
* எஸ்.என்.பானுமதி, மதுரை: 'அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன், கட்டாய பணி நீக்கம் செய்யப்படுவர்...' என, உ.பி., முதல்வர், யோகி அறிவித்திருப்பதை போல், தமிழகத்தில் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?
அப்படி நடந்தால், பல அரசு அலுவலகங்களில், அதிகாரிகளே இருக்கமாட்டார்கள்!
கே.இந்து குமரப்பன், விழுப்புரம்: அரசியலிலிருந்து ஓய்வு பெறும் அரசியல்வாதிக்கும், சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் நடிகருக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது?
அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும் எவ்வளவு வயதானாலும், சம்பாதிக்க வழி தேடுவரே தவிர, ஓய்வு பெற மாட்டார்கள். இதுவே, இந்த இரண்டு பிரிவினருக்கும் எப்போதும் உள்ள ஒற்றுமை!
பெ.லோகநாதன், கொம்பாடியூர், தர்மபுரி மாவட்டம்: சம்பளம் வாங்குவது, சம்பளம் கொடுப்பது - எது மனதிற்கு திருப்தி அளிக்கும் என நினைக்கிறீர்கள்?
சம்பளம் வாங்குபவராக துவங்கி, சம்பளம் கொடுப்பவராக வளர்வது தான், ஒருவருக்கு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும்; மேலும் பலர் வளர, உத்வேகத்தைக் கொடுக்கும்!
த.நேரு, வெண்கரும்பூர்: 'தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டுமே ஒன்று தான்...' என, செங்கோட்டையன் கூறுகிறாரே...
'ஓ... இவர் மட்டும் அண்டார்டிகாவில் ஏதோ ஒரு குட்டையில் மூழ்கியவரோ...' என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
வி.சி.கிருஷ்ணரத்னம், சென்னை: மதுரையில், த.வெ.க., தலைவர் விஜயின், 'கட் அவுட்' வைக்கப்பட்டு, அதனிடமிருந்து கட்சி நிர்வாகிகள், தங்களுக்கான கட்சி அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டனராமே...
இனி, ஆட்சி நாற்காலியில், 'கட் அவுட்' அமரலாம்; நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை, 'கட் அவுட்'டே நடத்தும். விஜயை ஆட்டுவிக்கும் கூட்டத்தில், இந்த, 'கட் அவுட்' ஐடியா நபரும் சேர்வார்... இப்படிப்பட்ட கூத்தில், விஜய் கட்சியினரோ, 'விஜய் அரை மணி நேரம் பேசினால், ஒரு மாதம் அதிர்கிறது...' என சொல்லி, விஜய்க்கு, 'ஐஸ்' வைத்து அலப்பறை செய்கின்றனர்!
எஸ்.தியாகராஜன், மகாபலிபுரம்: தன் மகன் எனவும் பார்க்காமல், 'நான் வயிறு எரிந்து சொல்கிறேன்... அன்புமணியின் அரசியல் பயணம் முடிந்து விட்டது...' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடுமையாக பேசியுள்ளாரே...
தன் மகன் பற்றி, பா.ம.க., ராமதாஸ், வீட்டுக்குள்ளே என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். ஆனால், அரசியல் களத்தில், இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது மாண்பு இல்லை என்பது, வயது முதிர்ந்த ராமதாசுக்கு புரியாமல் போனது ஏனோ!
* சிவா, நெல்லை: 'பிரதமர் மோடி, பீஹாரில் நிதிஷ் குமாரை எப்படி முதல்வர் ஆக்கினாரோ, அதே போல, தமிழகத்தில் பழனிசாமியை முதல்வர் ஆக்குவார்...' என, திண்டுக்கல் சீனிவாசன், எந்த நம்பிக்கையில் கூறுகிறார்?
பீஹாரில், நிதிஷ்குமார் தன், 'ஐக்கிய ஜனதா தளம்' கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்; அனைத்து உறுப்பினர்களையும், பல ஜாதி மக்களையும் அரவணைத்துச் செல்கிறார். அதனால், பிரதமர் மோடி, அவரையே பீஹார் முதல்வராக நியமித்து விட்டார். ஆனால், தமிழகத்தில், அ.தி.மு.க., நிலைமை அப்படி இல்லை. திண்டுக்கல் சீனிவாசன், தன் கனவில் தோன்றியதை வெளியில் சொல்லி இருக்கலாம்!
மு.நாகூர், ராமநாதபுரம்: 'ரயில்களில், கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்; மீறினால், மூன்று ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கப்படும்...' என, ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது குறித்து...
மிகச் சரியான எச்சரிக்கை தான் இது. உணர்ச்சி வசப்பட்டு, ஆபத்தை நாம் விலைக்கு வாங்க வேண்டாமே! அதேசமயம், 'ஆன்லைனில்' டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் ரயில்வே, காப்பீடு தொகை கொடுக்கிறது. இதையும் கவனத்தில் கொண்டு, டிக்கெட் வாங்குவோர் அனைவருக்கும், ரயில்வே துறை, 'இன்ஷ்யூரன்ஸ்' ஏற்பாடு செய்ய வேண்டும்!

