PUBLISHED ON : ஏப் 26, 2026

வன்னி மரத்தின் மலர்கள், காய் மற்றும் மரப்பட்டை அனைத்தும் மனிதனுக்கு பெரும் பயன்கள் தந்து, உடல் ஆரோக்கியத்துக்கு உறுதுணையாக விளங்குகிறது.
திருக்கோவில்களில் முன்னோர் வைத்த மரங்கள் யாவும் தனிச்சிறப்பு மிக்கவை. அந்த வகையில், அற்புத வளங்கள் நிறைந்த வன்னி மரத்தை சுற்றி வர, அதன் காற்று பட்டு, உடல் மற்றும் மனக்கோளாறுகள் யாவும் நீங்கும். வன்னி மரக்காற்றில் தொடர்ந்து இருந்தால், சுவாசக் கோளாறுகள் சீராகி, ரத்தம் துாய்மையாகி உடல் ஆரோக்கியம் பெறும்.
வன்னி மரப்பட்டையை தண்ணீரில் இட்டு, காய்ச்சி குடித்துவர, மழலைச் செல்வம் உண்டாகும். வன்னி காய்களை துாளாக்கி சாப்பிட்டு வர, பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் நீங்கும். ஆண்களின், உயிரணுக்கள் வளமாகி, குழந்தைப்பேறு கிடைக்கும்.
வன்னி மர இலைகளை, வீடுகளில் பூஜையறையில் வைத்திருந்தால், காரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. போருக்கு செல்லும் வீரர்கள், போர்க்களம் புகும்முன், வன்னி மர இலைகளை பிரசாதமாக பெற்று செல்வர் என்பதை, சரித்திர நுால்களில் இருந்து அறியலாம்.
வன்னி இலைகளை அரைத்து, காயங்களின் மீது வைத்து கட்டிவர, உடனே காயங்கள் ஆறி விடும். இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறியதும், வாய் கொப்பளிக்க, பல் வலி பாதிப்புகள் நீங்கும். அந்நீரை பருகிவர, நரம்பு தளர்ச்சி வியாதிகள் அகலும்.
வன்னி மரக்காய்களை நிழலில் உலர்த்தி, பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் கலந்து சாப்பிட்டு வர, சளி கரையும்.
வன்னிமரப்பட்டையை காய்ச்சி குடிக்க, உடல் செரிமான கோளாறுகளை சரி செய்யும். அல்சர் பாதிப்புகளை சரியாக்கும்.
உடல் தசைகளில் ஏற்படும் வீக்கம், கட்டிகளை கரைக்க, பட்டையை அரைத்து பூச, பலன் கிடைக்கும்.
வன்னி மரப்பட்டைகளில் உருவாகும் பிசினை சேகரித்து, நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பின்னர் அதில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து பருகி வர, பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும்.
இதேபோல, வன்னி மர இலைகளையோ, பட்டையையோ எடுத்து மருந்தாக உபயோகிக்க வாய்ப்புகள் இல்லாமல் இருப்போர், தினமும், வன்னி மரத்தின் அருகே சற்று நேரம் அமர்ந்து வந்தால் போதும்; நல்ல ஆரோக்கியமாக வாழலாம்.
தொகுப்பு : அமுதா அசோக்ராஜா
