sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/பரிகாரம்!

பரிகாரம்!

பரிகாரம்!


PUBLISHED ON : பிப் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்த ஐந்துமாடி கட்டடத்தின் முன், படகுபோல வந்து நின்ற சொகுசு காரை, சீருடை அணிந்த, டிரைவர் கார் கதவை திறந்துவிட, கம்பீரமாக இறங்கினார், 'கீர்த்தி எக்ஸ்போர்ட் கம்பெனி'யின் மேனேஜிங் டைரக்டர், ராம்குமார்.

பணியாளர்களின் காலை வணக்கங்களை, தலையசைப்பு மற்றும் புன்னகையுடன் ஏற்று, தன் அறைக்குள் நுழைத்து, இருக்கையில் அமர்ந்தார். ராம்குமார். அனுமதி கேட்டு உள்ளே வந்த அவரின், காரியதரிசி, தயாளன், அவர் கையெழுத்திட வேண்டிய கோப்புகளை அவர் முன் வைத்தார்.

சாதாரண நிலையிலிருந்து, உழைப்பால் படிப்படியாக உயர்ந்து, இந்த இடத்திற்கு வந்தவர், ராம்குமார்.

அவர் மகளின் பெயர், கீர்த்தி. அவள் பெயரில் தான் நிறுவனத்தை துவங்கினார். அவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டாலும், அந்த ஏக்கம் தன் மகளை பாதிக்காத வண்ணம், அன்பையும். பாசத்தையும் கொட்டி வளர்க்கிறார். படிப்பு முடிந்து, அப்பாவுக்கு உதவியாக நிறுவனத்தையும் கவனித்துக் கொள்கிறாள். 25 வயதான, கீர்த்தி.

'நான் நேத்து சொன்னேனே... அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க, தயாளன்?” என்று கேட்டார். ராம்குமார். தலையை நிமிர்த்தாமல் கோப்புகளில் கையெழுத்திட்டபடியே!

'கீர்த்தி மேடத்தை, கம்பெனியின் எம்.டியாக வருவதற்கு, யாரோட அனுமதி வேண்டும். சார்? தாராளமா செய்யலாம்,'' என்றார் பணிவாக, தயாளன்.

“என்னோட மகளாகவே இருந்தாலும், உடனே இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுக்க, கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கு. இருந்தாலும், எனக்கும் வயசாகுதுல்ல. அவளை இந்த சீட்ல உட்கார வச்சிட்டு, உடனே, நல்ல இடமாப் பார்த்து. கல்யாணத்தை முடிக்கணும். கம்பெனியில் அவளோட ஈடுபாடு எப்படி இருக்கு? தயாளன்.'

'சொன்னா தப்பா நினைச்சுக்காதீங்க சார். அவங்க உங்களை விடவே, திறமையா கஸ்டமர்களை, 'ஹேண்டில்' பண்றாங்க. வெளிநாட்டு, 'ஆர்டர்'களை, ஈஸியா கவர் பண்றாங்க!' என்றார், தயானன்.

'வெரிகுட். அதுதான் எனக்கு வேணும். சீக்கிரமா அவளை முதலாளியாக்கும் வேலைகளை பார்க்கறேன்,' என்றார். ராம்குமார்.

அப்போது, 'எக்ஸ்க்யூஸ் மீ,' என்றபடியே மெல்லிய தென்றலாய் அறைக்குள் வந்தாள். கீர்த்தி.

'வாங்க மேடம், உங்களைப் பற்றித்தான் அப்பா பேசிட்டிருந்தார்.' என்றார் மலர்ச்சியுடன், தயாளன்.

'ஏன், என்னை வேலையை விட்டு துரத்தப்போறாரா?' என்றாள், குறும்பாக

'இல்லம்மா. நீங்க தான் உங்க அப்பாவை துரத்தப்போறீங்க,' என்றார், தயாளன்.

