PUBLISHED ON : ஜன 29, 2017

குழந்தையை தானம் கொடுத்த தாய்!
சமீபத்தில், பேருந்தில் பயணித்த போது நடந்த சம்பவம் இது: அன்று, பேருந்தில், நிற்கக் கூட இடம் இல்லாத அளவிற்கு, கூட்டம் அதிகமாக இருந்தது. பிறந்து, 15 நாட்களே ஆன குழந்தையை கையில் ஏந்தியவாறு என் அருகில் வந்து நின்ற ஒரு பெண், உட்கார இடமில்லாததால் கையிலிருந்த பெண் குழந்தையை வைத்திருக்கும்படி கூறி, என்னிடம் தந்தாள்; நானும் வாங்கிக் கொண்டேன்.
சிறிது நேரத்தில், நான் இறங்கும் இடம் வந்ததும், குழந்தையை, அப்பெண்ணிடம் கொடுத்தேன்; அவள் வாங்க மறுத்தாள். நான் அதிர்ந்த போது, 'எனக்கு, ரெண்டு வயசுல ஒரு பையன் இருக்கான். அதனால, இந்த குழந்தை வேணாம்; நீங்களே வைச்சுக்கங்க. நீங்க வாங்காம போனாலும், இந்தக் குழந்தைய நான் ஆசிரமத்தில் தான் கொண்டு போய் போடுவேன்...' என்று கூறினாள்.
பேருந்தில் இருந்த பயணிகள், அவளை திட்டி, என்னிடமிருந்து குழந்தையை வாங்கி, அவளிடம் கொடுத்தனர். பார்ப்பதற்கு மிக அழகாகவும், துறுதுறுவென்றும் இருந்தது, அக்குழந்தை. குழந்தை இல்லாமல் வாடும் எத்தனையோ பேர் இருக்க, இப்படியும் சிலர் இருப்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
— எஸ்.தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
இருபது வீடுகள் உள்ள எங்கள் காலனிக்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், புதிதாக குடி வந்தார். காலனியில், பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் சில பிள்ளைகள் திணறுவதை பார்த்து, அவர்களுக்கு உதவ எண்ணினார்.
அதனால், தன் சொந்த செலவில், ஆறு ஆட்டுக் குட்டிகளை வாங்கி வந்து, காலனியின் ஒரு ஓரமாக கட்டி, 'சமையலுக்கு காய் நறுக்கும் போது, வீணாகும் கழிவுகளையும், சொத்தைக் காய்களையும், அரிசி மற்றும் பருப்பு கலைந்த தண்ணீரையும் கீழே கொட்டி வீணாக்காமல், இந்த ஆடுகளுக்கு இரையாக போடுங்கள்...' என்று, அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு, அனைவரும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தோம். குட்டிகள் வேகமாக வளர்ந்து, ஏழு குட்டிகளை, ஈன்றது. சமீபத்தில், எட்டு ஆடுகளையும், ஆட்டுப் புளுக்கைகளையும் இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் விற்ற ஆசிரியர், அப்பணத்தை, காலனியில் உள்ள மாணவர்களின் படிப்பு செலவுக்கு கொடுத்தார்.
மேலும், அப்பணத்தின் ஒரு பகுதியை, பொங்கல் செலவுக்காக, ஒவ்வொரு வீட்டுக்கும், தலா, 2,000 ரூபாய் கொடுத்து, அசத்தினார்.
மேலும், காலனியில், சிறு அறையை கட்டி, அதில், பிளாஸ்டிக் மற்றும் இரும்புக் கழிவுகளை போடச் செய்தார். ஓராண்டு முடிவதற்குள், அந்த அறை முழுவதுமாக நிறைந்தது.
அக்கழிவுகளை, பல ஆயிரம் ரூபாய்க்கு விற்றார். தற்போது, எங்கள் காலனியில் வசிப்போருக்கு பண தட்டுப்பாடு வெகுவாக குறைந்து விட்டது.
'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதை, அந்த ஆசிரியர் எங்களுக்கு புரிய வைத்தார். எங்கள் காலனியை பார்த்து, பக்கத்து காலனிகளிலும், இந்த முறையை பின்பற்ற துவங்கி விட்டனர்.
— அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
பெட்ரோல் திருட்டு!
விழுப்புரத்தை சேர்ந்த நான், கடலூரில் பணியாற்றும் அரசு அலுவலகத்திற்கு, தினமும், ரயிலில் வந்து செல்கிறேன்.
ரயிலில் இருந்து இறங்கியவுடன், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருக்கும் என் பைக்கில் ஏறி, 5 கி.மீ., தூரத்தில் இருக்கும் என் அலுவலகத்திற்கு சென்று விடுவேன். மாலையில், வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்துவேன். இது, என் தினப்படி வழக்கம்.
வெள்ளிக்கிழமை பைக்கை நிறுத்தும் போது, 5 லிட்டர் பெட்ரோல் போட்டிருப்பேன். ஆனால், திங்கள், செவ்வாய், புதனில், 'டேங்க்' காலியாகி விடும். பைக்கில் எதுவும் பழுதோ என மெக்கானிக்கிடம் போனேன். அவர், வண்டியை சோதித்தார்.
'வண்டியில் பழுதில்லை; வாகன நிறுத்துமிடத்தில், பெட்ரோல் திருடுகின்றனர் என நினைக்கிறேன். திங்கள், புதன், வெள்ளி என ஒரு நாள் விட்டு ஒரு நாள், 1 லிட்டர் போடுங்கள். பெட்ரோல் திருடு போகாது...' என, யோசனை கொடுத்தார்.
வாசகர்களே... வாகன நிறுத்துமிடங்களில், வாகனங்களை நிறுத்தும் போது, புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
— பா.தீனதயாளன், விழுப்புரம்.
