தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குப்பை!

குப்பை!

குப்பை!


PUBLISHED ON : ஜூன் 06, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீடு மிக சுத்தமாக இருக்க வேண்டும். எதற்கும், யாருக்கும் அதை விட்டுக் கொடுக்க மாட்டாள், விசாலம்.

'பெருக்கி, துடைச்சு... பெருக்கி துடைச்சு வீடே ஒண்ணுமில்லாம போயிடப் போறது... போதும், மணிக்கொரு தடவ விளக்குமாறும் கையுமா அலையாத...' என, சொல்லிக் கொண்டிருப்பாள், மாமியார்.

'அத்த... உங்களையா வேலை வாங்கறேன். நான்தானே செய்யப் போறேன். இப்படி துடைச்சே, வீட்டுல பல்லி, கரப்பான் பூச்சிங்க அலையுது. இதுல கொசு வேற... அதுக்கு கூட, என்னை பார்த்தா இளக்காரமாதான் இருக்கு போல... என்னத்தான் கடிக்குது...' பதிலுக்கு அலுத்துக் கொள்வாள், விசாலம்.

அம்மாவிடம் கண்ணை காண்பிப்பான். பிறகு, தனியாக, 'விடும்மா... உனக்கு வேளா வேளைக்கு சாப்பாடு போடறால்ல... இதெல்லாம் சிலரோட தனிப்பட்ட குணம்...' என்பான், ராஜாராம்.

தினமும் ஐந்து தடவையாக இருந்தது. இப்போது, மூன்று வேளையாக குறைந்தது தான் முன்னேற்றம்.

அன்று மதியம், சேரில் அமர்ந்து, வார இதழை படித்துக் கொண்டிருந்தார், ராஜாராம்.

கையில் விளக்குமாறுடன், ''காலை கொஞ்சம் தள்ளி வைங்க,'' என்றாள், விசாலம்.

''ஓ... மதிய வேளை...'' என்று, கால்களை துாக்கிக் கொண்டார்.

'ம்... இந்த விளக்குமாறும் நானும் ஒண்ணு... உழைச்சுகிட்டே இருக்கணும். சீ... என்ன ஜென்மமோ...' என, தனக்கு தானே சொல்லிக் கொண்டாள், விசாலம்.

எந்த பிரச்னையும் இல்லாமல், விசாலம் இப்படி புலம்பியதால், அதற்கான காரணம் புரிந்தது, ராஜாராமிற்கு.

அன்று சனிக்கிழமை.

இவர் வீட்டிற்கு அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு, ஒன்றுவிட்ட தங்கை, பெரியப்பா மகள் கமலா, வருவது வழக்கம். வேண்டுதல் முடிய மூன்று வருஷமாகும். பெரிய வேண்டுதலாம்... வேண்டுதல் முடித்து, ஊருக்கு திரும்ப நேரமாகும் என்பதால், அன்று மட்டும் ராஜாராம் வீட்டில் தங்குவாள்.

கமலா தங்குவது, விசாலத்திற்கு பிடிக்கவில்லை.

''என்ன... அவ ஊர்ல இல்லாத பெருமாள் கோவிலா... ஜோசியர் சொன்னாருன்னு, இந்த கோவிலுக்கு வந்து என் உயிர வாங்குறா... ம்... மூன்று வருஷம்,'' ராஜாராமிடம் வெளிப்படையாகவே கோபப்பட்டாள்.

''இரவு டிபன், காலையில காபி. ஒரு ஓரமா படுத்துக்க போறா... மூஞ்சில அடிச்சா மாதிரி, 'வராதே'ன்னு சொல்லவா முடியும். உனக்கு, தாலி முடிஞ்சவ; நாத்தனார்... பொறுத்துக்க, விசாலம்... ஜாடமாடையா பேசிடாத... அப்புறம், சாமி குத்தமாயிடப் போறது,'' கெஞ்சாத குறையாக, மனைவியை சமாதானப் படுத்தினார்.

ஆனாலும், விசாலத்தின் கோபம் குறையவில்லை.

