
பி.மோகன்ராஜு, சென்னை: மற்ற பத்திரிகைகள், 10க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், அந்துமணி மட்டும் எட்டு கேள்விகளுக்கு பதில் அளிப்பது ஏன்?
பொறுப்பாசிரியர், அவ்வளவு தான் இடம் கொடுக்கிறார்!
* ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம், திருச்சி: ஒரு தமிழர், பிரதமராக ஆகும் நாள், எப்போது வரும்?
அவர் முதலில், ஹிந்தி கற்க வேண்டும்!
மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: 'ஆளும் கட்சியாகவே இருந்தாலும், அனுமதியின்றி போராட்டம் நடத்தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?
அவர்களுக்கு மட்டும் உடனடியாக அனுமதி கொடுக்கப்பட்டு விடுகிறதே!
எம்.சுப்பையா, கோவை: நீங்கள் எழுதும் பேனாவை, எத்தனை ஆண்டுகளாக வைத்திருக்கிறீர்கள்?
கம்ப்யூட்டரில் தானே, பதில் எழுதுகிறேன்!
எல்.மூர்த்தி, கோவை: 'தினமலர்' பத்திரிகையின் லட்சியம் என்ன?
உண்மையின் உரைகல்! நம் பத்திரிகையின் விளம்பர, 'போஸ்டரில்' தினமும் அச்சாகிறது!
* முகம்மது, கீழக்கரை: 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்துவது தேவையற்றது...' என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கூறியிருப்பது பற்றி...
உண்மை தானே! மின்னணு ஓட்டுப்பதிவில் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லையே! உலக நாடுகளும் நம் தேர்தல் முறையைப் பார்த்து வியக்கின்றன!
ப்ரீத்தா ரங்கசாமி, சென்னை: தமிழகம் முழுவதும், கல்வி மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் பொங்கலுக்கு ஒன்பது நாட்கள், அரசு விடுமுறை தேவையா?
தேவையே இல்லை! மனித உழைப்பு நாட்கள் மற்றும் பள்ளிக் கல்வி நாட்கள் அனைத்தும் வீணடிக்கப்படுகின்றன!
டி.பசுபதி, கோவை: இன்று, ஒரு மனிதனின் நேர விழுங்கி என, எதைக் கூறலாம்?
வெட்டிப் பேச்சும், சமூக வலைதளங்களும் தான்