PUBLISHED ON : மார் 15, 2026

கடந்த, 2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, கட்சிகளிடையே கடும் போட்டி இருந்தது. சென்னையில், கொளத்துார் தொகுதியில் நின்றார், மு.க.ஸ்டாலின். இழுபறியாக இருந்தது வாக்கு எண்ணிக்கை.
இரவு, 10:00 மணிக்கு மேல், 2,423 வாக்குகள் வித்தியாசத்தில், மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து, விஜயகாந்தின் வீடு தேடி வந்தது.
அரசியலில் அவருக்கு முன்னரே களம் இறங்கி, எண்ணற்ற மக்கள் பிரச்னைகளில் போர்க்கோலம் பூண்ட பல்வேறு கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் கிடைக்காத பெருமை, கட்சி துவங்கி, ஐந்தே ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவர் ஆன பெருமை, விஜயகாந்தையே சாரும்.
ச ட்டசபையில், விஜயகாந்தின் உற்சாகமும், பூரிப்பும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. யார் தவறு செய்தாலும், தட்டிக் கேட்பது, விஜயகாந்தின் பிறவி குணம். கோட்டையிலும் அது எதிரொலித்தது.
பிப்ரவரி 1, 2012 சட்டப்பேரவைக் கூட்டம். தே.மு.தி.க.,வை சேர்ந்த உறுப்பினர், சந்திரகுமார். விலைவாசி உயர்வு குறித்து வினா எழுப்பினார். அதற்கு ஏற்கனவே பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக, சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளித்தார்.
சந்திரகுமாருக்கு, அதில் திருப்தி இல்லை. 'உண்மையிலேயே துணிச்சல் இருந்திருந்தால், கட்டண உயர்வுக்கு பின், உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருக்க வேண்டியது தானே...' என்றார்.
அவரது உரை, அப்போதைய முதல்வர், ஜெயலலிதாவை உசுப்பி விட்டது. ஆத்திரத்தோடு மைக்கை பிடித்தார், ஜெயலலிதா...
'இங்கு பேசிய மாண்புமிகு உறுப்பினர், சந்திரகுமார் ஒரு சவால் விடுத்திருக்கிறார். அவருக்கு பதில் சவால் நான் விடுகிறேன். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில், நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு திராணி இருந்தால், தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பேருந்துக் கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்திய பிறகு, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனித்து நின்று மகத்தான வெற்றியை நாங்கள் அடைவோம். அதை, நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் முடியுமா என்பதை யோசித்து விட்டு பேசுங்கள்...' என்று பேசினார்.
ஜெயலலிதாவின் அனல் கக்கும் ஆவேச சவாலைத் தாங்கிக் கொள்ள முடியாமல், எரிமலையாக வெடித்தார், விஜயகாந்த்...
'கடந்த, 2006 முதல் 2011 வரையில் நடந்த இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க., ஒன்றில்கூட ஜெயிக்கல. இன்னைக்கு வந்து, சங்கரன்கோவில் இடைத்தேர்தல்ல ஜெயிப்போம்ன்னு சவால் விடறீங்க. ஆளுங்கட்சியா இருந்தா சட்டமன்ற இடைத்தேர்தல்ல எப்படி ஜெயிப்பீங்கன்னு கடந்த காலங்கள்லயும் தெரியும். இப்பவும், நீங்க எப்படி ஜெயிக்கப் போறீங்கன்னு தெரியும்...' என, முகத்தில் அறைந்தாற்போல், முதல்வருக்கு பதிலடி கொடுத்தார்.
விஜயகாந்தை இடைமறித்து, மலர்ந்த முகத்துடன் மிகுந்த பூரிப்போடு, 'தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்...' என, ஜெயலலிதா கூறியதும், 'நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் தாருங்கள். பெண்ணாகரத்தில் ஏன் தோற்றீர்கள் என்பதை சொல்லுங்கள்...' என்று கடும் சீற்றத்துடன் கேட்டார், விஜயகாந்த்.