அதை, வேறு விதமாக காட்டியே தீருவாள். மவுனமாகவே இருப்பார், ராஜாராம்.

ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும், சங்கடமாகவே கழிந்தது.

பெருக்கி, 'மாப்' போட்டு துடைத்தாள், விசாலம்.

அன்றிரவு...

வழக்கம்போல், பிரசாதத்துடன் வந்தாள், கமலா.

''வாம்மா,'' என்று, பொய் சிரிப்புடன் வரவேற்றார், ராஜாராம்.

தலைவலி தைலத்தை பூசிக் கொண்டாள், விசாலம்.

கொஞ்ச நேரம் அரட்டை அடித்து, உப்புமா சாப்பிட்டாள், கமலா.

மகளிடம், ''ஏண்டி, நீயும் வந்து தின்னுட்டு போ,'' என்றாள், விசாலம்.

அறையில் இருந்த மகளுக்கு காதில் விழாததால், அவள் வரவில்லை.

கதவை தட்டினாள்.

எழுந்து, ஜன்னல் வழியே மகளை பார்த்தார், ராஜாராம்.

மும்முரமாக தன் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வந்த கோபத்தை அடக்கி, ஜன்னல் வழியே மகளை, கடுமையான குரலில் அழைத்தார்.

திடுக்கிட்டவள், அப்பாவை பார்த்ததும், அவசர அவசரமாக மொபைலை, 'ஆப்' செய்து, கதவை திறந்தாள்.

''ஏண்டி கழுதை... என்ன பண்ணிகிட்டிருந்த?'' கோபமானாள், விசாலம்.

அப்பாவை பார்த்தபடியே டைனிங் டேபிளுக்கு சென்றாள்.

சாப்பிட்ட பின், துாங்க தன் அறைக்கு சென்றார், ராஜாராம். கமலாவும் படுக்கப் போனாள். இரவு கடமையாக வீட்டை பெருக்க ஆரம்பித்தாள், விசாலம்.

'எப்படித்தான் இவளால் முடிகிறதோ...' என்று மனதுக்குள் நினைத்தாள், கமலா.

மற்றொரு அறையிலிருந்து வெளிப்பட்ட, மருமகளிடம், ''உனக்கு, மூடி வெச்சிருக்கேன். சாப்பிடு,'' என்றாள், விசாலம்.

''சரி அத்த,'' என, சாப்பிட்டு, பாத்திரத்தை கழுவி வைத்தாள்.

விசாலத்தின் மகன், பிரபு, வழக்கம்போல், சனிக்கிழமை, 'பார்ட்டி' முடித்து, 'லேட்'டாக தள்ளாடி வருவது, வழக்கமானது தான்.

அனைவரும் படுத்த பின், வாசல் கதவை தட்டினான், பிரபு.

அதற்காக காத்திருந்தது போல், ஓடி வந்து கதவை திறந்தாள், அவனது மனைவி.

போதையுடன், தட்டுத்தடுமாறி, மனைவியின் தோளில் சாய்ந்தவாறு உள்ளே நுழைந்தான், பிரபு.

அறை ஜன்னலிலிருந்து வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார், ராஜாராம். இதுவரை, கமலா பார்க்கவில்லை. எதேச்சையாக கண் விழித்து பார்த்து விடுவாளோ என்ற கவலை.

பிரபுவிடமும், மருமகளிடமும் சொல்லிப் பார்த்தார்.

'மாமா... அவர் பார்க்குற வேலைக்கு, இது தவிர்க்க முடியாதாம். வாரத்துல ஒருநாள் தானே... என்கிட்ட, 'பர்மிஷன்' வாங்கி தான், 'பார்ட்டி'ல கலந்துக்குறாரு...' என்ற மருமகளின் ஆதரவு குரல், அவரை திகைக்க வைத்தது.

'விடுங்க... அவனாச்சு... அவன் பொண்டாட்டி ஆச்சு... தோளுக்கு மேல வளர்ந்துட்டான்...' வேறு வழியின்றி, விட்டொழித்தாள், விசாலம்.