'புரியலையே,' என்றாள். குழப்பமாக கீர்த்தி. 'அப்பாவோட எம்.டி., சேரில் உங்களை உட்கார வச்சா, அப்புறம் அவர் வீட்டுக்குத் தானேம்மா போகணும்?'' என்றார், தயாளன்.

சட்டென்று, அவள் அப்பாவை திரும்பி பார்க்க, 'ஆமாம்மா. எனக்கும் வயசாகுது. 'ரெஸ்ட்' வேணும். அதே மாதிரி உனக்கும் கல்யாண வயசாகுது. கம்பெனியோட முழுப் பொறுப்பையும் நீ தான் எத்துக்கணும். அதோட, சீக்கிரம் ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணமும் செஞ்சுக்கணும்,'என்றார் மகளை நேராகப் பார்த்து, ராம்குமார்.

இரண்டு செய்திகளும், கீர்த்தியை நேரடியாகத் தாக்க, 'எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்கப்பா,' என்றாள்.

“ஒரு வாரமே எடுத்துக்க, ஆனா, நல்ல முடிவா சொல்லும்மா,'' என்றார், ராம்குமார். இருவரையும் அமைதியாக பார்த்துவிட்டு, புன்னகையுடன் வெளியேறினாள், கீர்த்தி.

நான்கு நாட்கள் சென்றன. கீர்த்தியின் ஒப்புதலோடு, சட்டப்படி அவளை கம்பெனியின் முதலாளியாக அமர வைத்தார்.

ராம்குமார். அதைக் கொண்டாடும் வகையில், அன்று இரவு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

ஹோட்டலின் புல்வெளியில் குடும்பத்துடன் நிறுவன ஊழியர்களும், நண்பர்களுமாக சுமார், 150 பேர் கூடியிருந்தனர். கீர்த்திக்கு வாழ்த்துகளையும், பூங்கொத்துகளையும் கொடுத்து, தங்களது புதிய முதலாளிக்கு மரியாதை செய்தனர். ஹோட்டல் சிப்பந்திகள் பரபரப்பாக இங்குமங்கும் அலைந்தபடி உணவுகளை பரிமாறினர். அனைவரும் கையில் தட்டுகளுடன், சாப்பிட்டபடி மற்றவர்களிடம் அரட்டையடித்தனர்.

'எக்ஸ்க்யூஸ் மீ மேடம், ஒரு சப்பாத்தி வைக்கட்டுமா?' என்று அவளிடம் வந்து, பவ்யமாக கேட்டான், அந்த ஹோட்டல் சிப்பந்தி.

'வேணாம்பா,'என்றபடியே திரும்பி அவனை உற்றுப் பார்த்தவன், சற்று முகம் மாறினாள்! அவளுக்குள் சில குழப்பமான எண்ணங்கள் ஓடின. 'அவனா?அசப்பில் அப்படித்தான் இருக்கிறான்...' என்று தயங்கியபடியே, “உங்க பேரென்ன?” என்று அவனிடம் கேட்டாள்.

'சஞ்சய்,' என்றான், அவன்.

அவனேதான்! சட்டென்று, கீர்த்தியின் காலடியில் பூமி நழுவியது. தட்டை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, நண்ணீரை எடுத்துக் குடித்தாள். தன் அப்பாவிடம், 'கொஞ்சம் தலை வலிக்குதுப்பா, நான் வீட்டுக்குப் போறேன். நீங்க விருந்தை முடிச்சுட்டு, தயாளன் சாரோட கார்ல வந்துடுங்க,'என்றபடி கிளம்பினாள்.

இவ்வளவு நேரம் கலகலப்பாக இருந்தவளுக்கு, திடீரென்று என்ன ஆனது என, குழம்பினார், ராம்குமார்.

'என்னம்மா ஆச்சு, என்றார் பரிவுடன்.

'அதான் சொன்னனே... தலைவலிப்பா, ஒரு மாத்திரை போட்டுட்டு துாங்கினா சரியாயிடும், என்றவள் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல், காரில் சென்று அமர்ந்தாள்.

