PUBLISHED ON : மார் 10, 2013

'நான் ரெடி...'
ரெடிமேட் கடையில் சேல்ஸ் - கேர்ளாக பணிபுரிகிறேன். ஒருநாள், நாலைந்து இளவட்டங்கள், டிரஸ் எடுக்க வந்தனர். அவர்கள் கேட்ட டிரஸ்சை காட்டுவதற்காக, அவர்களில் முதலில் வந்தவரை, 'இந்த பக்கம் வாங்கண்ணா...' என்றேன். உடனே, அவருடைய நண்பர்களில் ஒருவர், 'டேய்... நீ எனக்கு மாப்பிள்ளை... உன்னை இவங்க அண்ணன்னு சொன்னதால, எனக்கு இவங்க என்ன முறை வேண்டும் தெரியுமா?' என்று கிண்டல் செய்ய... 'ஓ மச்சி... நீ அப்படி வர்றியா...' என்று சிரித்தனர் நண்பர்கள்.
இயற்கையிலேயே பயந்த சுபாவம் உடைய எனக்கு, எப்படித்தான் அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை. 'டேய்... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி... இப்பவே ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் கல்யாணம் முடிச்சுக்குவோம். என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறியா? இல்ல... தனிக்குடித்தனம் வைக்கிற அளவுக்கு தைரியம் இருந்தா சொல்லு, இப்பவே வர்றேன்...'ன்னு ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான், அவனுடன் வந்த அத்தனை பேரும், ஏன்... என் சக ஊழியர்களும், வாயடைத்து நின்றனர், இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று!
பிரச்னை சிக்கலாகி விட்டதை உணர்ந்து, நான், அண்ணா என்று அழைத்தவர், கிண்டல் செய்த நண்பனை, என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அவனும், என்னிடம் மன்னிப்புக் கேட்டு, திரும்பி பார்க்காமல் சென்றான். நான் இந்த போடு போடவில்லை என்றால், கிண்டல் தொடர்ந்து கொண்டே போயிருக்கும். குடும்ப வறுமை காரணமாக, வேலைக்கு வருகிறோம். எங்களை போன்றவர்களை, கிள்ளு கீரையாக நினைத்து, கிண்டல் செய்பவர்கள், இனியாவது, கவுரவமாக நடத்தாவிட்டாலும், கிண்டல் செய்யாமலாவது இருப்பரா!
— வி.கன்னிகா, சென்னை.
இரண்டு கட்டணம் ஏன்?
'மிகக் குறைந்த வட்டியில் நகைக்கடன்!' என்று, அனைத்து வங்கிகளும் விளம்பரம் செய்கின்றன. வட்டி விகிதம் என்னவோ, அடகுக் கடைகளை விடக் குறைவாகத்தான் உள்ளன. ஆனால், வங்கிகள் விதிக்கும் மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்தால், அடகுக்கடையே பரவாயில்லை எனத் தோன்றும்.
வங்கிகளில் அடகு வைக்கும் அன்று, 'பிராசசிங் பீஸ்' என்று ஒரு தொகையும், அன்றே, நகை மதிப்பீட்டாளர் கட்டணம் என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர். இது தவிர, நகையை மீட்கும் அன்று, 'குளோசிங் சார்ஜ்' என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர்.
வட்டி விகிதம் குறைவு என பறைசாற்றும் வங்கிகள், இந்த கட்டணங்களை பற்றி, எந்த வித அறிவிப்பும் செய்வதில்லை. மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய நாட்டுடைமை வங்கிகளும் இதற்கு விலக்கு அல்ல. பாமரர்கள் இந்த கட்டணங்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. நகை மதிப்பீட்டாளர் தான் நகைகளை ஆய்வு செய்கிறார். அவர் பீஸ் தவிர, 'பிராசசிங் பீஸ்' யாருக்காக? வங்கிகளுக்கே வெளிச்சம்!
— த.கண்ணன், கோவை.
இளைய தலைமுறையின் போக்கு...
தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், 'வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.
— ஆர்.தேவி, சென்னை.
