
பா - கே
லென்ஸ் மாமா வீடு.
மாமி, எங்கோ வெளியில் சென்றிருக்க, உ.பா., பாட்டில், பூப்போட்ட கிளாஸ் மற்றும் நொறுக்குத் தீனி சகிதம், வீட்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி, 65 இன்ச், 'டிவி'யில், கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார், மாமா. இடையிடையே, வேறு சானலில் ஒளிபரப்பான, கால்பந்து போட்டியையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
'மாமி, வீட்டில் இல்லையென்றால், குஷியாகி விடுவீரே, மாமா. அது சரி, ஒன்று கிரிக்கெட் மேட்ச் பாருங்க அல்லது கால்பந்து போட்டியை பாருங்க. எதற்கு இப்படி அங்கும், இங்கும் தாவிக் கொண்டிருக்கிறீர்கள்?' என்றேன்.
'அட போப்பா... இதெல்லாம் ஒரு மேட்சா? அந்த காலத்தில், கிரிக்கெட் மேட்ச் என்றால், கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் எல்லாம் ஆடுவாங்க பாரு... அதே போல, கால்பந்து போட்டி என்றால், பிரேசில் வீரர், பீலே மற்றும் அர்ஜென்டினா வீரரான, மரடோனா ஆடிய போட்டிகளை பார்க்கணும்... சும்மா, விறுவிறுப்பா இருக்கும்...' என்றார்.
'அப்புறம் எதற்கு மேட்ச் பார்த்துட்டு... வேறு சானலில், சினிமா, பாட்டு, நகைச்சுவை காட்சிகளைப் பார்க்கலாமே...' என்றேன்.
தன் அருகில் இருந்த, வறுத்த வேர்க்கடலை இருந்த தட்டை என் பக்கம் நகர்த்தியவர், 'மேட்ச் பார்க்கிறதை விட, மைதானத்தின் ஓரத்தில், நான்கு பக்கங்களிலும், கவர்ச்சி உடை அணிந்து, கையில், கொத்து கொத்தாக ஜிகினா பேப்பர்களை வைத்து, நடனம் ஆடி, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துறாங்களே... அவர்களின் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்...' என்றார்.
இதைக் கேட்டதும், 'அடச்சே...' என்றாகி விட்டது. 'மாமி வரட்டும் சொல்றேன்...' என்றாலும், ரசிகர்களின் ஆரவாரமே வீரர்களை உற்சாகப்படுத்துமே! நடன பெண்கள் வேறு எதற்கு என்ற சந்தேகம் எழ, மாமாவிடம் கேட்டேன்.
'அப்படி கேளு...' என்றவர், கிளாசில் இருந்த உ.பா.,வை வாயில் கவிழ்த்து கொண்டு, கூற ஆரம்பித்தார்:
'சியர் கேர்ள்ஸ்' என்பது, தற்போது, கிரிக்கெட் விளையாட்டில் அழைக்கப்படும் பெயர். ஆனால், முதன் முதலில், இவர்களை, 'சியர் லீடர்' என்று அழைத்தனர்.
அமெரிக்காவில், பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது தான், முதன் முதலில், 'சியர் லீடர்' குழு உருவானது.
அப்போது, ஆண்கள் தான், வீரர்களை உற்சாகம் ஊட்டும் வகையில், ஆடியும், பாடியும் ஊக்கப்படுத்தினர்.
அமெரிக்காவில் உள்ள, மின்னசோட்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த, ஜானி கேம்பல் என்பவர் தான் முதல், 'சியர் லீடராக' பணியாற்றினார். அதன்பின், அவருடன் பல மாணவர்கள் சேர்ந்து, 'சியர் லீடராக' செயல்பட்டனர்.
நாளடைவில், கல்லுாரிகளில், விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. பெரிய பெரிய விளையாட்டு மைதானங்கள் உருவாயின. கால்பந்து விளையாட்டுக்கு, இணையாக, 'சியர் லீடர்' வளர்ச்சியும்; விளையாட்டு ரசிகர்களின் வருகையும் அதிகரித்தது.
காலப்போக்கில், 'சியர் லீடராக' இருந்த ஆண்கள், விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் காட்டினர். எனவே, பெண்கள், 'சியர் லீடர்'களாக உருவெடுத்தனர்.