டிரைவர் ஓடிவந்து, 'சார் வரலையாம்மா?' என்று கேட்சு, 'அவர் பின்னாடி வருவார். நீங்க வண்டியை எடுங்க,' என்றாள்.

கார் கிளம்பிச் சென்றது.

மனதுக்குள் எண்ணங்கள் அலையடிக்க. படுக்கையில் கண்மூடிப் படுத்திருந்தாள், கீர்த்தி. பழைய நினைவுகள், அவள் மனதில் விரிந்தன; கண்களில் கண்ணீர் வழிந்தது.

சிறிது நேரத்தில், ஒரு முடிவுக்கு வந்தவளைப்போல எழுந்து, கண்களைத் துடைத்துக்கொண்டவள், வாஷ் பேஸினுக்குச் சென்று, முகம் அலம்பினாள். இப்போது அவள் முகத்தில், ஒரு முடிவும், தெளிவும் தெரிந்தது.

அடுத்த நாள் காலை, ராம்குமாரிடம். “எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்குப்பா. இன்னைக்கு நீங்களே கம்பெனிக்கு போய்டுங்களேன், ப்ளீஸ்,' என்றாள். கீர்த்தி.

“புது முதலாளி, வேலைக்கு சேர்ந்த ரெண்டாவது நாளே லீவு போடறீங்களே,' என்றார், குறும்புடன்.

அவருக்கு பதில் ஏதும் கூறாமல், கார் சாவியை எடுத்துக்கொண்டு நடந்தாள்.

முன்தினம் விருந்து நடந்த, அந்த ஹோட்டலின், 'பார்க்கிங்'கில் காரை நிறுத்தி, நேராக மேனேஜர் அறைக்குச் சென்றாள்,

அவரிடம் தன், 'விசிட்டிங் கார்டை' காட்டியதும், 'குட் மார்னிங் மேடம். நேத்து 'நைட்' நீங்க தானே, 'பங்ஷன்' வச்சிருந்தீங்க?' என்றார்.

'ஆமாம் சார், சஞ்சய்ன்னு ஒருத்தர், இங்கே வெயிட்டரா இருக்கார், அவரை நான் பார்க்கணுமே,' என்றாள்.

'ஏதாவது பிரச்னையா?' என்றார், மேனேஜர்,

'அதெல்லாம் இல்லேங்க. தெரிஞ்ச பையன், நேத்து, 'பங்ஷன்'ல பார்த்தேன். கூட்டத்தில் பேச முடியல அதான்,' என்றாள்.

“வெயிட் பண்ணுங்க மேடம்,'' என, இன்டர்காமில் யாருடனோ பேசிவிட்டு, 'அவருக்கு நைட் ஷிப்ட், வீட்டுக்குப் போயிட்டார். அட்ரஸ் வேணா தரேன்,' என்றவர், கம்ப்யூட்டரைத் தட்டி, ஒரு சிறிய பேப்பரில் அவனுடைய முகவரியை குறித்து கொடுத்தார்.

அந்த முகவரி இருந்த ஏரியா, நகரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்தது. வீட்டைக் கண்டுபிடிப்பதில், அவளுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை. மிகவும் சாதாரணமான சிறிய வீடு. எதிரில் இருந்த கடையில் விசாரித்ததில், சஞ்சய் இருப்பது வாடகை வீடு என்றும், 'லோன்' கட்ட முடியலேன்னு. அவங்க அம்மா இருந்த வீட்டை வித்திட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், இங்கு குடி வந்தனர் என்ற தகவலையும், சேகரித்துக்கொண்டு, தன் அலுவலகத்திற்கு திரும்பினாள்.

நேராக தன் அறைக்குள் நுழைந்தவள், 'அப்பா. நம்ம ஆபீஸ்ல வேலை ஏதாவது காலி இருக்கா?' என்று தன் அப்பாவிடம் கேட்டாள்.

அவர், 'இல்லைம்மா. எல்லா சீட்லயும் ஆள் இருக்காங்க,' என்றதும் சற்று ஏமாற்றமடைந்தாள்.