மறுநாள் காலை...

கமலா எழுந்திருக்கும் முன்... அவள் படுக்கையில், சுட சுட காத்திருந்தது, காபி.

'குடிச்சிட்டு உடனே கிளம்பு...' என்று, சொல்வது போல் இருக்க... உடனே கிளம்பினாள், கமலா.

அவள் சென்றவுடன் முதல் வேலையாக, வீட்டை பெருக்க ஆரம்பித்தாள், விசாலம்.

துாக்கமின்றி சீக்கிரமே எழுந்த ராஜாராமனும், புத்தகத்தை எடுத்து, புரட்ட ஆரம்பித்தார்.

''ஏங்க, ஒரு, 'வாக்யூம் கிளினர்' வாங்குங்கன்னு எத்தனை நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன். எனக்கு வேலை குறையுமில்ல?'' கேட்டாள், விசாலம்.

சிரித்தார், ராஜாராம்.

''ஏன் சிரிக்கறீங்க?''

''ம்... குப்பை குப்பைன்னு நினைச்சுகிட்டே இருக்க... அது ஒழிக்கற காரியமா, மறுபடியும் சேரத்தான போகுது.''

''அதுக்காக?'' கோபமானாள்.

''சேரத்தான விட்டிருக்கோம்... அதுவும் மக்காத குப்பையா... அருவருப்பா இருக்கே,'' என்றார், ராஜாராம்.

கணவன் எதிரில் வந்து, ''என்ன கோபம் உங்களுக்கு... ஏன் உளர்றீங்க?'' என்றாள், அதிகார தோரணையில்.

''சரி... உனக்கு புரியும்படியாவே சொல்றேன்... இந்த வயசுல கதவ சாத்திட்டு மகளுக்கு, அப்படி என்ன போன்ல பார்வை... சரி, வயசுக் கோளாறுன்னாலும், 'லிமிட்' இல்ல... கோபப்பட்டதும், ஓடி வந்து கதவ திறக்கறா... 'பார்ட்டி'ன்னு தள்ளாடிக்கிட்டு வர்றான், பிரபு...

''இதுக்கு, 'சப்போர்ட்' வேற... பச்சையா சொன்னா குடிகாரன்... வேற வழியில்லேன்னு காது குத்தறான்... எல்லாத்தையும் வெளிப்படையா போட்டு உடைக்கற மாதிரி பேசறியே... ஏன், இதையும் நீ கேளேன். சரி... உன்னையே எடுத்துக்க... கமலா, என் ஒன்றுவிட்ட தங்கை. வேண்டுதலுக்காக வர்றா, இரவு தங்கிட்டு போயிடறா... அதுல என்ன, நம்ப சொத்து குடி மூழ்கிடப் போவுது...

''நீ, அந்த காய் காயற... ஏன், அவ்வளவு தனி மனித வெறுப்ப கொட்டற... இதெல்லாம் நம் மனசுல உள்ள குப்பைங்க... அத ஒழிக்கலேன்னா, மக்காத குப்பையா மாறி, வியாதி தான் வரும்.

''ஆனாலும் நீ, வீட்ட பெருக்கு பெருக்குன்னு பெருக்கற... அது தேவையில்லேன்னு சொல்லல... ஒரு அளவோட நிறுத்திக்க... இல்ல, உன் இஷ்டம் போல ராஜாங்கம் நடத்து,'' என்று, பொருமினார், ராஜாராம்.

யோசிக்க யோசிக்க, உண்மை புரிந்தது. வள்ளுவன் சொன்ன அகத்துாய்மையும் முக்கியம் தான் என, உணர ஆரம்பித்தாள், விசாலம்.

அன்று முதல், சுத்தம் சுத்தம் என்று அலட்டிக் கொள்வதில்லை, விசாலம். மகளை கண்காணித்தாள்; கமலாவிடம், கனிவு காட்டினாள்; பிரபு பற்றியும் கவலைப்பட்டாள்.

கீதா சீனிவாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us