இப்போது, 'சியர் லீடர்ஸ்' எல்லாம், 'சியர் கேர்ள்ஸ்' என்றாகி விட்டது. அதிலும், கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது, அதிகம் இடம்பிடிக்கின்றனர்.
கடந்த, 2007ம் ஆண்டு, தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற, 'டி-20' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதுதான், இவர்கள் முதன் முதலில் அறிமுகமாயினர்.
அதன்பின், 2008ம் ஆண்டு நடைபெற்ற, 'ஐ.பி.எல்., - டி20' கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றதிலிருந்து, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.
முதலில், உற்சாக குரல் எழுப்புவதில் துவங்கி, போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு பார்வையாளர்களை நோக்கி, கையசைப்பது, துள்ளிக் குதித்து சாகசங்கள் செய்தல் என, இவர்களின் செயல்பாடுகள் மாற்றமடைந்து வருகிறது.
'சியர் கேர்ள்ஸ்' ஆக பணிபுரிய, நடனத் திறமை மட்டும் போதாது. அழகும், வசீகரமான தோற்றமும் தேவை. இதில் சேர்வதற்கு, தனிப்பட்ட முறையில் நிறைய பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். தடகள பயிற்சி, வளைவுத்தன்மை, கட்டுக்கோப்பான உடல் தகுதி ஆகியவை முக்கிய தகுதிகள்.
மேலும், 'டம்ப்ளிங்' எனப்படும், கீழே விழுந்து, உருண்டு, சடாரென்று எழுந்து நிற்றல், குதித்தல் மற்றும் சின்ன சின்ன, 'ஸ்டன்ட்'கள் செய்வதில் சிறந்தவராக இருக்க வேண்டும். இதைத்தவிர, குழுபணி, தொலை தொடர்பு திறன், தலைமை பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவையும், முக்கிய தகுதிகளாக பார்க்கப்படுகிறது.
இவர்கள் குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. பல நாட்டை சேர்ந்தவர்கள், 'சியர் கேர்ள்ஸ்' ஆக பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- என்று முடித்தார், லென்ஸ் மாமா.
விளையாட்டு போட்டிகள் சொதப்பலாக இருந்தாலும், பெண்களின் நடனம், வீரர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தும், என்று நினைத்து கொண்டேன்.
ப
தாயம் விளையாட்டில் மறைந்திருக்கும் தமிழர்களின் அறிவியல் பூர்வமான பண்பாட்டையும், வியக்கும் வாழ்வியல் முறைகளை பற்றி அறிந்தால், ஆச்சரியப்படுவீர்கள்.
தாயகட்டையில் விழும் எண்களின் மகிமை! அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்.
தாயம் உருட்டும் போது ஒன்று - 1 தாயம், 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா?
தாயம் 1 - சூரியனை குறிக்கும். சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்.
ஐந்தாம் எண் - பஞ்ச பூதங்களை குறிக்கும். (நீர், நிலம், காற்று, ஆகாயம், பூமி.)
ஆறாம் எண் - மற்ற ஆறு கிரகங்களையும் சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் ஆறு பருவங்களையும், இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி காலங்களை குறிக்கும்.
பன்னிரண்டாம் எண் - 12 ராசிகளையும், 12 மாதங்களையும் குறிக்கும்.
இந்த, 1, 5, 6, 12க்கு உரிய மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்.
அதேபோல், 2ம் எண், இரண்டு அயனங்களை, உத்ராயனம், தட்சிணாயனம், 3ம் எண், முக்குண வேளையை, சாத்வீகம், ராஜஸம், தாமஸம் ஆகியவற்றை குறிக்கும்.
நாலாம் எண், நான்கு யோகங்களை, அமிர்த, சித்த, மரண மற்றும் பிரபலாரிஷ்ட ஆகியவற்றை குறிக்கும்.
எனவே, இந்த எண்களில், 1, 5, 6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால், அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாய கட்டையை உருட்டுகின்றனர்.
இனிமேல் தாயம் விளையாடும் போது நம் முன்னோர்களையும், அவர்களின் அபூர்வமான அறிவியல் சார்ந்த விஷயங்களையும் எண்ணி பெருமைக்கொள்வோம்!
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