சற்று யோசித்த ராம்குமார், “இரும்மா, 'டெஸ்பாட்ஜ்'ல இருக்கும் விக்னேஷ், சொந்த, 'பிசினஸ்' செய்யப்போவதால, ராஜினாமா செய்யறதா சொன்னார்,' என்றார்.

அதைக் கேட்டதும் முகம் மலர்ந்தாள், கீர்த்தி.

'அப்போ, அந்த வேலையை எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு கொடுக்கணும்பா.”

'கீர்த்தி, யாரும்மா அது?”

“எல்லாம் நம்ம பேமிலிக்கு தெரிஞ்ச பையன்தான், அப்பா,' என்றாள். பெருமூச்சுடன்.

பின்னர், ''அவனோட 'அட்ரஸ்' தரேன், நாளைக்கு, தயாளன் சாரை காரை எடுத்துட்டுப்போய், அவனைக் கூட்டிட்டு வரச்சொல்லுங்க,' என்றாள், கீர்த்தி.

“கார் வச்சுக் கூட்டிட்டு வர்ற அளவுக்கு, அவ்வளவு வேண்டிய பையனா, கீர்த்தி,' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

'வேண்டியவனோ வேண்டாதவனோ... அவனை கார்ல கூட்டிட்டு வர்றது தான் பொருத்தமா இருக்கும்.' என்ற மகளை புதிராக பார்த்தார், ராம்குமார்.

அடுத்த நாள், ராம்குமாரின் சொகுசு காரில், தயாளனுடன் வந்து இறங்கினான், சஞ்சய். எதற்காக தன்னை அழைத்து வந்திருக்கின்றனர் என்று புரியாமல்.

அலுவலகத்தில் வரவேற்பு அறையில் வந்து அமர்ந்தான்.

சற்று நேரத்தில் அப்பாவும், மகளும் உள்ளே வர, எழுந்து நின்றான்.

'யாரும்மா இந்தப் பையன், இதுவரைக்கும் நான் இவனைப் பார்த்ததே இல்லையே,' என்றார். சாம்குமார்.

'நான் ஐந்தாவதோ, ஆறாவதோ படிக்கும்போது, ஒரு வீட்டில் குடியிருந்தோமே ஞாபகம் இருக்காப்பா?'

'ஆமாம், கீர்த்தி. வசந்தம் நகர்ல இருந்தோம். அங்கே இருக்கும் போது தானே எனக்கு, 'லோன்' கிடைச்சு, 'பிசினஸ்' ஆரம்பிச்சேன்.'

'அங்கே, நமக்கு பக்கத்து வீட்டில், தேவராஜ்ன்னு ஒரு அங்கிள் குடியிருந்தாரே,' என்றாள், கீர்த்தி.

சற்று யோசித்தவர், 'அட ஆமாம்.... அவர்கூட, மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துட்டாரே!' என்றார்.

“கரெக்ட்பா. அவரோட பையன் தான் இந்த, சஞ்சய்,'' என்று, கீர்த்தி சொன்னதும், 'அட, அந்தக் குட்டிப் பையனா இது!” என்று ஆச்சரியப்பட்டார்.

பிறகு. சஞ்சய்யை வரவேற்பு அறையில் உட்கார சொல்லிவிட்டு, அறைக்குள் சென்றனர்.

'தேவராஜ் குடும்பம் அப்போ நல்லா வசதியாத்தானே இருந்தாங்க,” என்று, கீர்த்தியிடம் கூறினார். ராம்குமார்.

“அவங்க குடும்பத்தை பற்றி விசாரிச்சிட்டேன் அப்பா, தேவராஜ் இறந்ததும், 'லோன்' கட்ட முடியலேன்னு, அவங்க அம்மா வீட்டை வித்துட்டாங்களாம்,' என்றவள், அவர் முகத்தை சற்று கூர்ந்து கவனித்தபடி, 'நீங்க மட்டும் நினைச்சிருந்தா, அன்னைக்கு, தேவராஜ் அங்கிளை காப்பாத்தியிருக்கலாம், இல்லையாப்பா?' என்றாள்.

