PUBLISHED ON : அக் 01, 2023

உலகின் முதல் குரங்கு, எது தெரியுமா?
ருக் ஷரஜஸ்...
ருக் ஷம் என்றால், மற்றவற்றில் இருந்து மாறுபட்டது. ரஜஸ் என்றால், பதற்றம் அல்லது உணர்ச்சிவசப்படுதல். இந்த இரண்டு குணங்களும் குரங்குகளுக்கு இருப்பது கண்கூடு. குணம் மற்றும் உருவத்தின் அடிப்படையில், முதல் குரங்குக்கு பெயர் சூட்டியவர், பிரம்மா.
ஒருமுறை, ஒரு உயிரைப் படைத்தார், பிரம்மா. அது மனித உடலை ஒத்ததாகவும், முகம் மாறுபட்டதாகவும் இருந்தது.
மனிதனும், மிருகமும் அல்லாமல் இரண்டும் சேர்ந்த இந்த கலவையிடம், 'உனக்கு ருக் ஷரஜஸ் என, பெயரிட்டுள்ளேன். நீ மனம் போனபடி வாழலாம். அப்படி வாழ நாடு, உனக்கு ஏற்றதல்ல. கிஷ்கிந்தை காட்டுக்குச் செல், உன் இஷ்டப்படி வாழலாம்.
'அங்கு பல ராட்சசர்கள் இருக்கின்றனர். அவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு தொல்லை செய்கின்றனர். அவர்களை அழிப்பது, உன் பொறுப்பு. அது மட்டுமல்ல, மனித அவதாரம் எடுத்து, ராமன் என்ற பெயரில் பூலோகம் வர உள்ளார், திருமால். அவர்களுக்கு சேவை செய்வது, உன் வம்சத்தின் பொறுப்பு...' என்றார், பிரம்மா.
காட்டிற்கு வந்தது, ருக் ஷரஜஸ். அங்கிருந்த கிணற்றை எட்டிப் பார்த்த போது, அதன் உருவம், தண்ணீரில் தெரிந்தது. தான் செய்வதையெல்லாம் அதுவும் செய்தது. இதைக் கண்டு, தன்னைப் போலவே உருவமுள்ள அந்த உயிரை, ராட்சசன் எனக் கருதி, அதன் மீது பாய்ந்தது.
தண்ணீரில் குதித்ததும், அது ஒரு பெண்ணாக மாறி விட்டது. தன் உருவத்தை பார்த்து ஆச்சரியப்பட்டது. தன் கண்ணில் பட்ட சூரியனையும், இந்திரனையும் எண்ணி வணங்கியது. இந்திரனின் அருளால் வாலி என்ற குரங்கும், சூரியன் அருளால் சுக்ரீவன் என்ற குரங்கும் பிறந்தனர்.
இந்த குரங்குகளின் கீழ் அனுமன், அங்கதன், நளன் மற்றும் நீலன் போன்ற குரங்குகளும் பணி செய்தன. ராமனுக்காக சீதையைத் தேடும் பொறுப்பை ஏற்றன. இதனால், இன்று வரை குரங்குகளை, வணக்கத்துக்குரிய வானரங்களாக தான் பார்க்கின்றனர்.
தைரியசாலியாக இருந்தாலும், ராவணனையே அசைத்துப் பார்த்தவன், வாலி. ஆனால், அவன் சுக்ரீவனின் மனைவியைக் கவர்ந்தவன் என்பதால், அவனை யாரும் கொண்டாடுவதில்லை.
சுக்ரீவன், அனுமன் ஆகியோர், ராம சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால், அவர்களுக்கு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அனுமனுக்கு ஓராயிரம் கோவில்கள் உள்ளன. ஆனால், சுக்ரீவனுக்கு சில கோவில்கள் தான் உள்ளன.
தமிழகத்தில், சுக்ரீவனும் அனுமனும் இணைந்த சன்னிதி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ளது. இதை, 108 சிவாலயம் என்பர்.
இந்தக் கோவிலில், 108 சிவலிங்கங்கள் ஒரே மண்டபத்தில் உள்ளது, விசேஷம். கும்பகோணம்- - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ., துாரத்தில் இவ்வூர் உள்ளது.
தி. செல்லப்பா
