்டு, 'வீட்டுக்கு போய் கலந்து பேசி, எங்க முடிவ சொல்றோம்...' என சொல்லி வந்தனர்.

அப்பா, அத்தைக்கு ரொம்பவே பிடித்திருந்தது அவர்களின் பணம்.

மறுநாள், ஞாயிற்றுக்கிழமை. இன்னொரு பெண் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் புரோக்கர். பெண் வீடு, காரை வீடு தான்; சுமாரான குடும்பம். அம்மா, அப்பா மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் திவ்யா; அவளுக்கு தான் பெண் பார்க்கும் படலம்.

அவர்கள் வீட்டிலும் அத்தை, சித்தி என உறவுகள் வந்திருந்தனர் பையனை பார்க்க. இந்த இடம் சரவணனுக்கு சந்தோஷமாக இருந்தது. பெண், கையில் தட்டுடன் வந்தாள். தட்டில் கேக், பிஸ்கட்ஸ் என பேக்கரி அயிட்டங்கள்... சரவணனுக்கு பெண்ணை பிடித்திருந்தது.

இங்கேயும் பொண்ணோட அப்பா தான் பேசினார்... 'புரோக்கர் உங்ககிட்ட எல்லாம் சொல்லி இருப்பாரு. ஆனாலும், என் கடமைக்கு சொல்ல வேண்டியதை பேசிடுறேன். எனக்கு பூர்வீகம் நிலக்கோட்டை; நாங்க அண்ணன், தம்பிங்கன்னு ஆறு பேர். அக்கா, தங்கை நாலு பேருன்னு பெரிய குடும்பம். அப்பா, என்னோட சின்ன வயசிலேயே தவறிட்டார். அப்புறம் அண்ணன் தான், அப்பாவோட கடைய எடுத்து நடத்தி, குடும்பத்த வாழ வைச்சார். எங்க கடையில எடுபிடியா தான் வேலை செஞ்சிட்டு இருந்தேன். எனக்கு கல்யாணம் செய்ற போது, அண்ணனுக்கு உடம்புக்கு சுகமில்லாம போக, கடைய வித்திட்டாரு. கடைய வாங்குன முதலாளிக்கும், எனக்கும் ஒத்து வரல. அப்புறம் ரெண்டு, மூணு பிசினஸ் ஆரம்பிச்சு, நொடிச்சுப் போன பெறகு தான், இந்த ஊருக்கு வந்து, ஒரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். என் பொண்டாட்டி, கொஞ்சம் படிச்சிருந்ததாலே, சின்ன புள்ளைங்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதிச்சாங்க.

'முதல் புள்ள தான் திவ்யா. ரெண்டாவது பையனுக்கு ஆசப்பட்டோம். ஆனால், கடவுள் எங்களுக்கு, ரெட்டை பொம்பளப் புள்ளைங்களக் கொடுத்துட்டார். ரெண்டு பேரு வருமானமும் இருந்ததால, ஓரளவிற்கு சிரமமில்லாம குடும்பத்த நடத்த முடிஞ்சது. என் சம்பாத்தியத்தில, நான், என் புள்ளைங்களுக்கு தந்தது கல்வியும், ஒழுக்கம் மட்டும் தான். திவ்யா டிகிரி முடிச்சவுடனே பரிட்சை எழுதி, கவர்ன்மென்ட் வேலையில சேர்ந்தாள். அவ பணத்தில தான், அவளுக்கு நகை வாங்கினோம்; வீட்டை கொஞ்சம் பெரிசாக்குனோம். மூன்று வருஷத்திலேயே ஒரு ஆபீசராகி, இப்போது கை நிறைய சம்பாதிக்கிறாள்.

'என்னால முப்பது சவரன் நகை போட்டு, சுமாராக தான் கல்யாணம் செய்து வைக்க முடியும். அத செய்றேன், இத செய்றேன்னு வாய் வார்த்தைய விட்டுட்டு, செய்ய முடியாம திண்டாடக் கூடாது... ஏன்னா, இன்னும் ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்யணும்...' என்றார்.

பெண் மாநிறம்; நல்ல உயரம்; அம்சமாக இருந்தாள். அவளின் உறவுகள் உற்சாகமாக உலவிக் கொண்டிருந்தனர்.

அந்த நினைவுகளிலேயே உறங்கிப் போனான்.

''சரவணா... எந்திரி, ஊர் வந்திருச்சு,'' என்று அம்மா எழுப்ப, அவசரமாக எழுந்தான்.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து, ஆட்டோ பிடித்து, வீட்டிற்கு வந்து, ஒரு குட்டி தூக்கம் போட்டான்.

எழுந்து சாப்பிட்டு விட்டு, 11:00 மணி அளவில், வேலைக்கு கிளம்பினான். வேலை முடிந்து, இரவு வீட்டிற்கு வர, மணி 10:30 ஆகிவிட்டதால், யாரும் எதுவும் பேச முடியவில்லை.