திடுக்கிட்ட ராம்குமார், “நீ என்னம்மா சொல்ற?” என்றார், படபடப்புடன்.

'அப்போ நான் சின்னப் பொண்ணா இருந்தாலும், நடந்ததெல்லாம் நல்லா ஞாபகம் இருக்குப்பா. தேவராஜ் அங்கிள் கீழே விழுந்து உயிருக்குப் போராடிட்டு இருந்தப்போ, நம்ம கார்ல, அவரை ஹாஸ்பிடலுக்கு துாக்கிட்டுப் போங்கன்னு, சஞ்சய்யோட அம்மா உங்ககிட்ட கெஞ்சினாங்க. 'முடியாதும்மா'ன்னு, நீங்க அவங்ககிட்ட சொன்னதை நான் பார்த்தேன். அதுக்குள்ள அம்மா என்னை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போயிட்டாங்க,' என்றவள்,

'அதுக்குப் பரிகாரமாகத்தான், இவனுக்கு நம்ம கம்பெனியிலே வேலை குடுக்கணும்ன்னு முடிவு செஞ்சேன்,' என்று, தீர்க்கமாக கூறினாள் கீர்த்தி.

சில நிமிடங்கள் அமைதியாக, கண்களை மூடி அமர்ந்திருந்த, ராம்குமார், மெதுவாகப் பேசத் துவங்கினார்...

'இந்தப் பையனுக்கு வேலை கொடுப்பதில் உனக்கு திருப்தின்னா, எனக்கும் அது சந்தோஷம் தான். ஆனா, அதுக்கு முன்னே, உண்மையை உனக்கு சொல்லி ஆகணும்மா. அன்னைக்கு காரில் அவரை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போக முடியாதுன்னு, நான் சொன்னது வரைக்கும் தான் உனக்கு தெரியும். அப்புறம் நடந்ததை சொல்றேன்.

'நம்ம காரை, முந்தின நாள் நான் கொண்டு வந்து நிறுத்தும்போதே, பஞ்சர் ஆகியிருந்ததும்மா. அதனால் தான் காரை எடுக்க முடியாதுன்னு சொன்னேன். ஆனா, உடனே போய், 'ஆம்புலன்'ஸை கூட்டிட்டு வந்து, மருத்துவமனையில், 'அட்மிட்' செஞ்சு, அவருக்கு ரத்தமும் நான் தான் கொடுத்தேன். ஆனாலும், தேவராஜை காப்பாத்த முடியல. சம்பவம் நடந்ததுமே, அதைப் பார்த்தா நீ பயந்துடுவேன்னு, பக்கத்திலிருந்த சொந்தக்காரங்க வீட்டில், உன்னையும், அம்மாவையும் ஒரு வாரம் அனுப்பி வச்சிருந்தேன். அதனால, இந்த உண்மையெல்லாம் உனக்குத் தெரியல.' என்றார், ராம்குமார்.

இதைக்கேட்ட கீர்த்தி, 'சாரிப்பா... உண்மை தெரியாம, உங்களை தப்பா நினைச்சுட்டேன்,' என்றாள் கண்ணீருடன்.

'பரவாயில்லம்மா... இப்ப தெரிஞ்சுகிட்டயே, அதுவே போதும்,' என்றவர், இன்டர்காமில் தயாளனை கூப்பிட்டார்.

அவர் உள்ளே வந்ததும், 'வெளியே உட்கார்ந்திருக்காரே, அவர் பேர், சஞ்சய். நம்ம விக்னேஷோட போஸ்ட்டை, அவருக்கு கொடுத்திடுங்க. இப்பவே, 'அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் டைப்' ஆகணும். இது, கீர்த்தி எக்ஸ்போர்ட் எம்.டி., மிஸ் கீர்த்தியோட உத்தரவு,'' என்றார். ராம்குமார்.

- என்.எஸ். பார்த்தசாரதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us