PUBLISHED ON : ஜூலை 20, 2025

யாருமே உன்னிடம்
அன்பு காட்டவில்லையா...
கவலைப்படாதே
நீ எல்லாரிடமும் அன்பு காட்டு!
யாருமே உன்னை
நேசிக்கவில்லையா...
கவலைப்படாதே
எல்லாரையும் நீ நேசி!
யாருமே உன்னை
மதிக்கவில்லையா?
கவலைப்படாதே
பிறரை நீ மதி!
எல்லாரும் உன்னை
வெறுக்கின்றனரா...
கவலைப்படாதே
நீ எல்லாரிடமும்
பாசம் காட்டு!
யாருமே உன்னை
அரவணைக்கவில்லையா...
கவலைப்படாதே
அனைவரையும்
நீ அரவணைத்துக்கொள்!
யாருமே உன்னிடம்
நட்பு பாராட்டவில்லையா...
கவலைப்படாதே
நீ எல்லாருடனும் நட்பு கொள்!
யாருமே உன்னை
பாராட்டவில்லையா...
கவலைப்படாதே
நீ எல்லாரையும் பாராட்டு!
யாருமே உன்
கண்ணீரைத் துடைக்க
முன்வரவில்லையா...
கவலைப்படாதே
எல்லாரின் கண்ணீரையும்
உன் கரங்கள் துடைக்கட்டும்!
யாருமே உன்னை
மனிதனாக எண்ணவில்லையா...
கவலைப்படாதே
நீ எல்லாரையும்
மனிதனாக மதித்திடு!
வாழ்க்கையே
அஸ்தமித்து விட்டது
என வாடாதே...
எதையும் சாதிக்கும்
மன உறுதி
உன்னிடம் உள்ளது!
வாழ்வில்
எதை இழந்தாலும்
பரவாயில்லை - ஆனால்,
நம்பிக்கையை மட்டும்
இழந்து விடாதே!
மனிதா! முயற்சி செய்
விடாமல் முயற்சி செய்
வானம் தொட்டுவிடும்
துாரம் தான்
உழைப்பால் வெற்றியின்
சிகரத்தை எட்டிப்பிடி!
—தங்க. சங்கரபாண்டியன், சென்னை.
தொடர்புக்கு: 92832-32370