அ.தி.மு.க., உறுப்பினர்கள் அத்தனை பேரும், வழக்கம்போல் அவையில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். அதுவரை, ஜெயலலிதாவிடம், எந்த எதிர்க்கட்சி தலைவரும், இடியோசையாக நேருக்கு நேர் மோதியதாக சரித்திரம் இல்லை.
அப்போது, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஒருவர், தகாத வார்த்தைகளை பேசினார். அவரை, முதல்வர் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழவில்லை. சொல் பொறுக்காத விஜயகாந்த், நாக்கை மடித்து, கடும் கோபத்துடன், 'ஏய்' என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்.
விஜயகாந்த் தன்னை நோக்கி அவமரியாதையாக பேசி விட்டதாக, தவறான புரிதலில் ஆவேசம் கொண்டார், ஜெயலலிதா.
'இவர்களுடன் கூட்டணி சேர்ந்து, அ.தி.மு.க., தேர்தலை சந்திக்க வேண்டியதாகிவிட்டதே என்று நினைக்கும் போது, நான் வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்...' என்றார், ஜெயலலிதா.
முதல்வரின் முகத்திலும், உரையிலும், விஜயகாந்த் குறித்த அசூயை வெளிப்பட்டது. முதல்வரைக் கண்டித்தும், ஆளுங்கட்சி உறுப்பினர்களை எதிர்த்தும், தே.மு.தி.க., குரல் உயர்த்தியது. தே.மு.தி.க., உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதிரடியாக உண்மையை பகிரங்கப்படுத்தும் முயற்சியில் சட்டமன்றத்தில் முரசு கொட்டினார், விஜயகாந்த். தே.மு.தி.க.,வை முழுதாக நசுக்கும் நடவடிக்கைகளை நோக்கி, அ.தி.மு.க.,வும் நகரத் துவங்கியது.
கழகத்தின் முக்கிய பிரமுகர், முன்னாள் ஆர்.கே.நகர், எம்.எல்.ஏ., வெற்றிவேல், விஜயகாந்தின் நண்பர், ராவுத்தருக்கு வேண்டப்பட்டவர். ராவுத்தர் -ஜெயலலிதா சந்திப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார், வெற்றிவேல். 2012ல், ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில், தன்னை ஓர் அங்கத்தினராக இணைத்துக் கொண்டார், அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்.
விஜயகாந்த் தனி இயக்கம் துவங்கியதில், ராவுத்தருக்கு சம்மதமில்லை. கருப்பையா மூப்பனாரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர், ராவுத்தர். மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பித்த போது உடனிருந்தவர்.
'நீ புதுசா எதுவும், 'கட்சி' ஆரம்பிக்காதே. உன்னாலே சமாளிக்க முடியாது. பேசாம, அ.தி.மு.க.,வுல அம்மாவோடு போய் சேர்ந்திடு...' என, முன்பு ஒரு முறை ஆலோசனை சொன்னவர், ராவுத்தர்.
விஜயகாந்த் அதைக் காது கொடுத்து கேட்கவில்லை. முதல்வரிடம் ஆசிபெற்ற உற்சாகத்தில், 'அம்மா ஆணையிட்டால், 40 ஆண்டுகால நண்பர், விஜயகாந்தை எதிர்த்து, அ.தி.மு.க., மேடைகளில் பேசுவேன்...' என்றும் நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்தார், ராவுத்தர்.
விஜயகாந்த் பிரிவுக்கு பின், ராவுத்தருக்கு மிகப்பெரிய தொழில் நெருக்கடி ஏற்பட்டது. அதைச் சீர்செய்யவே அவர் அ.தி.மு.க.,வில் இணைந்ததாக சொன்னவர்களும் உண்டு.
விஜயகாந்தின் மிக நெருங்கிய திரையுலக சகாக்கள், இயக்குனர்கள், ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, வசனகர்த்தா லியாகத் அலிகான், நடிகர்கள் தியாகு மற்றும் ராதாரவி என, ஏற்கனவே ஏராளமானோர், அம்மாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தனர். அந்த வரிசையில், ராவுத்தரும் போய் சேர்ந்தார்.
பிறகு என்ன நடந்தது?
- தொடரும் - பா. தீனதயாளன்
நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073