மறுநாள் காலை, காபியை அம்மா கையிலிருந்து வாங்கியவன், ''அம்மா... கொஞ்ச நேரம் பேசணும். டிபன் செய்யற வேலைய, தள்ளி வைச்சுக்கோ,'' என்றான். அடுப்பை அணைத்து, ஹாலில் வந்து அமர்ந்தாள் அம்மா.

பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் முத்து. இவர்கள் வந்து அருகில் அமர்ந்ததும், பேப்பரை மடித்து வைத்து விட்டு, '' பொண்ணு வீட்டுக்கு என்ன முடிவு சொல்றது?'' என்றார்.

அம்மாவும், பையனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, முத்து தான் பேசினார்... ''சரவணா... முதல்ல உன் முடிவ சொல்லு.''

''அப்பா, என் முடிவு உங்களுக்கும், உங்க முடிவு எனக்கும் தெரியும். எப்பவும் போல ரெண்டு இடமுமே முடியப் போறதில்ல.''

இடைமறித்தாள் சுந்தரி. ''யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுங்களேன்.''

''அப்பா... உங்களுக்கு பணம், நகை தான் முக்கியமா தெரியுது. உங்க காலத்தில், நம்ம சொந்தக்காரங்க எல்லாரும், சொந்தமா தொழில் செஞ்சுக்கிட்டிருந்தாங்க. ஏதாவது தொழில் நஷ்டம்ன்னா உதவுறதுக்கு நகைய எதிர்பார்த்தாங்க. இப்போ நானோ சாப்ட்வேர் இன்ஜினியர். ஏன், என்னை இன்ஜினியரிங் படிக்க வைச்சிங்க... என்னயும் உங்க தொழில்ல இறக்கி இருக்கலாம்ல. உங்க பையன், பெரிய வேலையில, நல்ல நெலமையில இருக்கணும்ன்னு ஆசப்பட்டீங்க. அதே மாதிரி நானும், நான் கட்டிக்கப் போறவ அழகை விட, பணத்தை விட, அவ பழகும் விதத்தையும், பாந்தத்தையும் பார்க்கிறேன்.

''உங்களுக்கு முப்பது பவுன்றது குறைவா இருக்கலாம். ஆனா, அந்தப் பொண்ணு, இன்னும் ரெண்டு வருஷத்தில, அதை அவ சம்பளத்திலே வாங்கிடுவா. ஆனா, அதே வேகத்தில், என் தலை பாதி வழுக்கை ஆயிடும். ஆல்பத்திலும், வீடியோவிலும் பாக்க எனக்கே வெட்கமா இருக்கும். என் கூட வேலை பாக்கிறவங்க மாதிரி, என் சம்பளத்தில் வீடு, காருன்னு வாங்கணும்ன்னு ஆசைப்படுறேன் அது தப்பா... அந்தப் பொண்ணு, நம் தலைமுறைகளை வளர்க்கிற கர்ப்ப விருட்சம் மட்டுமில்லப்பா, நான் எதை கேட்டாலும் தரக் கூடிய கற்பக விருட்சமாகவும் இருப்பா. அந்தப் பொண்ணுக்கு சேமிக்கிற பழக்கம் இருக்கு; பொறுப்பா இருக்கிற பொண்ணு, நல்லபடியா குடும்பத்தை பாத்துக்குவா. நீங்க, உங்க அடுத்த தலைமுறையை உயர்த்த நெனைக்கிற மாதிரி, நான், என்னோட அடுத்த தலைமுறையை உயர்த்த நினைக்குறேன். அதுக்கு திவ்யா தான் சரியா இருப்பா. அந்தப் பொண்ணுன்னா எனக்கு சம்மதம்ப்பா.''

பிடிவாதமாக இருந்த முத்து, முதன் முதலாக யோசிக்க ஆரம்பித்தார்.

'இவ்வளவு நாளா நாம ஏன் நம்ம பையன் இடத்திலிருந்து யோசிக்கல...' என நினைத்தவர், எழுந்து முன் வாசல் திண்ணையில் அமர்ந்து, அரைமணி நேரம் ஏதேதோ சிந்தனை செய்து, பின், எழுந்து உள்ளே வந்தார். சுந்தரியும், சரவணனும், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தனர்.

''சரிப்பா சரவணா... நான் பொண்ணு வீட்டுக்கு போன் போட்டு, 'சம்மதம்'ன்னு சொல்லிடுறேன்,'' என சொல்லவும், அம்மாவும், மகனும் ஆனந்தத்தில் சிரித்தனர்.

''அப்பா... ஒரு நிமிஷம். முதலில் பாத்த அந்த பணக்கார வீட்டுக்கும் போன் செய்து, தகவல் சொல்லிடுங்க. அவங்களும் நம்ம பதில எதிர் பார்த்துக்கிட்டு இருப்பாங்க,'' என்றான்.

''சரிப்பா... அப்படியே செய்றேன்,''

என்றார் முத்து.

பிரபாஸ்ரீ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us